குந்தாணி
6/14/2010 | Author: ஜெயந்தி
சினிமாக்களில் இந்த வார்த்தை வரும்.

இந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால் தமிழ்நாட்டில் அநேகம் சொல்வது குண்டான பெண்களைக் குறிக்கும் சொல் என்பதாகவே இருக்கும்.

ஆனால் குந்தாணியின் உண்மையான பொருள் சவுத் பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு மாதிரி வைத்திருப்பார்கள். நம்ம கிரைண்டரில் வெளியே இருக்கிறதே எவர்சில்வர் பாகம் அதுபோல. ஆனால் குந்தாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாய் அகன்று, கீழே (உரல் அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.

எங்க அம்மா சொல்வாங்க அவங்க சின்ன வயசா இருந்தப்போவெல்லாம் (திண்டுக்கல் பக்கத்தில் கிராமம்) பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பச்சரிசியும், கருப்பட்டியும் வருமாம். இரண்டு பேர் இரவிலேயே மாவிடிக்கத் துவங்கிவிடுவார்களாம். விடியற்காலையில் இரண்டு பேர் களி கிண்டத் தொடங்கிவிடுவார்களாம். அதாவது இரண்டுபேர் என்பது மாற்றி மாற்றி பலர் செய்வார்கள். ஊரில் உள்ளவர்களை யாரும் இந்த வேலை செய்யச் சொல்லி அழைக்க மாட்டார்களாம். இந்த மாதிரி கேள்விப்பட்டால் அவர்களாகவே வந்து வேலை செய்துகொண்டிருப்பார்களாம். காலையில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கருப்பட்டிப் பாகு ஊற்றி கிண்டிய களி போகுமாம்.

எங்கள் குடும்பம் திண்டுக்கல் வந்த பிறகும் பழைய பழக்கம் போகாமல் நீண்ட நாட்கள் கருப்பட்டிக் காப்பிதான். அதுவும் வேம்பார் கருப்பட்டி பெரிய ஓலைக்கொட்டானில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கருப்பட்டிக் காப்பி போடுவது ஒரு கலை. எங்க அம்மா மிகச் சரியாக அதைச் செய்வார்கள். கருப்பட்டியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கும்போது காப்பித்தூள் போட்டு கொதித்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் சூடு ஒரு அளவில் இருக்கும்போது இரண்டையும் கலக்க வேண்டும். ரொம்ப சூடாக இருந்தால் காப்பி திரிந்துவிடும். அப்புறம் எப்படியோ ஜீனி எனப்படும் சர்க்கரைக் காப்பிக்கு மாறிவிட்டது.



குந்தாணியில் தொடங்கி கருப்பட்டிக்கு வந்துவிட்டேன். கிராமங்களில் நெல் குத்தும் உரல் சற்று உயரமாக இருக்கும். பெரிய சைஸ் உடுக்கை போல் இருக்கும். அதன் மேல் இந்த குந்தாணியை வைத்து மாவோ, நெல்லோ, சோளமோ குத்துவார்கள். குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்று சொல்லுவார்கள் (குந்தாணிபோல் இருப்பதால்). இப்போது அந்த உரலும் குந்தாணியும் இருக்கதோ என்னவோ தெரியவில்லை.

வரும் காலங்களில் குந்தாணி என்றாலே குண்டான பெண்கள் என்று ஆகிவிடுமோ?

டிஸ்கி: குந்தாணி படம் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் அனுப்பி உதவவும்.
This entry was posted on 6/14/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

35 comments:

On June 14, 2010 at 11:47 AM , Unknown said...

குந்தாணி நல்ல விளக்கம்..

ஆனால் குந்தாணி என்பது குண்டான பெண்களை மட்டும் குறிபிடுவன அல்ல..
சோம்பேறியான பெண்களையும் குறிப்பிடும் சொல் .

 
On June 14, 2010 at 12:02 PM , சௌந்தர் said...

நல்ல விளக்கம்...

 
On June 14, 2010 at 12:14 PM , தமிழ் அமுதன் said...

குந்தாணி ஏதோ கெட்ட வார்த்தை னு நினைச்சுட்டு இருந்தேன்...!;;)))

 
On June 14, 2010 at 12:22 PM , Chitra said...

மியுசியத்துல தான் போய் பாக்கணும் போல..... நகைச்சுவை இழையோட நல்லா எழுதி இருக்கீங்க.

 
On June 14, 2010 at 1:35 PM , ஜெய்லானி said...

