ஒருநாள் சுதா சொன்னாள்
"அக்கா எங்க வீட்டுல உங்கள திட்டுறாங்க"
உமாவும் "ஆமாக்கா எங்க வீட்டுலயும் உங்கள திட்டுறாங்க" என்றதும் இன்னொமொரு நாலைந்து பெண்களும் ஆமாம் என்றனர்.
எனக்கு ஒரே கவலையாகிடுச்சு "எதுக்கு என்னய திட்டுறாங்க"
"உங்க கிட்ட வந்தப்பறம் வீட்டுல ரொம்ப எதிர்த்துப் பேசுறமா. அப்பற சாயங்காலம் வீட்டுல வேலை செய்யாம இங்க ஓடி வந்துர்றமா" என்றாள் சுதா.

பின்ன நான் சொல்ற கதை, சொல்லித்தர்ர விஷயங்கள் அப்படி.

கதைகள் எப்படி இருக்கும்னா,
ஒரு ஊர்ல முனியன்னு ஒருத்தன் இருந்தான். அவங்க வீட்டுல ஏதாவது விசேஷம் வந்துச்சுன்னா என்ன செய்வாங்கன்னா எங்க இருந்தாவது ஒரு பூனையை பிடித்து வந்து வீட்டில் ஒரு கூடை போட்டு மூடி வைப்பார்கள். விசேஷம் முடிந்தவுடன் திறந்து விடுவார்கள். அது என்ன பழக்கம், ஏன் அப்படி செய்றீங்கன்னு கேட்டா முனியன் சொல்வாரு எங்க வீட்டு பழக்கம் அதுதான். எங்க தாத்தாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. எங்க அப்பாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. நானும் பரம்பரைப் பழக்கம் மாறாம அதையே செய்றேன்னு சொன்னான்.

விஷயம் என்னன்னா அவங்க தாத்தா வசதியா இருந்தாரு. அவங்க வீட்டுல தானியம் தவசங்கள் மூட்டையாக அடுக்கியிருக்கும். அதுனால வீட்டுல எலித்தொல்லை இருக்கும். எலியைப் பிடிக்க முனியனின் தாத்தா பூனை வளர்த்தார். வீட்டுல ஏதாவது விசேஷம்னா இந்தப் பூனை பாத்திரங்கள் மேலேயெல்லாம் விழுந்து ஓடும். அதுனால அவங்க தாத்தா அந்தப் பூனையைப் பிடித்து கூடை போட்டு மூடி வைத்தார்.

அவங்க அப்பா காலத்துல கொஞ்சம் வசதி குறைந்தது. தானிய தவசமெல்லாம் இல்லாட்டியும் பூனை மட்டும் இருந்தது. அதுனால அதைப் பிடித்து கூடை போட்டு கவிழ்த்து வைத்தார்கள்.

முனியன் வீட்டுல தானியமும் இல்லை, பூனையும் இல்லை. ஆனாலும் பழக்கம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக எங்காவது பூனையைத் தேடிக்கண்டுபிடித்து தூக்கி வந்து கூடை போட்டு கவிழ்த்தார்கள்.

இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை அகற்றணும்.

இப்படி இருக்கும்.

இதுனால வீட்டுல மூடநம்பிக்கைகளை கேள்வி கேக்குறாங்கன்னு ஒரு கோபம், அப்புறம் சாயங்காலம் வீட்டு வேலை செய்யறதில்லன்னு ஒரு கோபம்.

