எழுத்தும் வாழ்க்கையும்
6/01/2013 | Author: ஜெயந்தி

சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்கவிடும். அறிவியல் கட்டுரைகளைக்கூட வாசகனை விறுவிறுப்பாக படிக்க வைக்க அவரால் மட்டுமே முடியும். அவரது எழுத்து என்னை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது என்பது அவரது இறப்பின்போதுதான் புரிந்தது.

எழுத்தாளர் சுஜாதா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் மனம் கலங்கி கண்ணீர் வந்தது. இவரைப்போல பிரபலமான நபர்களது இறப்பின் செய்தி ஒரு செய்தியாகத்தான் தெரியும். அல்லது கொஞ்சம் மன வருத்தம் அடையும். கண்ணீரெல்லாம் வந்தது கிடையாது. ஆனால் சுஜாதாவின் இறப்பின் செய்தி என்னுள் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுதியது. அந்த சோகம் பல மாதங்கள் நீடித்தது. அப்போதுதான் சுஜாதா அவர்களின் எழுத்து எத்தகைய தாக்கத்தை என்னுள் ஏற்படுதியுள்ளது என்று உணர்ந்தேன்.


சுஜாதா மனைவியின் பேட்டி பற்றி சிவராமன் ப்ளசில் படித்தேன். படித்தவுடன் தோன்றியது இத்தனை காலத்துக்குப் பிறகு இந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல.

ஆனால் திருமதி சுஜாதா அவர்களின் இதே வகையான பேட்டி சுஜாதா உயிரோடு இருந்த போதே ஏதோ ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். இதே மாதிரி திட்டித்தான் எழுதியிருந்தார். அப்போதிலிருந்து எனக்கு ஏனோ திருமதி சுஜாதாவை பிடிக்காமல் போனது. நமது மனதிற்குப் பிடித்த ஒருவரைப்பற்றி தவறான செய்தியை மனது ஏற்கவில்லை. அப்படி சொன்னவரை பிடிக்காமல் போனது. இப்போது வரை பிடிக்காமல்தான் இருந்தது. காரணம் சுஜாதாவைப் பற்றி தவறாக சொன்னதனால்தான்.

எனக்கு ஒன்னுதான் புரியல. பேட்டி கொடுத்தது திருமதி சுஜாதா. ஆனா அத பேட்டி எடுத்தவங்களயும் வெளியிட்ட பத்திரிகையையும் ஏன் திட்டறாங்கன்னு புரியல. அவங்க மனசுல உள்ளத அவங்க சொல்றாங்க. புதுகை அப்துல்லா சொல்றாரு அவங்க காலகட்டத்துல இதெல்லாம் சகஜம்னு. அப்டி சகஜமா இருந்தா இந்த அம்மாவுக்கு இப்பவும் அவ்வளவு வலி தரக்கூடிய நிகழ்வா அது இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நிறைய படித்த உலகத்தைப்பற்றி அதிக அளவில் தெரிந்த ஒருவர் ஒரு சராசரி ஆண் மகனைப்போலதான் மனைவியை நடத்த வேண்டுமா என்ன? அப்பறம் படிப்பு என்னத்துக்கு.

சுஜாதா அவர்களுக்கும் தனது குணம் தெரிந்திருந்த காரணத்தினால்தான் தனது மனைவி கொடுத்த பத்திரிகை பேட்டியை அவர் தடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது அவரையும் மீறி வந்திருக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ப்ளசும் இருக்கும் மைனசும் இருக்கும்.

திருமதி சுஜாதாவும் சராசரி சமையலரையில் ஒளிந்துள்ள பெண் அல்ல. அவர்களும் பத்திரிகை ஆசிரியராகவெல்லாம் இருந்திருக்கிறார்கள். தெளிவான பெண்தான். அவர்கள் உணர்வுகளை சொல்கிறார்கள். சரி. இவங்க இப்டி சொல்றதுனால சுஜாதாவோட எழுத்தோட பவரெல்லாம் காணாம போயிடுமா என்ன? அவங்க அவங்க உணர்வுகள சொல்றாங்க. அதுக்கு மதிப்புக்கொடுப்போம்.

வேதம் புதுமை செய்  

கமலாலயன்



உலகம் நமக்கு எண்ணற்ற கொடைகளை ஒவ்வொரு நாளும் வழங்கிக்கொண்டே இருக்கிறது: நீர், காற்று, உணவு, உடைகள், உறைவிடம், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கல்வி, கலைகள், இப்படி இந்தப் பட்டியல் முடிவற்று நீளும் ஒன்று, இவற்றையெல்லாம் உலகிடமிருந்து, அதாவது சமுதாயத்திடமிருந்து-நாம் பெறுகிறோம், திரும்பவும் அந்த உலகிற்கு நாம் எதைத் திருப்பித் தந்திருக்கிறோம்? ஒரு தனிநபர் என்ற முறையில் நமது பங்களிப்பு என்ன?