கருப்பட்டி காப்பியை அதை குடித்தவர்க்கு அதன் ருசி தெரியும் ... இப்ப காப்பியே ஃஃபேஷனா மாறிப்போச்சி

 
On June 14, 2010 at 2:52 PM , க.பாலாசி said...

நல்ல பகிர்வு... இன்றுதான் அறிகிறேன்.

 
On June 14, 2010 at 4:12 PM , தமிழ் உதயம் said...

குந்தாணியை பார்த்து இருக்கிறேன். இப்போது தான் விளக்கங்களை தெரிந்து கொண்டேன். என்னை

 
On June 14, 2010 at 4:55 PM , soundr said...

கருப்பட்டி காப்பிய ஞாபகபடுத்திட்டீங்களே.
இப்ப அதுக்கு நா எங்க போவேன்....?

 
On June 14, 2010 at 4:58 PM , ஹுஸைனம்மா said...

கருப்பட்டி விலை ரொம்ப சீப் அப்பல்லாம்; சீனிதான் விலைகூட. இப்ப தலைகீழ்!! கருப்பட்டி காப்பி இப்ப காஸ்ட்லி ஆகிட்டுது!!

குந்தாணி, அரிசி குத்துறது, எல்லாம் எங்க ஊர்லயும் உண்டு. இப்ப பாக்கவே முடியலை!!

அந்தக் கருப்பட்டி டீயில, பாலை, திரிஞ்சுபோகாம சேக்கீறதே ஒரு தனிகலை!! சின்னப்பிள்ளையில, நான் ஊத்துறேன்னு ஆசைப்பட்டு ஊத்தி திரிய வச்சு திட்டும் வாங்கினதுண்டு!!

 
On June 14, 2010 at 6:30 PM , Anonymous said...

குந்தானிக்கு நீங்கள் கொடுத்திருப்பது சரியான விளக்கம். ஆனால் உரல் மேல் வைக்கப்படும் வாயகன்ற கல்லினால் ஆனா அமைப்புக்கு "கலவடை " என்று கூறுவோம்.

 
On June 14, 2010 at 7:22 PM , dheva said...

குந்தாணில ஆரம்பிச்சு எங்கெங்கோ கூட்டிட்டு போய்டீங்களே.... கருப்பட்டி காபி நானும் குடிச்சிருக்கேங்க.... ! இன்னும் சொல்லப்போனால் தென் தமிழக்த்தில் ( நீங்க திண்டுக்கல்லா...சொல்லவே இல்ல..) கருப்பட்டிதான் அதிகம் யூஸ் பண்ணுவாங்க...!

குந்தாணி நான் பாத்திருக்கேன்.. ஆன அதட படத்தைதான் நெட் ல கண்டு பிடிக்க முடியல....தோழி!

மண்ணின் மணத்தோடு ஒரு அழகான பதிவு கொடுத்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்!

 
On June 14, 2010 at 7:24 PM , Ahamed irshad said...

குந்தாணி நல்ல விளக்கம்..

 
On June 14, 2010 at 9:09 PM , அன்புடன் நான் said...

எங்க வீட்டில் 2 குந்தாணி இருந்தது..... ஊருக்கு செல்லும் போது பார்க்கணும்.
உங்க பகிர்வு வரும் தலைமுறைக்கு ”குந்தாணி” தகவலாக கிடைக்கும் .
நன்றி.

 
On June 14, 2010 at 11:12 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா திட்டுவாங்க குந்தாணி குந்தாணியா பிள்ளைக ந்னு.. ;)

ஆமா களி கிண்டறத ஏன் கழியால அடிக்கிறீங்க..

 
On June 16, 2010 at 3:12 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி. செந்தில்!

வருகைக்கு நன்றி சவுந்தர்!

வருகைக்கு நன்றி தமிழ் அமுதன்!
இப்போ தெரிஞ்சுபோச்சா.

 
On June 16, 2010 at 3:15 PM , ஜெயந்தி said...

நன்றி சித்ரா!

நன்றி ஜெய்லானி!
ஆமா. சர்க்கரைக்கு மாறுன புதுசுல சர்க்கரைக்காப்பிய குடிக்கவே முடியல.

நன்றி க.பாலாசி!

 
On June 16, 2010 at 3:22 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் உதயம்!

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி soundr!

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ஹுஸைனம்மா!

 
On June 16, 2010 at 3:25 PM , ஜெயந்தி said...

நன்றி தேவா!
நானும் நெட்ல தேடி தேடிப் பார்த்துட்டு விட்டுட்டேன்.

நன்றி அஹமது இர்ஷாத்!