நான் சுதாவிடம் கேட்டேன்,
"ஏன் சுதா உங்க அம்மாவும் வீட்டு வேலையும் செஞ்சுக்கிட்டு பீடியும் ஒட்டுறாங்கல்ல. சாயங்கால நீதான கொஞ்சம் வீட்டு வேல செய்யக்கூடாதா?"
"இல்லக்கா எங்க கம்பெனியில என்னோட வேல ஆமர் அடிக்கிறது. ஹேண்ட் பேக், ஷூ வுலயெல்லாம் பித்தளையில ஒரு ஓட்டை இருக்கும் பாத்துருக்கீங்களா? அதை இரும்புல அடிக்கணும். அந்த இரும்பு எவ்வளவு வெயிட்டா இருக்கும் தெரியுமாக்கா? கையெல்லாம் வலிக்கும். எப்டிக்கா வீட்டுலயும் வேல செய்யறது. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே காப்பியக்குடிச்சிட்டு மூஞ்சியக் கழுவிட்டு இங்க ஓடி வந்திருவம். இங்க வந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷம்" என்றாள்.
அதன் பிறகு நான் பேசவில்லை.

இரண்டு நாள் கழித்து தெருவில் சென்று கொண்டிருந்தேன். எதிரில் பார்த்தால் சுதாவின் அம்மாவும், லலிதாவின் அம்மாவும். அவங்கள பார்த்தவுடனே அவங்க வீட்டுல என்னை திட்டியது ஞாபகம் வந்துவிட்டது. அய்யய்யோ தெருவிலேயே வைத்து என்னை திட்டிவிட்டால் என்ன செய்வது. இப்படியே திரும்பிப் போய் விடலாமா?

அதுக்கெல்லாம் நேரமே இல்லை. அவர்கள் இருவரும் என்னைநோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நடுக்கத்துடன் சரி என்ன ஆனாலும் சரி. பார்த்துக்கலாம்னு அசட்டு தைரியத்துடன் சென்றேன்.

"எங்க கடைக்குப் போறீங்களா?" சுதாவின் அம்மா
"ஆமாங்க. நீங்க" என்றேன்.
"நாங்க ரேஷன்ல அரிசி வாங்கிட்டு வர்றோம்" என்றனர்.
என்னிடம் அவர்கள் பேச்சு மரியாதையாக இருந்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த மரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.

அந்தப் பிள்ளைகளின் சாயங்கால நேரங்களின் சந்தோஷம் என் மூலமாகக் கிடைக்கிறது என்பதை உணர்ந்தபோது என் மேலேயே எனக்கு ஒரு மதிப்பு வந்தது. தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் குறைந்தது.

இதுக்கு நடுவுல எங்க மையம் எங்களை அறியாமலே பேமஸ் ஆகிவிட்டது. எப்படின்னா ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் அதிக நேரம் இயங்கும் மையம். மையத்தைப் பார்வையிட அதிகாரிகள் யாராவது வந்தால் எங்கள் வீட்டுக்கு தைரியமாக அழைத்து வரலாம். ஒருமுறை இதன் டைரக்டர் மிஸ்ரா எங்கள் மையத்திற்கு வந்திருந்தார். அவருடன் சென்னை அறிவியல் இயக்கத்தில் இருந்து ராமானுஜம் மற்றும த.வி.வெங்கடேஸ்வரன் வந்திருந்தனர்.

எங்கள் வீடுதான் சின்னதாயிற்றே. அதனால் அவர்களே ஐடியா பண்ணி எங்கள் வீட்டு ரூமுக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து கீதா வீட்டு ரூம் வரை நீட்டாக ஒரு இடம் இருக்கும். அதில் எதிர் எதிராக இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசி வரை உட்கார்ந்துவிட்டார்கள். மிஸ்ராவிடம் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். பெரும்பாலோர் தோல் ஷாப்களில் வேலை செய்வதை கேட்டறிந்துகொண்டார். அவர்கள் வீடுகளில் பீடி ஒட்டுவதையும் கேட்டறிந்தார்.

அந்தப் பெண்கள்தான் நல்லா பேசுவார்களே. வந்திருந்த எல்லோரையும் அசத்திவிட்டார்கள். மிஸ்ரா திரும்பிச் சென்றபோது எங்கள் மையத்தைப் பாராட்டி குறிப்பு எழுதியிருந்ததாக என் கணவர் சொன்னார். எல்லோரிடமும் பாராட்டிப் பேசியதாகவும் சொன்னார். மிஸ்ரா பாராட்டிய மையம் என்று இப்போதும் கணவர் பெருமைப்படுவார்.