இந்த கேள்விதான் பலரை ஞானத் தேடலில் ஈடுபடச் செய்திருக்கிறது. தனி நபருக்கு முன்னால் வீசப்படுகிற இக்கேள்வியை இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு முன் வீச முடியமா? முடியுமென்றால் இந்த நாட்டின் பதில் என்ன?

"இந்தியா, உலகிடமிருந்து எவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறதோ, அவற்றுக்கு ஈடாகத் தானும் பலவற்றைக் கொடையளிககும், கடந்த காலத்தில் இந்தியா உலகிற்களித்து வந்திருப்பதைப் போன்றே, இன்றும், இனியும் உலகிற்கு அளிக்கிறது அளிக்கும்!" இதை மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் உலக நாடுகளின் அவை ஒன்றில் முழங்கியவர் விவேகானந்தர்.

பகத் சிங்கையும், பாரதியையும் போன்று விவேகானந்தரும் குறுகிய காலமே இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர். மொத்தமே 39 ஆண்டுகள். அவர் போதித்தது வெற்று வேதாந்தமும், சனாதன தர்மங்களும் மட்டுமேயாக இருந்திருக்கும் பட்சத்தில் அவரது இந்த 39 ஆண்டுகால வாழ்க்கை, இந்த உலகப் பெருங்கடலில் கரைந்த பெருங்காயமாய் என்றைக்கோ மணமிழந்து போயிருக்கும். இந்த நாட்டில், சன்னியாசிகளுக்கா பஞ்சம்? ஆனால், விவேகானந்தர் முன் வைத்த வேதாந்தத்தின் தன்மை முற்றிலும் வேறுபட்ட ஒன்று. பசித்த வயிறுகளுக்குத் தேவை, சப்பாத்திகளும் சோறுமே தவிர மதமோ, வேதாந்தமோ ஏன், கடவுளோகூட அல்ல என்று திட்டவட்டமாகச் சொன்னவர் அவர்.

இன்று, இந்துத்துவ வாதிகள், பகத்சிங்கையே தமது இரகசிய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற உதவும் திருவுருவங்களுள் ஒன்றாக ஆக்கிவிட முயன்று வருகிற சூழலில், விவேகானந்தரைப் போன்ற சன்னியாசியின் நிலைமை என்ன என்பதை விவரிக்கவே வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் முன்னிறுத்துகிற விவேகானந்தரையல்ல நாம் காண வேண்டியது. இந்திய வரலாற்றில் மிக ஆழமான தடம் பதித்த ஒரு வீரத் துறவி மட்டுமல்ல. இந்த நாட்டின் கோடானுகோடி மக்கள், வயிற்றுக்குச் சோறும், உடுத்த உடையும், இருக்க இடமும் இன்றி வேதனைப்படுகின்றனரே என்று கண்ணீர் சிந்தியவர் அவர். வாடிய பயிரையும், நீடிய பிணியால் வருந்துகின்றோரையும், ஈடீல் மானிகளான ஏழையரையும் கண்ட போதெல்லாம் வாடித் துயருற்ற நமது வள்ளலாரின் அகில இந்தியப் பதிப்பே விவேகானந்தர்.

1863-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12-ம் நாளில் பிறந்தவர் இவர். தாயார் புவனேஸ்வரி தேவியும், தந்தை விஸ்வநாத் தத்தாவும் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத். 1881-ல் முதன் முறையாக இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கிறார். அனைத்து மதங்களையும் சமமானவையாகப் பார்க்கும் 'சர்வமத சமரச'ப் பார்வையுடையவர் இராமகிருஷ்ணர். அத்வைதத்தை, அதாவது கடவுளும்-மனித ஆன்மாவும் வேறுவேறல்ல என்கிற ஓர்மையை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ-கலாச்சாரத்திற்கோ மட்டும் சொந்தமானதாக்கி விடாதவர்களாக இராமகிருஷ்ணரும், அவரது சீடரான விவேகானந்தரும் இருந்தவர்கள். தனது மதம் எது என்று ஒற்றை வரியில் சொன்னவர் விவேகானந்தர்: "உண்மை ஒன்று மட்டுமே எனது கடவுள்: இந்த ஒட்டுமொத்த உலகமே எனது நாடு"

சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய அனைத்து மதங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும், அவரது குரு இராமகிருஷ்ணரின் மேல் கொண்டிருந்த பக்தியையும் முன்னிறுத்தி இன்று விசுவஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் அவரை ஓர் 'இந்து முன்னணி வீரராக'ச் சித்தரிக்கின்றன. ஆனால், 1885-ல் அவர் எழுதிய ஒரு கடிதத்தின் வரிகள், அவர் முன் வைத்த கொள்கை எதுவென்று காட்டுகின்றன:

"இந்த நிமிடத்தில் நான் இந்துயிஸம் குறித்து எந்த ஒரு புத்தகத்தையும் எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மதமும் ஒரு வகை வெளிப்பாடு. ஒரே உண்மையை வெளிப்படுத்துகிற ஒரு மொழி. ஒவ்வொருவரிடமும் நாம் அவரவர் சொந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். நாம் இந்துயிஸம் பற்றி பின்னால் ஏதாவது ஒரு சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம். நமது குரு இராமகிருஷ்ணரின் மதம் இந்து மதமென்று ஹிந்துக்கள் வைத்துக்கொல்லட்டும்... மற்றவர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளட்டும். நமது ஆசிரியர் இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்? நமது இந்தியாவின் சீர்குலைவிற்கு இத்தகைய குறுகிய அணுகுமுறைகளை ஒழிக்காமலிருக்கும் வரையில் எந்தவித சாதகமான பலனும் கிடைப்பது முடியாத காரியம்." -இதைவிடவும் தெளிவாக வேறொரு கடிதத்தில் "இந்து, கிறிஸ்தவர் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதெல்லாம் ஒரே உண்மையின் வெவ்வேறு பெயர்கள் மட்டுமே. மனித உயிர்களுக்கிடையே நிலவ வேண்டிய தோழமையுணர்வுக்கு இவை தடைகளே. இவற்றை உடைத்து நொறுக்குவதற்குத்தான் நாம் முதலில் முயற்சி செய்ய வேண்டும்." என்று திருமதி புல் (BULL) என்பவருக்கு எழுதியிருக்கிறார்.

சர்வ மதங்களின் அவையில், சிகாகோவில் அவர் நிகழ்த்திய பிரிவுபசார உரையின்போது தெள்ளத் தெளிவாக அவர் கூறுவதைக் கேளுங்கள்: "மதங்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமைக்குப் பொதுவான ஓர் அடித்தளம் குறித்து இந்த அவையில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்த உலகில் பின்பற்றப் படுகிற ஏராளமான மதங்களுள் ஏதேனும் ஒன்று மட்டுமே வெற்றி பெற்று தலைமையேற்க வேண்டுமென்றும், மற்றவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி நடந்தால்தான் மதங்களிடையே ஒற்றுமை நிலவுமென்றும் யாராவது இங்கு நம்பியிருக்கும்பட்சத்தில், அவரிடம் நான் சொல்லுவேன்: 'சகோதரா, உன் நம்பிக்கை தவறானது' என்று. கிறிஸ்தவர்களெல்லாரும் இந்துக்களாகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்! யாரேனும் ஒரு ஹிந்து அல்லது பெளத்தர் கிறிஸ்தவராகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்!"

அவர் முன் வைத்த இத்தகைய தெளிவான கருத்துக்களையும், வேறுபல முற்போக்கான, மனித நேயமிக்க விமர்சனங்களையும், மெல்ல மெல்ல மக்களின் முன் வைக்காமல் மறைத்துக் கொண்டிருக்கிற இந்துத்துவ அமைப்புகளின் வரிசையில், சமீபகாலமாக இராமகிருஷ்ண மிஷனும் கூட இணைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அவருடைய வாழ்நாளிலேயேகூட, அவரது கருத்துக்களையும், அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தையும் வைதீக இந்துக்களின் அதிகார மையங்கள் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதவரான விவேகானந்தர் எப்படி இந்துமதத்தின் அங்கீகரிக்கப்பட்ட துறவியாக ஏற்கப்பட முடியும் என்று சனாதனிகள் கொந்தளித்திருந்துள்ளனர். கடல் கடந்து அவர் மேற்கொண்ட பயணம் சாஸ்திர விரோதமானதென்றும், அயல்நாட்டிலிருந்தபோது உட்கொண்ட உணவு விஷயங்களிலும் அவர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்த விமர்சனங்களுக்கு அவரது பதில் மிகத் தெளிவானது: "நான் எப்போது வைதீக புராணிக இந்துவாக இருந்திருக்கிறேன்? நமது சாஸ்திர விதிகளைக் கவனமாகப் படித்து ஆராய்ந்து பார்த்தேன். ஆன்மிக விடுதலையும், மதமும் சூத்திரர்களுக்கு அல்ல என்ற உண்மையைக் கண்டறிந்தேன். ஒரு சூத்திரன் உணவு தொடர்பான மற்றும் எல்லா சாஸ்திர விதிகளையும் அனுசரித்து நடப்பதாகவே வைத்துக்கொண்டாலுங்கூட வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டாலும்கூட அவனுக்கு ஒன்றும் பெருமை கிடைத்துவிடப் போவதில்லை. அவையெல்லாம் வீண் முயற்சிகளே. நானொரு சூத்திரன் மிலேச்சன். நான் எதற்காக அந்த சாஸ்திர விதிகள் எல்லாவற்றையும் குறித்து கவலைப்பட வேண்டும்."