நன்றி சி.கருணாகரசு!

 
On June 16, 2010 at 3:26 PM , ஜெயந்தி said...

நன்றி முத்துலெட்சுமி!
மாத்திட்டேன்.

 
On June 16, 2010 at 4:20 PM , அபி அப்பா said...

வணக்கம் ஜெயந்தி!

குந்தாணி என்கிற தலைப்பு பார்த்து வந்தேன். நான் ஏற்கனவே குந்தாணி கருப்பி என ஒரு தொடர் ஆரம்பித்து அதை மறந்தே போய்விட்டேன். இது தான் அந்த லிங். நீங்க சொல்வது போல உரல் மறைக்க வைப்பது இல்லை குந்தாணி என்பது. பெரிய சைஸ் மிருதங்கம் மாதிரி இருக்கும். அரிசி, நெல் போன்ற தானியங்கள் சேமித்து வைக்க பயன் படும் ஒரு வஸ்து. மூங்கில் சிம்பு, வைக்கோல் பிரி வைத்து செய்து பின்னர் களிமண் போட்டு உள் பக்கம் வெளி பக்கம் மெழுகி பின்னர் சாணம் இட்டு மெழுகி(கிருமி நாசினி) கீழ் பக்கம் ஒரு ஓட்டை (தானியம் வெளியேற்ற0 மேல் பக்கம் தட்டு மாதிரி மூடி. இதான் குந்தாணி. அந்த லிங் பாருங்க.
http://abiappa.blogspot.com/2009/02/blog-post.html

அது போல் அந்த அனானி நண்பர் சொன்னது போல கலவடை என்பது பானைகள் தரையில் உட்காராது அது உட்கார வைக்க வட்ட வடிவத்தில் அதே மூங்கில் சிம்பினால் செய்யப்பட்ட ஒரு வளையம்.
நன்ரி

அன்புடன்
அபிஅப்பா

 
On June 16, 2010 at 4:55 PM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கு நன்றி அபி அப்பா!
மதுரை, திண்டுக்கல் பக்கம் உரலில் மீது வைப்பதுதான் குந்தாணி. நீங்கள் சொல்வது பெயர் குதிர். நெல்லு, தானியங்கள் கொட்டி வைக்கும் குதிர். இதையும் பெண்களுக்கு சொல்வார்கள். குதுரு மாதிரி வளர்ந்துருக்கையே அறிவிருக்கா என்று திட்டுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பேச்சு வழக்கு.

 
On June 17, 2010 at 8:42 PM , Er.L.C.NATHAN said...

engkal thirunelveli maavattathilum kunthaani entra sol vazhakkil undu. uralin mel vaiththu kuthukira porul keezhe vizhaamal seiyum oru karuvi.uralukkum ,ulakkaikum velaiundu,aanaal kunthaanikuoru velaiym kidaiyaathu, summa uralinmel utkaarnthu kondirukkum! athanaal oru velaiyum seiyaamal irukkm penkalai "kunthaani" endru thittvaarkal!!!

 
On June 18, 2010 at 1:04 PM , Anonymous said...

Where is Vembaar?

 
On June 18, 2010 at 1:10 PM , Anonymous said...

//அதுவும் வேம்பார் கருப்பட்டி பெரிய ஓலைக்கொட்டானில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். //

ஓலைகொட்டானிலேயேதான் கருப்புக்கட்டிகள் விற்பனை செய்வர். அப்பெட்டி என்பது ஒரு சாதாரணப்பெட்டியல்ல. அஃது ஒரு அளவை. measurement. பெயர் 'சிப்பம்'.

ஒரு சிப்பம் கருப்பட்டி, இரு சிப்பம் கருப்பட்டி என்று.

வண்டியில் எத்தனை சிப்பங்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன?

எத்தனை சிப்பங்களுக்கு ஆர்டர் வந்திருக்கிறது?

இது கொள்முதல் வணிகத்தில். கடையில் போய், கிலோகணக்கில்தான் கேட்கவேண்டும்.

ஒரு கிலோ கருப்பட்டி போடப்பா? என்று.

 
On June 18, 2010 at 1:15 PM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Er.L.C.NATHAN!

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி Jo Amalan Rayen Fernando!
ஆமா கருப்பட்டி சிப்பமாகத்தான் வாங்கி வருவார்கள். வேம்பார் என்பது ஒருவகை கருப்பட்டி வகை. எங்கள் ஊர் பக்கத்தில் வேம்பார்பட்டி என்ற ஊர் உண்டு. அதன் பெயரா இல்லை வேறு காரணம் ஏதாவது உண்டா என்று தெரியவில்லை.