மாவட்ட அளவிலே பெரிய மீட்டிங்குகள் வைப்பார்கள். அதற்கு ஷீலா ராணி சுங்கத, குத்தியா காந்தி போன்றவர்கள் வந்து பேசுவார்கள். அவர்கள் வேறுமாவட்டங்களில் அறிவொளியில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த மீட்டிங்களுக்கு செல்லும்போது செந்தமிழ்ச்செல்வன் மனைவி குணசுந்தரி, முகில் மனைவி ஜோதிமணி, சிலுப்பன் இன்னும் நிறையப்பேரை மறந்துவிட்டேன். சந்திப்போம். நிறையப் பேரின் அறிமுகம் கிடைக்கும்.

இவை இல்லாமல் இளவழகன் பக்கத்தில் உள்ள மையங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சென்று வந்தோம். சில இடங்களுக்கு மைத்ரேயி, ராஜதிலகமும் வருவார்கள். மைத்ரேயி அருமையாக சினிமாப் பாடல்கள் பாடுவாள்.

அவள் மையங்களில் பாடிய சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வருமே ஒரு பாடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசம் உன் வாசம் என் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
அப்புறம் மறுபடியும் படத்தில் வரும் பாடல்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

அவள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் இப்போதும் எங்கே கேட்டாலும் அவள் ஞாபகம் வந்துவிடும்.

ஆறே மாதம் நீங்கள் சொல்லித் தந்தால் போதும் என்று கேட்ட வகுப்பு இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
1992ம் வருடம் துவங்கியது. அதன் பிறகு நாங்கள் 1994ல் சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நாங்கள் சென்னை செல்கிறோம் என்று சொன்னவுடன் அந்தப் பெண்கள் அழுத அழுகை இன்னும் என் கண்களில் தெரிகிறது.
நாங்கள் சென்னை வந்தவுடன் அவர்கள் எனக்கு இன்லண்ட் கார்டில் கடிதம் எழுதினார்கள். அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துக்களை படிப்பதில் அவ்வளவு ஆனந்தம் அடைந்தேன்.

எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.
முடிந்தது






அருகிலுள்ள மலைக்கிராமத்தைப் பார்வையிட்டபோது எடுத்த படம். கிராமத்தின் பெயர் நினைவிலில்லை.

விருது பெறுவது எப்போது மகிழ்ச்சியளிக்கும் நிகழ்ச்சி அல்லவா? அதுவும் நம்மைப்போன்ற கலைஞர்களுக்கு இது ஒரு உற்சாக டானிக் (சரி சரி டிவியில நடிகர்கள் விருது வாங்கும்போது சொல்கிறார்களே என்று....)

பதிவுலகின் விருது என்பது நட்பை வளர்த்துக்கொள்வதுதானே. நட்பு எப்போதும் சந்தோஷம் அளிப்பதுதானே?

எனக்கும் இரண்டு விருது கிடைத்திருக்கிறது. ஒன்று வைர விருது. வழங்கியவர் கொத்துபரோட்டோ. இன்னொன்று ஜெய்லானி கொடுத்த ஏஞ்சல் அவார்டு. ஒரே நேரத்தில் இரண்டு அவார்டு கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இருவருக்கும் நன்றி. நம்மளுக்கு விருது கொடுத்து இருவரும் சந்தோஷப்பட்டாங்க. அதே போல் நாமும் சிலருக்கு விருது கொடுத்து சந்தோஷப் படுவோம்.