அவர் மற்ற துறவிகளைப் போல கங்கைக் கரையில், தபோவனங்களில், இமயமலைச் சரிவுகளில் ஆசிரமங்களில் தங்கி 'ஆன்மிக விவாதத்'தில் மூழ்கியிருந்தவரல்ல கடவுளை கங்கைக் கரையில் தேடிக் கொண்டிருக்காதீர்கள்: விளிம்பு நிலை மக்களிடம் சென்று அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் கடவுளை அவர்களின் வடிவில் தரிசியுங்கள்' என்றவர் அவர். கிராமங்களுக்குப் போய், படிப்பறிவற்ற ஏழை மக்களுக்கு எழுத்தறிவையும் அடிப்படை அறிவியலையும், புவியியலையும் கற்றுக்கொடுக்க முன் வருமாறும், சிங்கம் போன்று வீறுகொண்டு எழுந்து வருமாறும் ஆயிரமாயிரம் இளம் ஆண்களையும்-பெண்களையும் நோக்கி அறைகூவி அழைத்தவர் விவேகானந்தர்.

"ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத ஒருதாயின் பசியைத் தீர்க்க ரொட்டித் துண்டைத் தரத் தவறுகிற எந்தக் கடவுளையும் நாம் நம்பத் தயாராயில்லை; அத்தகைய கடவுள்களைத் தூக்கி இந்துமகா சமுத்திரத்தில் போடுங்கள்" என்று முழக்கமிட்டவர் அவர். தனது காலத்திய சனாதன இந்து தர்மம் 'தீண்டாமையின் மதம்'தான் எனக்குறிப்பிட்ட அவர், படித்த இந்துக்களின் மீது வைக்கிற விமர்சனங்கள் இவை! "சாதிப் பிளவுகளின், மூட நம்பிக்கைகளின் கொடிய சக்கரங்களில் சிக்கி சிதைந்து போனவர்கள்; ஒரு துளியளவு தர்மமும் இல்லாத போலித்தனமான கோழைகள்!"

1880-ம் ஆண்டு தொடங்கி 1893 வரையிலான பதிமூன்றாண்டு காலம், விவேகானந்தர் இந்தியாவின் பல முக்கியமான பகுதிகளில் ஒரு சூறாவளியைப்போன்று அலைந்து திரிந்த காலம், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், குஜராத், மகாராஸ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் கேரளா முதலான பகுதிகளில் சுற்றியலைந்தார் அவர். இந்தியாவின் உழைக்கிற மக்களின் வாழ்க்கை அவலங்களை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் இந்தப் பயணங்களின் போது அவர் கண்டறிந்திருக்கிறார். கன்னியாகுமரிக்கு 1892-ல் வந்த அவர், அங்கு கடற்கரையிலிருந்து படகில் சென்று சேர வேண்டிய தூரத்திலிருந்த பெரும் கடற் பாறைகளுள் ஒன்றின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மீணடும் அவர் கடற்கரைக்குத் திரும்பியபோது, சிகாகோவில் நடைபெறப் போகிற அனைத்து மதங்களின் பேரவையில் கலந்துகொள்வதற்காகவும், இந்தியாவின் கோடானுகோடி எளிய மக்களுக்கு உதவுமாறு மேற்குலகின் காதுகளுக்கு எட்டும் வகையில் உரத்துப் பேசுவதற்காகவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானித்திருக்கிறார்; தரித்திரர்களே உங்கள் கடவுள் என்பதே விவேகானந்தர் முன்வைத்த செய்தி. அவரது காலத்தைத் தாண்டி மிக முன்னோக்கிச் சிந்தித்தவர் அவர். இந்தியாவிலிருந்து மிக விரிவான அளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட முதல் இந்தியர் அவராகவே இருக்கக்கூடும்.

பெண்களை அடிமையாக நடத்தி, புறக்கணித்துக் கொண்டிருப்பவர்கள் - அதாவது சமகால இந்தியர்கள், பயங்கரமான பாவிகள் என்றார் அவர். "பலபத்து லட்சம் மக்கள் பசியினாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கையில், அவர்களுடைய உழைப்பின் பயனை அறுவடை செய்து படித்துவிட்டு, வளமாக வாழ்ந்தாலும் அவர்களின்பால் கடைக்கண் பார்வையைக்கூடத் திருப்பாமலிருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்றே கொள்வேன்" என்கிறார் அவர்.

