மகப்பேறு வரமா? சாபமா?
3/08/2011 | Author: ஜெயந்தி
மகளிர் தினத்திற்காக

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். பிள்ளை இல்லா பெண்கள் வாழ்நாளெல்லாம் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்வார்கள்.

அப்படி ஆசையுடன் குழந்தை உருவானபின் பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த சிரமங்கள் ஏராளம். ஆனால் பெண் அது அத்தனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டாள். கர்பத்தினால் உண்டாகும் சந்தோஷம் மட்டுமே அவளிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.

முதல் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. மூன்றாவது மாதத்தில் இருந்து மசக்கை என்ற வாந்தி மயக்கம் தொடங்கும். சிலருக்கு வாந்தி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். சிலருக்கு குழந்தை நின்றதிலிருந்து பிறக்கும்வரை வாந்தி இருக்கும். வாந்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் ஐந்து மாதம் வரை சில வாசனைகளை முகர நேரிட்டால் குமட்டும். ஐந்து ஆறு மாத்திற்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, தொடை வலி எல்லாம் வரும். ஏனென்றால் சுமையை சதா சர்வ நேரமும் சுமந்துகொண்டே இருப்பதால் வரும் வலிகள். குழந்தை பிறக்கும் நேரம் வரும் வலி அம்மம்மா அதை சொல்லி முடியாது. பொருக்க முடியாத வலியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை அனுபவித்தே பிள்ளையை பெற்றெடுக்கிறாள். முதல் பிரசவத்திற்கு அதிக நேரம் வலி இருக்கும். சிலருக்கு ஒரு நாள் முழுக்கக்கூட வலி இருக்கும். குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது வலி இருக்கும். இரண்டாவது மூன்றாவது டெலிவரி என்றால் வலியின் நேரம் இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரையே இருக்கும். இது சாதாரண பிரசவத்திற்கு அதாவது சுகப்பிரசவம் என்பார்களே அவர்களுக்கு.

சிலருக்கு குழந்தை உருவான பின் பிரஷர், சுகர் போன்றவை வரும். சிலருக்கு அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அம்மா அப்பா நெகடிவ் பாசிட்டிவ் ரத்தங்களாக இருந்தால் குழந்தை உருவானாலும் அம்மாவின் ரத்தமாக இருந்தால் ஒன்றும் ஆகாது. அப்பாவின் ரத்தமாக இருந்தால் அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஊசி போட்டு டிரீட்மென்ட் கொடுத்து சரியாக பிறக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு குழந்தை உருவானதிலிருந்து ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது. என்னவென்று பார்த்தால், குழந்தைக்கு அம்மாவிடமிருந்து உணவு, காற்று, ரத்தம் அதைத்தையும் எடுத்துச் செல்ல ப்ளாசண்டா எனப்படும் தொப்புள்கொடி இருக்கும். இந்தக் குழந்தை அந்த ப்ளாசண்டாவில் மிதித்து மிதித்து குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது. குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்தக்குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டார்கள். இன்னும் ஸ்கேனில் குழந்தை வளர்ச்சி சரியில்லை என்று தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அபார்ஷன்களும் குழந்தை பிறப்பிற்கு சமமானவை. பெண்களுக்கு இப்படி எத்தனையெத்தனையோ சிரமங்கள்.

சிலருக்கு ஏழாம் மாதம் எட்டாம் மாத்திலேயே குழந்தை பிறந்துவிடும். அதன் பிறகு அந்த குழந்தையை வளர்க்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்தாக வேண்டும்.

குழந்தை பிறக்கும்போது முதலில் கை, கால் வந்தால் சிரமம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்துவிட்டாலும் சிரமம். இன்னும் கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற நிறைய காரணங்களுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள். சில மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரியையே ஆபரேஷன் கேஸாக்கிவிடுவதும் உண்டு. நார்மல் டெலிவரிக்கு ஒருநாள் வேதனை என்றால், ஆபரேஷன் செய்துகொள்பவர்களுக்கு பலநாள் வேதனை. என் உறவுப் பெண்ணுக்கு ஆபரேஷனின்போது கொடுக்கப்படும் குளோரோபாமின் காரணமாக ஐந்துநாள் தலைவலித்தது. அது இல்லாமல் ஆபரேஷன் செய்த வலி. நடமாட முடியாமல் குழந்தையை தூக்க முடியாமல் ரொம்ப அவஸ்தை.

இவை எனக்குத் தெரிந்தவரை உள்ள வேதனைகளே. இன்னும் எனக்குத் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ. குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு பிறப்பு என்பார்கள். அதனை மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தை பிறந்த பின்னும் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது பெண்களின் தலையிலேயே. சொற்ப ஆண்கள் குழந்தை வளர்ப்பிற்கு சின்னச்சின்ன உதவிகள் செய்வார்கள். சொற்ப ஆண்கள் பிள்ளைகள்மேல் பாசமாக இருப்பது மட்டுமே தங்கள் கடமை என்று நினைப்பார்கள். அதிகபட்சமான ஆண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இன்னும் சிலர் பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். சிலர் தான் சம்பாதிப்பதையும் குடித்துவிட்டு மனைவி சம்பாதிப்பதையும் அடித்துபிடுங்கிக்குடிப்பார்கள். எப்படி சூழ்நிலையாக இருந்தாலும் தாய்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

இதில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஏதோ அந்தத் தாயின் மிகப்பெரும் தவறுபோல் தூற்றப்படுவாள். ஆணாகப் பிறக்க வேண்டுமா, பெண்ணாகப் பிறக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதே ஆண்களின் அணுக்கள்தான்.