வைர விருது பெறுபவர்கள்



சந்தன முல்லை
அண்ணாமலையான்
ஜீவன் தமிழ் அமுதன்
சங்கவி
தமிழ் உதயம்
ஜெய்லானி
மங்குனி அமைச்சர்
பலாபட்டறை ஷங்கர்
ஜோக்கிரி
தியாவின் பேனா

ஏஜ்சல் விருது பெறுபவர்கள்


ஸ்வர்ணரேக்கா
மலர்
புதுவை சிவா
பிரியமுடன் வசந்த்
அகல் விளக்கு
சித்ரா
மணிகண்டன்
தமிழ் குடும்பம்
செல்வனூரான்

SUREஷ் (பழனியிலிருந்து)


தேவன் மாயம்
உண்மைத் தமிழன்

யாநிலாவின் தந்தை

நினைவுகளுடன் -நிகே-
புலவர்
ஷீர்டி சாய்தாசன்
முரட்டு சிங்கம்
herve anitha
தாமோதர் சந்துரு
மகா
சந்தான கிருஷ்ணன்
கீதா ஆச்சல்
தேவா

-------------------------

மின்மினி.காம் என்றொரு திரட்டி துவங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அதில் 1111 பேரை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். 101 பேரை இலவசமாக அறிமுகம் செய்வார்களாம். அதில் பாதி பிரபல பதிவர் போலிருக்கிறது. நாம்தான் பிரபலமும் இல்லை. பிராபலமும் இல்லை. அதுனால போட்டோவ அனுப்பி இணைத்துக்கொள்ளக் கேட்டேன். உடனே இணைத்துக்கொண்டார்கள். நன்றி மின்மினி.டாட் காம். ஈரோடு கதிருக்கு கீழ ஒரு கட்டம் தள்ளி இருக்கு பாருங்க அது நாந்தான்.
தன்னார்வலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கேம்ப் இருக்கும். எங்களை உற்சாகமூட்டி எங்கள் மனம் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.

எப்படின்னா கீதாவின் கணவர் என்னிடம் கேட்பார்
"ஏங்க படிப்பு சொல்லித்தர்றீங்களே மாத சம்பளம் ஏதாவது தர்றாங்களா?"
"இல்லங்க."
"சும்மா சொல்லாதீங்க. யாரு இந்தக் காலத்துல ப்ரீயா சொல்லித் தர்றாங்க?"
"உண்மையிலயே சும்மாதாங்க சொல்லித் தர்றேன்."
"நான் நம்ப மாட்டேன்."
"........"
அதே தெருவில் இருக்கும் இன்னொரு பெண்மணி என்னிடம் கேட்டார்,
"ஏங்க சும்மாவா பாடம் சொல்லித் தர்றீங்க"
"ஆமாங்க"
"அதுக்கு பத்துப் பேருக்கு டியூசன் சொல்லிக்குடுத்தீங்கன்னா ஏதாவது செலவுக்காவது ஆகும்."
"........."
"ஃபேன் வேற போடுறீங்களா? அது வேற எதுக்கு உங்களுக்கு வெட்டிச் செலவு"
நான் பதிலே பேசாமல் வந்துவிடுவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனம் மாறிவிடும்தானே?

இந்த கேம்ப்களில் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களும் தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் உள்ள மையம் தெரு விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். தன்னுடைய மனைவி படிக்கக்கூடாது என்று நினைத்த ஒரு குடிகாரக் கணவன் தெரு விளக்கை கல்லால் அடித்து உடைத்து விடுவாராம். வேறு லைட் மாற்றியுள்ளனர். திரும்பவும் உடைத்துவிட்டாராம்.

வேறொரு சம்பவம். ஒரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஊரில் நடுவே இருந்த கட்சிக்கொடி ஊரை அசிங்கப்படுத்துவதாக நினைத்த இளைஞர்கள் அனைத்துக் கட்சிக்கொடியையும் அகற்றியுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நாள் போலீஸ் அந்த இளைஞர்களைத் தேடி வந்துவிட்டது. அப்பறம் அறிவொளி இயக்கத்தினர் சென்று அவர்களுக்கு உள் நோக்கமெல்லாம் கிடையாது என்று விளக்கி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
இது போலெல்லாம் நிறைய நடக்கும்.