சிகாகோ உரையின் மூலம் பெரும் புகழ் பெற்றவராக அவர் பல நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான அறிஞர்கள், பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் உட்பட வெவ்வேறு விதமான மக்கள் பிரிவினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். காரணம், அவர் காலத்தில் மிகவும் கலகத்தன்மையுடையவராகவும், மரபுகளை மீறியவராகவும் விவேகானந்தர் இருந்ததே காரணம். 1896, நவம்பர் 1-ம் தேதியன்று அவர் மேரி ஹேலுக்கு எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"நான் ஒரு சோஷலிஸ்ட். காரணம் அது மிகச் சரியான அமைப்பு என்று நினைப்பதால் அல்ல. ஒன்றுமில்லாமல் பட்டினி கிடப்பதைவிட அரை ரொட்டித் துண்டு மேல் என்பதே காரணம். மற்ற அமைப்பு முறைகளை நாம் முயன்று பார்த்து அவற்றின் போதாமையையும் உணர்ந்துவிட்டோம். இதையும் முயன்று பார்த்துவிடலாமே!"

பல சந்தர்ப்பங்களில் கையில் சல்லிக்காசு இல்லாமல் பசியினால் வீடுதோறும் இரந்து திரிய வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. களைப்பும், பசியும் மேலிட்ட நேரங்களில், எவராவது ஒரு நல்ல மனிதர் அல்லது மனுஷியின் உதவியுடன் அவர் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்திருப்பது பல நிகழ்ச்சிகளிலிருந்து தெரிய வருகிறது. சொகுசான அயல்நாட்டு மாளிகை அறைகளில் வசிக்கும் வாய்ப்பும், நல்ல உணவும், புகைத்தல் பழக்கமும் வாய்க்கப்பெற்றவராகவும் இருந்திருக்கிறார் விவேகானந்தர். மிகவும் எதிர்பாராமல், 1902-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி அவரின் மறைவு நிகழ்நதது. தொடர்ந்து அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அளப்பரிய சாதனைகளை அவர் நிகழ்த்தியிருக்கவும் வாய்ப்புண்டு.

150-வது ஆண்டு நிறைவையொட்டி, விவேகானந்தரின் சிந்தனைகளில் இன்றைக்கும் பொருந்துகிறவை நிறைந்து இருக்கின்றன. அவற்றைச் சரியான விதத்தில் பயின்று, புரிந்துகொண்டு, இன்றைய தேவைகளுக்கேற்ப பிரயோகிப்பதில்தான் நாம் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம்!

(நன்றி: அறிவுக்கடலே அருட் புனலே ரா.கணபதி ஞானதீபம்-தொகுதி. ஃப்ரண்ட் லைன் பிப்-8-2013)

நன்றி : இளைஞர் முழக்கம்


கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அனுபவக் கணக்கு. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஒரு சாமானியரின் வாழ்க்கைக் கணக்கு, தாம் பிறந்தது இந்தியாவிலா பர்மாவிலா என்ற மர்மத்தைத் தேடுகிறது, இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவிலிருந்து சிரமமான மலைப்பாதை வழியாக ஜப்பான்காரனின் குண்டு மழைகளின் நடுவே கால் நடையாக இந்தியா திரும்பிய அனுபவத்தைத் சொல்கிறது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே நடத்திச் சென்ற ஒரு பழ கமிஷன் ஏஜென்ட் வியாபாரியின் கதை. தாத்தாவிடம் கதை கேட்ட பேரனின் படைப்பு.






மேரி ஜேன் தூக்கத்திலேயே அலுப்புடன் புரண்டு புரண்டு படுத்தாள். கடினமான கரடுமுரடான படுக்கையின் மீது அவள் தூங்கியதுதான் அலுப்பிற்குக் காரணம். இந்தப் படுக்கை ஒன்றே ஒன்றுதான் அவளிடம் இருந்தது. கடினமான படுக்கைதான் ஒரு கறுப்பினக் குழந்தைக்குப் பொருத்தம். மென்மையான படுக்கைகள் வெள்ளை மனிதர்களுக்கு! என்றிருந்த காலமது.