மகப்பேறு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பெண் மூன்றாவது குழந்தைக்கு ஒருநாளெல்லாம் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். "மூணாவது குழந்தையின்னா ஈசியா பெறந்துருமே. இவங்க ஏன் இவ்வளவு சிரமப்படுறாங்க" என்று அங்கே இருந்த நர்சிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணு. அதுக்கடுத்து ரெண்டு அபார்ஷன். அதுனால அவங்களுக்கு ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. அதுனாலதான் அவஸ்தப்படுறாங்க. அவங்க இந்த ஆஸ்பத்திரியிலதான் வேல பாக்குறாங்க" என்று சொன்னார். அபார்ஷன் ஆக்கப்பட்ட இரண்டு கருவும் பெண்ணாக இருந்திருக்கும் என்று புரிந்தது. அந்தப்பெண்ணுக்கு சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது.

அதே நர்ஸ் இதை சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார், "இதுவாவது பரவாயில்ல. ஒரு சேட்டு வீட்டு லேடிக்கு ஏழு பொண்ணு. எட்டாவது டெலிவரிக்கு வந்திருந்தாங்க. அவங்க ஒடம்புல ரத்தமே இல்ல. ரத்தம் ஏத்தி டெலிவரி பார்த்தோம். நல்ல வேளை அது ஆண் கொழந்த". இந்தப் பேச்சு நடந்தது 30, 40 வருஷத்துக்கு முன்னால இல்ல. 2011 ஜனவரியில பேசப்பட்டது.

வறுமை நிலையில் இருந்தாலும் தான் சாப்பிடாவிட்டாலும் தன் பிள்ளையை பசியாற்றுவாள் தாய். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறிப்போவாள். பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்ப்பாள். பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த தாய்ப்பாசம். கேட்டால் இது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்பார்கள். இது வரமா? சாபமா? இதனாலேயே பெண் அடிமையாகிறாள். எல்லா துன்பங்களையும் பொருத்துக்கொள்கிறாள்.

இது உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால் நீ அதை வைத்துக்கொண்டு அடிமையாக இரு. எனக்கு அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துவிடாதே. அந்த வரம் எனக்குக் கிடைத்தால் என்னுடைய சுதந்திரம் சந்தோஷம் எல்லாம் போய்விடும். நான் உலகை ஆளப்பிறந்தவன்.

நீ கேவலமானவள். நான் உயர்ந்தவன் - அந்தக் கேவலங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நீ.

நீ வலிமையற்றவள். நான் வலிமையானவன் - ஒரு ரோடு ரோலர மேல ஏற விட்டு எந்த சேதாரமும் இல்லாமல் சூப்பர்மேன் மாதிரி எழுவீர்களா? ஒரு சின்ன இரும்புக் கம்பியால் தலையில் அடித்தால் தாங்குவீர்களா?

உனக்கு மாதவிடாய் வருகிறது அதனால் நீ கேவலமானவள் - மகனே அது வரலன்னா நீயே இல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை உருவாகும். அது கருவாகாவிட்டால் சிதைந்து ரத்ததுடன் வெளியேறும். அடுத்த மாதம் புது கரு உருவாகும். இது மனித இனப்பெருக்கத்திற்கான சுழற்சி. அதையே கேவலமானதாக மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு வரக்கூடாது - அது வரவில்லை என்றால் அந்தக்கோவிலே இல்லையே.

நீ அப்போதுதான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்திருந்தாலும் நான் பாலியல் பலாத்காரம் செய்வேன் - நீ மனுசனாடா? ஒரு மிருகம்கூட இந்தச் செயலைச் செய்யாது.

நீ எனக்கு பணமும், பொருளும் கொடுத்தால்தான் நான் உனக்கு கணவனாக இருப்பேன் - அது வேசித்தனம்.

நீ எவ்வளவு பணம் நகை கொண்டு வந்திருந்தாலும், வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் நீ எனக்கு அடிமை என்பதை மறந்துவிடக்கூடாது - ஒரு அடிமையைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள். இங்கே தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ வேலைக்குச் சென்றாலும் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு வீட்டையும் நீதான் கவனிக்க வேண்டும் - நான் வலிமையானவன். நான் சும்மாவே இருப்பேன்.

சரி இப்படியெல்லாம் எங்களை வைத்திருக்கிறீர்களே உலகத்துப் பெண்கள் எல்லாம் ஒருநாள் கூடி நமக்கு இந்த உலகத்துச் சந்தோஷங்கள் சொந்தமில்லை அதனால் நாம் மனித உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்.

ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே வீட்டைவிட்டு ஓடிவிடுகிறீர்கள் அல்லது தற்கொலைக்கு முயல்கிறீர்கள். ஆனால் மெலிந்தவர்கள் என்று சொல்லப்படும் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ்வளவிலும் சமாளித்து பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து நிற்பாள்.

இது அனைத்து ஆண்களிடமும் கேட்கப்படுபவை அல்ல. பெண்களை புரிந்துகொண்ட பெண்களும் உலகத்தில் சந்தோஷமாக வாழ வேண்டியவர்களே என்று நினைக்கும் ஆண்களும் இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களால்தான் நிறையப் பெண்களால் நிம்மததிப்பெருமூச்சு விட முடிகிறது.

டிஸ்கி : இவ்வளவு நாள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல். இப்போதும் தற்காலிகமாகவே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே முழுமையாக வருவேன் என்று நினைக்கிறேன். எனக்கு பின்னூட்டமிட்டு அன்பை தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் இல்லாதபோதும் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கிய எம்.அப்துல் காதருக்கும் நன்றி. என்னை மறந்துருராதீங்க நண்பர்களே.