 
On June 19, 2010 at 4:43 AM , HVL said...

விளக்கம் நல்லாயிருக்குங்க!

 
On June 21, 2010 at 2:00 PM , Anonymous said...

வேம்பார் என்பது ஒரு சிற்றாரின் பெயர். அஃது எப்போதும் வரண்டுதான் இருக்கும். அடைமழையில் தவிர. தூத்துக்குடிக்கு மிக அருகில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கருப்புக்கட்டிக்கு பேர்போனது. ஒருவேளை வேம்பாரில் செய்த கருப்புக்கட்டி திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கமாக இருந்திருக்கும். எனவே வேம்பார் கருப்புக்கட்டி.

 
On June 21, 2010 at 2:16 PM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கு நன்றி HVL!

// Anonymous said...
வேம்பார் என்பது ஒரு சிற்றாரின் பெயர். அஃது எப்போதும் வரண்டுதான் இருக்கும். அடைமழையில் தவிர. தூத்துக்குடிக்கு மிக அருகில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கருப்புக்கட்டிக்கு பேர்போனது. ஒருவேளை வேம்பாரில் செய்த கருப்புக்கட்டி திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கமாக இருந்திருக்கும். எனவே வேம்பார் கருப்புக்கட்டி.//

கருத்திற்கு நன்றி நண்பரே!
நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம். வேம்பார் கருப்பட்டி தரமாகவும், சுண்ணாம்பு அதிகம் கலக்காமலும் இருக்கும்.

 
On July 4, 2010 at 5:03 PM , ராஜ நடராஜன் said...

ஒரு அக்காவுக்கே பட்டப்பெயரே குந்தாணியக்காதான்:)

கருப்பட்டி காணாமல் போனாலும் போச்சு.கச்சாயங்கூட சாப்பிட முடியலை.

அதுவுமில்லாமல் ஒவ்வொரு பயலும் சர்க்கரையை அள்ளிக்கொட்டுறாங்க இனிப்பு கடையில்.

 
On October 8, 2010 at 6:37 PM , S.GNANASEKAR said...

சகோதரி ஜெயந்தி நமது தமிழ்நாட்டின் பாரம் பரியத்தின் உரல், உலக்கை, அதற்கு குந்தாணியின் உபயோகம் பற்றி தங்களின் இடுகையில் பதிவுசெய்து இருந்தீர்கள் நல்லபதிவு நான் காலம் கடந்து பார்தேன். இப்போ நிறையப் பேருக்கு உரல், உலக்கையே தெரியாதபோது குந்தாணி எப்படி தெரியும். உரல், உலக்கையே கிரமத்தில் இல்லாம்ல் போய்விட்டது. குந்தாணி படம் இல்லை அதுமாதிரி வரைந்து அனுப்பியிருக்கிறேன். உங்கள் மின்ஞ்சல் முகவரிக்கு..
சோ.ஞானசேகர்..
http://www.koovalapuram.blogspot.com/

 
On July 17, 2011 at 12:34 PM , Anonymous said...

ஏற்றுமதியாகும் எசனை "குந்தாணி'
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=3270&ncat=9

 
On July 30, 2012 at 3:25 PM , ஜெயபாலன் said...

சின்ன வயதில் பெண்களின் வளைந்து பருத்த பின்பக்கத்தை குந்தாணி என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தமிழில் அந்த அர்த்ததில் வேறு சொற்கள் நடழிமுறையில் இல்லாததால் நாம் குந்தாணியை பெண்களின் பின்புறத்தைக் குறிக்கும் சொல்லாக மீட்டுக் கொண்டுவரலாம்

 
On October 5, 2012 at 12:07 PM , சிவஹரி said...

பயனுள்ள தகவல் சகோ.!


பகிர்ந்தமைக்கு நன்றி

 
On November 30, 2013 at 9:18 PM , Unknown said...

i want also knw abt tat "kunthani", becz my navtive also vembar..enga vetla kuda iruku.. but eppo ulla children ku.. athu theriya matikuthu..enn childern kita sonna seripangaaaaa... i asw yur al comment.. feel to go village.. thnqqq fr tat...

 
On February 24, 2014 at 11:39 PM , Anonymous said...

உரலும் குந்தாணியும்- பின்வரும் சுட்டியில்:
http://1.bp.blogspot.com/-r8B3eyrEgKU/TziZYv2AdpI/AAAAAAAABmg/Bl2ORKPlH4Q/s320/IMG00249.jpg