என்று துவங்குகிறது இந்த புத்தகம். மேரி ஜேன் சுதந்திரமாகப் பிறந்தவள். பருத்திக்காட்டிற்கு செல்லும் வழியில் முன்னால் ஓடும் மேரியைப் பார்த்து அவளது தந்தை சந்தோஷமடைகிறார். இல்லாவிட்டால் அவளும் தொலைதூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள வெள்ளை குழந்தைக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பாள். அவளது தாயும் தந்தையும் அடிமையாக இருந்தவர்கள். உள்நாட்டுக் கலவரத்தின்போது ஆப்ரஹாம் லிங்கன் வெளியிட்ட "அமெரிக்காவின் தென்பகுதி வாழ் கருப்பின அடிமைகள் யாவரும் சுதந்திர மக்கள்" என்ற பிரகடனத்தால் சுதந்திரம் பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரம் பெற்றபின் பிறந்தவள் மேரி.

பருத்திக்காட்டில் குடும்பமே (சிறுவர் முதல் பெரியவர் வரை) தினமும் பாடுபட வேண்டும். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டியாக வேண்டும். அவளது அம்மா வெள்ளையர்களின் துணியை துவைத்து இஸ்திரி போட்டுக்கொடுத்து சில்லரை செலவுகளை சமாளிப்பாள். கருப்பர்கள் வெள்ளையர்களின் வீட்டிற்குச் செல்வதானால் பின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதென்றால் மேரி சந்தோஷமாக செல்வாள். பெரிய பெரிய வீடுகள். காற்றோட்டமான ஜன்னல்கள். ஜன்னல்களுக்குக்கூட வெண்மையாக திரைச்சீலைகள்.

மேரி குதித்து ஓடினாள். அம்மா வெள்ளையர் வீட்டின் பின்வாசல் வழியே சென்றாள். பக்கத்தில் வெள்ளையர் குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய வீடு இருந்தது. அதற்குள் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மேரியை அழைத்தாள். மேரி மெல்ல மெல்ல உள்ளே சென்று விளையாடினாள். அப்போது அங்கே இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்தாள். உடனே அப்புத்தகம் அவள் கைகளில் இருந்து பிடுங்கப்படுகிறது. "உனக்குப் படிக்கத் தெரியாது" என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.

மேரிக்கு அந்தச் செயல் சொல்லொன்னா துயரத்தைத் தருகிறது. அந்த வார்த்தை அவளை படாதபாடு படுத்துகிறது. அப்பாவிடம் கேட்கிறாள் "அப்பா நான் படிக்க வேண்டும்." "மேரி நமக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதம்மா" என்கிறார்.

நாம் ஏன் இப்படி இருக்கிறோம். வெள்ளையர்கள் ஏன் அப்படி சொகுசாக வாழ்கிறார்கள். அவளுள் பலபலக் கேள்விகள். அந்தக் கேள்விகளைத் துறத்திச் சென்று பதிலைக் கண்டடையும் பெண்ணாக மாறுகிறாள்.

இதைப்படிக்கும்போது நமது நாட்டில் உள்ள தலித் மக்கள் கண் முன்னே வருகிறார்கள். அவர்கள் பட்ட அத்தனை துயரத்தையும் இன்றும் இவர்கள் பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களாவது வேறு நாட்டில் இருந்து அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள். ஆனால் தலித் மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மேரி மேக்லியோட் பெத்யூனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். மேரியின் சுயசரிதையைப் படித்து தன்னுள் உள்வாங்கி தனது தேர்ந்த நடையில் தந்துள்ளார் நூல் ஆசிரியர் கமலாலயன். ஒரு விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப் போல் இருக்கிறது. எழுத்து ஒரு பசுமையான மலைப்பாதையில் பயணம் செய்வதைப்போல, தொண்டைக்குள் வழுக்கிச்செல்லும் இனிப்புப்போல படிக்கப்படிக்க இனிமையாக இருக்கிறது. ஒரு சுயசரிதை விறுவிறுப்பான புத்தகமாகவும் இருக்கும் என்று இதைப்படிக்கும்போது உணர முடிகிறது.

உனக்குப் படிக்கத் தெரியாது
-கமலாலயன்

வாசல்
40-D\3, முதல் தெரு,
வசந்தா நகர், மதுரை-625 003.
மொபைல் 91 98421 02133
நீயா நானா
6/13/2011 | Author: ஜெயந்தி
"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்."
"என்னம்மா விஷயம்"
"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் பண்ணி வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு சொல்றாடா"
ரூமுக்குள் வந்த கணவன் "என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான"  என்றான்
"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான் அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி எறிஞ்சுடுவீங்களா?"