மாதம் ஒருமுறை நடக்கும் கேம்ப்புக்கு என்னுடன் அலமேலு என்ற பெண்ணும் வருவாள். வேலப்பாடிக்கு அருகில்தான் சங்கரன் பாளையம். அங்குள்ள ஒரு தன்னார்வலர்தான் அலமேலு. அந்த ஏரியாவுக்கு என் கணவர்தான் பிபிசி. அவர் சொல்லி அனுப்பியிருந்தார். அவளும் மாதா மாதம் என்னுடன் கேம்ப்புக்கு வருவாள். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து விடுவாள். நானும் நேரம் கிடைக்கும்போது அவள் வீட்டிற்குச் செல்வேன். அவர்கள் நிறைய மாடு வைத்து பால் வியாபாரம் செய்பவர்கள்.

கலைச்செல்வியும் மையத்தைப் பார்க்க அடிக்கடி வருவாள். மையம் இல்லாத நேரங்களிலும் வருவாள். அவள் சொன்னது, எவ்வளவு மனக்கஷ்டத்தோட இங்க வந்தாலும் இங்க வந்தவுடனே மனசு ரிலாக்ஸ் ஆகிடுது. மனசு ஒரு மாதிரி ஆனா ஒடனே இங்கதான் வருவேன் என்பாள்.

ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது கணவர் ஒரு எழுத்தாளர். எனது கணவரும் எழுத்தாளர் ஆகையால் அவளது கணவரைத் தெரியும். அதை வைத்து எங்கள் வீட்டில் இரண்டு நாள் தங்கினாள். அவள் கிளம்புவதற்கு முன் அவள் பேசிய விஷயம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர்கள் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார்களாம். அதன் நோக்கம் என்னன்னா மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமாம். அதற்கு மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, ஒரு நாலு ஆண்களும், நாலு பெண்களும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். கல்யாணம் எல்லாம் கிடையாது. பிறக்கும் குழந்தைகள் யார் யாருக்கு பிறக்கிறார்கள் என்று தெரியாததால் நான்கு பேரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும். சொத்தும் ஒன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு சமமாக கிடைக்குமாம்.

எவ்வளவு நல்ல ஸ்கீம். இதைக் கேட்டவுடன் நான் ஆடிப்போய்விட்டேன். அவள் சென்றவுடன் கணவரிடம் கேட்டேன்,
"என்ன இந்தப் பெண் இப்படி சொல்கிறாளே? இது உண்மைதானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?"

"ஆமா பாண்டிச்சேரியில சாரு நிவேதிதா குரூப் ஒன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க" என்றார்.

"என்ன இப்படிச் சொல்றீங்க இது எப்படி சாத்தியமாகும். எப்படி சரியாகும். சும்மாவே எய்ட்சு கியிட்சுன்னு என்னென்னெவோ வந்துக்கிட்டிருக்கு. இதெல்லாம் என்ன பேச்சு. #$%^&*#$%@!#$%&*......"

"இங்க பாரு யாரோ என்னவோ பேசிக்கிட்டுத் திரியறாங்க. நான் என்னவோ அத ஆதரிக்கிற மாதிரி என்னயப் போட்டு ஏன் திட்டற?"
சரி பாவம் இவரைத் திட்டி என்ன பிரயோஜனம்.

ஆனா அந்த பெண் பேசியதில் இருந்து ஒன்று தெரிந்தது. அந்த குரூப்பில் உள்ளவர்கள் எல்லாம் திருமணமாகி தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம். யாரோ குட்டிச்சுவராப் போகட்டும்னு எண்ணம் போல.

இரண்டு மூணு நாள் கழித்து கலைச்செல்வி வந்தாள். பாண்டிச்சேரிப் பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் வந்தாள் வீட்டுக்குள்ளேயே விடாதீங்க என்றாள். நான் கலைச் செல்வியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு கோபம்.
மேலும் சொன்னாள் அவ போற எடத்துல எல்லாம் செருப்படிதான் கெடைக்குது........ என்று பொரிந்து தள்ளினாள்.
பாண்டிச்சேரி பெண் பேசிய விஷயத்தை என்னிடம் கலைச்செல்வி சொல்லவில்லை. அவளால் என்னிடம் அதைச் சொல்லக்கூட வாய் வரவில்லை. மக்களே அந்த பாண்டிச்சேரிப் பெண்ணை விரட்டி விட்டனர்.