"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா."
"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்."
"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா"
"டாக்டர் எல்லாமே சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது. குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்".
"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம் சாப்புட்டா கொழந்தைக்கு சேராது"
"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது."
"ஏண்டா கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா வளரும்"
"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா? அப்புறம் இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல"
"ஏண்டா ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா சொல்றாங்க"
"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான் குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம். ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்"
"ஏண்டா அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்"
"இங்க பாருங்க குழந்த அதுவே ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல"
கணவன் மெல்ல "ஏ
ண்டா செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்"
"நான் அஜ்ஜஸ் பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு, எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்"

கணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன் திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'
ரத்னா ஸ்டோர்சும் நானும்
4/27/2011 | Author: ஜெயந்தி

நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும் வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு போயிட்டேன்.

வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும் அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார். நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப் பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.

எங்கேயோ விட்டுவிட்டேன் என்பது புரிந்தது. பாத்திரங்கள் வாங்கிய இடத்தில்தான் விட்டிருக்க வேண்டும். நான்காவது மாடிக்கு வரும்போதே கையில் பர்ஸ் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே கீழ் தளத்திற்குச் சென்றேன். அந்தப் பெரியவரைப் பார்த்து என்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டது என்றேன். அவரும் நானும் நாங்கள் பாத்திரங்கள் எடுத்த இடத்தில் எல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. பெரியவர் தேடும்போதே சொல்லிக்கொண்டே வந்தார் "ஏம்மா பர்செல்லாம் பத்திரமா வச்சிக்க வேண்டாமா? இங்க எவ்வளவுபேர் வந்துபோற எடம். எங்கயாவது விழுந்திருந்தா யார் எடுத்தாங்கன்னு தெரியும். இவ்வளவு பேர் வந்துபோற எடத்துல பர்ஸ் விழுந்திருந்தா அங்கயே இருக்குமா? பாத்து வச்சுக்க வேண்டாமா" என்று திட்டிக்கொண்டே வந்தார்.



அவர் சொல்வது உண்மைதானே. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே. பர்சைத் தொலைத்த குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், வாங்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க காசு இல்லை. இதை வாங்க இன்னொரு முறை வரவேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது. இதையெல்லாம்விட முக்கிய பிரச்சனை பஸ்சுக்கு கையில் காசு இல்லை. சரி ஒரு ஆட்டோ பிடித்துப் போய் வீட்டில் இருந்து காசு எடுத்துக்கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். பர்சு தொலைத்தது ஒரு பக்கமுன்னா ஆட்டோ செலவு ஒரு பக்கமான்னு ஓடியது. சரி என்ன பண்றது தப்பு பண்ணியாச்சு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.

திரும்பவும் அடுத்த ரவுண்டு வரத் துவங்கினோம். பில்லை வாங்கிக்கொண்டு பாத்திரங்கள் கொடுக்கும் பகுதியில் இருந்த ஒருவரிடமும் பர்சு தொலைந்த விஷயத்தை சொன்னோம். அவர் அங்கு வேலை செய்யும் மற்றவர்களிடமும் கேட்கச் சொன்னார். இன்னும் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து தேடினார். அங்குள்ளவர்களிடமும் கேட்டுக்கொண்டே தேடினோம். ம்ஹும் எங்கும் இல்லை. பெரியவர் சொன்னார் நாலாவது மாடியில ஒருமுறை பாத்திருங்க என்றார். சரி அங்க ஒருமுறை பாத்துட்டு வீடுபோய்ச் சேர வேண்டியதுதான்னு கெளம்பி லிஃப்டு இருக்கும் இடத்தின் அருகே சென்றேன். "இங்க வாங்க"  என்று பெரியவர் அழைத்தார். "கேஷ் கவுண்டர்ல ஒரு பர்சு இருக்காம். உங்களுதா பாருங்க"  என்றார். கேஷ் கவுண்டர் சென்றேன். அங்கே இருந்தவர் உங்க பர்சு அடையாளம் சொல்லுங்க என்றார். என் பர்சு அடையாளத்தைச் சொன்னதும் என் பர்சை எடுத்து என் கையில் கொடுத்தார். அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். என் கண்களில் கண்ணீர் அது பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. வாய் அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. எங்க கடையில வேலை பாக்குறவங்க கையில கெடச்சா கஷ்டமருக்கு கெடச்சுரும். வேற யாராவது எடுத்துருந்தா எங்களால ஒன்னும் செய்ய முடியாது என்றார் பெரியவர். அங்காடித் தெரு படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபத்திற்கு வந்தது யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் இருக்கும் நாட்டில்தான் இவர்களைப்போன்றவர்களும் இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொள்வதையே பார்த்துப்பார்த்து நொந்து போயிந்து கண்களுக்கு இந்த மனிதர்களைப் பார்த்ததும் கண்கணில் தாரைதாரையாக நீர் ஓடியது. அடுத்த நாள் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும். ஆனாலும் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருக்கும் இந்த மனிதர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இது நடந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தினரும் கோல்டன் பீச் சென்றோம். அங்கே ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ஊஞ்சள் இருந்தது. பிள்ளைகள் ஆடத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் விளையாடி முடித்ததும் கிளம்பிவிட்டோம். தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்த இடத்திலேயே பர்சை வைத்துவிட்டு வந்துவிட்டார். நாங்கள் ஒரு பத்து நிமிடநேரம் நடந்திருப்போம். அவருக்கு பர்ஸ் மிஸ்சானது தெரிந்துவிட்டது. வந்தவழியே திரும்பி பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கே அவர் பர்சை வைத்தாரோ அதே இடத்தில் அப்படியே இருந்து. எவ்வளவுபேர் வந்துபோகின்ற இடம்.