(இன்னும் இருக்கு)


அருகிலிருக்கும் பூந்தோட்டத்திற்கு ஒரு விசிட். சூடிதாரில் கலைச்செல்வி.


என் மடியில் இருப்பது உமாவின் அக்கா குழந்தை.
மையம் துவங்கியது

வீடு திரும்பியதும் அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று எங்கள் மையம் தொடங்கப்பட்டது. எங்கள் ஏரியா பிபிசி கஸ்தூரி ரங்கன் (பள்ளி ஆசிரியர்), கலைச்செல்விதான் எங்கள் ஏரியா சிபிசி, இளவழகன், படிக்க வந்த பத்துப் பேர். குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தனர். ஏற்கெனவே ப்ளாக் போர்ட் சுவரில் மாட்டுவது போன்றது. பலப்பம், சிலேட், அறிவொளி தீபம்-1 புத்தகம், சாக்பீஸ் எல்லாம் இளவழகன் கொடுத்திருந்தார்.

அடுத்து அறிமுகப்படலம். நான் முதலில் என் பெயர் ஜெயந்தி உங்கள் பெயரை ஒவ்வொருவராக சொல்லுங்கள் என்றவுடன் மாணவிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். செல்வி, சுதா, ஜெயா, தேன்மொழி, உமா, ராஜேஜ்வரி, புவனேஷ்வரி, குமுதா, லலிதா, சாந்தி. இதில் சாந்தி மட்டும் திருமணமானவர். மற்றவர்களெல்லாம் 18-22 வயதுள்ள பெண்கள். இதில் செல்வி, சுதா, ஜெயா, லலிதா, உமா இவங்களெல்லாம் அங்குள்ள தோலினால் ஆன ஷு, ஹேண்ட் பேக் போன்ற பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ராஜேஜ்வரியும், புவனேஷ்வரியும் வீட்டு வேலை செய்தனர். குமுதா பூக்கட்டிக்கொடுக்கும் வேலை செய்தாள். இதில் பெரும்பாலோர் வீடுகளில் அவங்க அம்மாக்கள் பீடியில் லேபிள் சுற்றும் வேலை செய்தனர்.

என் வீடு இருந்த தெரு, குறுக்குத் தெருக்களில்தான் இவர்கள் அனைவரும் இருந்தனர். எங்க வீடு எப்டின்னா ஒரு கதவுக்குள்ள இரண்டு வீடு. இதுக்கு முன்ன நாங்க இருந்த வீடு ஒரு கதவுக்குள்ள ஐந்து வீடு. பக்கத்தில் கீதா இருந்தாள். என் தோழிதான். ஒரு ரூம் ஒரு சமையலறை மட்டும்தான். கீதா வீடும் அதே போலதான். ரெண்டுமே சின்னச் சின்னது. ரூமுக்குள்ள பத்து பேரு நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தனர். நல்ல வேளை எங்க வீட்டுல கட்டில், பீரோ எதுவுமில்லை. மூலையில் இரண்டு டிரங்க் பெட்டி, அதன் மேல் இரண்டு தலையணை ஓரமாக ஒரு பாய் அவ்வளவுதான்.

அவ்வளவுதானா? எங்க வீட்டுல இருக்கற புத்தகங்கள நீங்க பாத்திக்கீங்களா? எங்க வீட்டுல புத்தகம் இருக்காது. புத்தகத்துக்குள்ள எங்க வீடு இருக்கும். இந்த வீட்டைப் பொறுத்தவரை யாரோட நல்ல நேரமோ தெரியல ஒரு பரண் ஒன்னு இருந்துச்சு அதுல போயி சேர்ந்திருச்சு. இந்தப் புத்தகக் கதைய நான் தனியா ஒரு பதிவே போடுறேன்.

வகுப்பு தொடங்கி ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த காயத்திரி என்பவர் என்னிடம் வந்து "எனக்கும் தமிழ் சொல்லித்தருவீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அவங்க கேட்டது எனக்கு கிண்டல்போல தோணுச்சு. ஏன்னா அவங்க டிகிரி முடிச்சவங்க. வேலைக்கு வேற போறாங்க.
"என்ன சொல்றீங்க" என்றேன்.
"நான் பெங்களூருல படிச்சவ. எனக்கு கன்னடம், ஹிந்தி, இங்கிலீஸ் எல்லாம் தெரியும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. சொல்லிக்குடுப்பீங்களா?" ன்னு கேட்டாங்க.
"வாங்க வாங்க அதுக்குத்தான நான் இருக்கேன்" என்று அழைத்தேன்.
மேலும் ஒரு மூன்று பேரை இளவழகன் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.
எங்கள் மையத்தில் எப்போதும் 13, 14 பேர் இருந்தார்கள்.

கற்க வந்த அந்தப் பெண்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள். குமுதா, உமா இவர்களின் அப்பாக்கள் குடிகாரர்கள். ராஜேஜ்வரி, புவனேஸ்வரிக்கு அப்பா இல்லை. சுதாவின் தந்தை நோயாளி. ஜெயாவுக்கு அப்பா உடன் இல்லை. அம்மாவும் மனநோயாளி. இவர்களின் சம்பாத்தியம் அவர்களின் வீட்டுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் கவலைகள்.

சாயங்காலம் ஆறு மணியானால் போதும் பட்டாம்பூச்சிக்கள் போல் சிறகடித்து வந்து விடுவார்கள். எங்கள் வகுப்பு தொடங்கியது முதல் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாடங்களை ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள். பாடங்களின் ஊடே பாட்டு, கதை, பொது விஷயங்கள் எல்லாம் இருக்கும். இளவழகன் சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் எல்லாம் எங்கள் வகுப்பு முடியாது. 6 மணிக்குத் துவங்கினால் 8 மணிக்கு மேல் அந்தப் பிள்ளைகள் போனால் போகிறதென்று கிளம்பிப்போவார்கள்.



படத்தில் வைலட் கலர் சேலைதான் நான். பக்கத்தில் பட்டுச்சேலையில் காயத்திரி. இது காயத்திரி வீடு. அவர்கள் கேமராவில் எடுத்த படம். இதில் ஜெயா, தேன்மொழி, ராஜேஸ்வரி, உமா முதலியோர் உள்ளனர்.

(இன்னும் இருக்கு)
ஏலகிரி மலை

எங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது. பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன் அருகிலிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன் படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு உலகம் திறந்து கொண்டநாட்கள்.



ஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர் வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்), சீனிவாசன், ஆனந்தன்... இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.

அது எப்படின்னா அறிவொளி இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான். அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.

எங்கள் மாவட்டத்துக்கு வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர் ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல் மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில் பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.

டிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச் செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர் அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல் இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் செயல்படும் விதத்தை நேரில் பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.

ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள். அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள். அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா?



அப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும் கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன் ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செய்ய வேண்டும். இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் அல்லவா? இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான். அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.

அடுத்து இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது. எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம் சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா படிச்சிருப்போமோ?

கிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும் பத்திரிகை.

கிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.

புதிதாக கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில் போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க சுவாரசியமாக வந்தது.

எனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத் தெரியாதவைகள் எவ்வளவோ.

சரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா? மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?" இந்த பாட்டு படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. "காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க முடியல..." அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம் வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி "........உடம்பு வளரும் முன்னால அவ பிள்ள பெறுவதும்..."ன்னு வரும்.

அப்பறம் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர் அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும் சொல்லிக்கொடுத்தார்கள்.

எங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம் (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி, முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும் இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ் சென்டர்ல பணியாற்றுகிறார்.)

இந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற பசங்கன்னு சொன்னேன்னில்லையா? அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ?

மூணு நாளும் போனதே தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும், அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.

(இன்னும் இருக்கு)

"அம்மா உன்னய யாரோ கூப்புறாங்க" மகள் வந்து சொன்னதும் வெளியே சென்று பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார். சிவந்த நிறம். சுருள் முடி. சற்று குள்ளமான உருவம்.

"என்னங்க"
"என் பெயர் இளவழகன். நான் கவர்ன்மெண்ட் அச்சகத்துல வேல பார்க்கறேன். உங்ககூட கொஞ்சம் பேசனும்" என்றார்
"என்ன விஷயம் சொல்லுங்க" என்றேன்
"அரசாங்கத்துல அறிவொளி இயக்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உங்களால ஒரு பத்து பேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க முடியுமா?"
அவர் கேட்டதும் எனக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

எனக்கு அறிவொளி இயக்கம் பற்றி முன்பே தெரியும். கணவர் அறிவொளி இயக்க வேலைன்னு சொல்லிக்கிட்டு ஒரு மூன்று மாதங்கள் கழித்து அப்போதுதான் வீட்டிற்கே வந்திருந்தார். அவர் மூலமாக அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் தெரியும். கடைசி இரண்டு மாதம் உள்ளூரிலேயே கேம்ப் மேனேஜராக இருந்தார். கேம்ப்பில் கலைக்குழுவினர், ஏபிசி, பிபிசி, ஒருங்கிணைப்பாளர் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிதனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வீட்டிற்கு வரமுடியாது.


இளவழகன் கேட்டவுடன் எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியல. ஏன்னா ஸ்கூலுக்குப் போயி பாதியிலேயே படிப்ப விட்டவுங்க, ஸ்கூல் பக்கமே போகாதவங்க இவங்களுக்காக எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கற ஒரு இயக்கம்னு தெரியும். ஆனா நம்ம பொது புத்தியில எப்பவுமே ஒன்னு இருக்கும். யாரோ யாருக்காகவோ என்னவோ செய்யப்போறாங்கன்னு இருக்கும். நாமலும் செய்யலாம்னு நமக்குத் தோணாது. நீங்க சொல்லிக்கொடுக்கறீங்களான்னு கேட்டவுடன் ஆஹா நம்மளும் செய்யலாமான்ற நெனப்பே வரும்.

அதுவுமில்லாம எனக்கு வந்து எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் சுமாராக அல்லது அதற்கும் கீழேயான படிப்பு. அதுனால நான் எல்லாரையும் விட மட்டம்ன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை என் மனசுல எப்பவுமே இருக்கும்.

"நான் பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சிருக்கேன்" என்றேன்.
"உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமில்ல" என்றார்
"ம் அது மட்டும்தான் தெரியும்" என்றேன்.
"அதுபோதும்" என்றார்
"எப்டி சொல்லித்தர்றதுன்னு தெரியாதே?"
"அதுக்கு பயிற்சி வகுப்பு நடக்கும் அங்க சொல்லிக்குடுப்பாங்க"
"சரி படிக்காதவங்க யாருன்னு எனக்குத் தெரியாதே" என்றேன்
"அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் அவங்கள உங்க வீட்டுக்கே வரவச்சிர்றேன். ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம்னு நேரம் ஒதுக்குனா போதும். ஆறு மாசம் பாடம் சொல்லிக்கொடுத்தாப் போதும். ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் யோசிச்சு முடிவ சொல்லுங்க" என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்.

அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கட்டுமா என்று கணவரிடம் கேட்டேன்.
உனக்கு விருப்பமிருந்தா தாராளமா எடுக்கலாம் என்றார்.

இரண்டு நாள் கழித்து வந்தவரிடம் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்தவாரம் உங்களுக்கு ஏலகிரி மலையில மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு இருக்கு தயாராகிகங்க என்றார்.
(இன்னும் இருக்கு)