நேற்று இன்னொரு சந்தோஷமான நிகழ்ச்சி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு வேலூர் கலைச்செல்வியைப் பார்த்தேன். அவங்க பர்சேஸ் முடித்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். எதிர் எதிரே பார்த்துக்கொண்டதும் சந்தோஷம் பொங்கியது. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். 7ம் தேதி திவ்யா கல்யாணத்துல மீதிய பேசலாம்னு சொன்னார். கல்யாணத்துக்கு ஆனந்த், பப்லு எல்லாம் வர்ராங்களாம் என்றார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அறிவொளி இயக்கம் டீம் ஒன்னு கூடப்போகுதுன்னு நினைக்கிறேன்.
மகப்பேறு வரமா? சாபமா?
3/08/2011 | Author: ஜெயந்தி
மகளிர் தினத்திற்காக

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். பிள்ளை இல்லா பெண்கள் வாழ்நாளெல்லாம் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்வார்கள்.

அப்படி ஆசையுடன் குழந்தை உருவானபின் பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த சிரமங்கள் ஏராளம். ஆனால் பெண் அது அத்தனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டாள். கர்பத்தினால் உண்டாகும் சந்தோஷம் மட்டுமே அவளிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.

முதல் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. மூன்றாவது மாதத்தில் இருந்து மசக்கை என்ற வாந்தி மயக்கம் தொடங்கும். சிலருக்கு வாந்தி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். சிலருக்கு குழந்தை நின்றதிலிருந்து பிறக்கும்வரை வாந்தி இருக்கும். வாந்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் ஐந்து மாதம் வரை சில வாசனைகளை முகர நேரிட்டால் குமட்டும். ஐந்து ஆறு மாத்திற்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, தொடை வலி எல்லாம் வரும். ஏனென்றால் சுமையை சதா சர்வ நேரமும் சுமந்துகொண்டே இருப்பதால் வரும் வலிகள். குழந்தை பிறக்கும் நேரம் வரும் வலி அம்மம்மா அதை சொல்லி முடியாது. பொருக்க முடியாத வலியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை அனுபவித்தே பிள்ளையை பெற்றெடுக்கிறாள். முதல் பிரசவத்திற்கு அதிக நேரம் வலி இருக்கும். சிலருக்கு ஒரு நாள் முழுக்கக்கூட வலி இருக்கும். குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது வலி இருக்கும். இரண்டாவது மூன்றாவது டெலிவரி என்றால் வலியின் நேரம் இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரையே இருக்கும். இது சாதாரண பிரசவத்திற்கு அதாவது சுகப்பிரசவம் என்பார்களே அவர்களுக்கு.

சிலருக்கு குழந்தை உருவான பின் பிரஷர், சுகர் போன்றவை வரும். சிலருக்கு அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அம்மா அப்பா நெகடிவ் பாசிட்டிவ் ரத்தங்களாக இருந்தால் குழந்தை உருவானாலும் அம்மாவின் ரத்தமாக இருந்தால் ஒன்றும் ஆகாது. அப்பாவின் ரத்தமாக இருந்தால் அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஊசி போட்டு டிரீட்மென்ட் கொடுத்து சரியாக பிறக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு குழந்தை உருவானதிலிருந்து ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது. என்னவென்று பார்த்தால், குழந்தைக்கு அம்மாவிடமிருந்து உணவு, காற்று, ரத்தம் அதைத்தையும் எடுத்துச் செல்ல ப்ளாசண்டா எனப்படும் தொப்புள்கொடி இருக்கும். இந்தக் குழந்தை அந்த ப்ளாசண்டாவில் மிதித்து மிதித்து குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது. குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்தக்குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டார்கள். இன்னும் ஸ்கேனில் குழந்தை வளர்ச்சி சரியில்லை என்று தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அபார்ஷன்களும் குழந்தை பிறப்பிற்கு சமமானவை. பெண்களுக்கு இப்படி எத்தனையெத்தனையோ சிரமங்கள்.

சிலருக்கு ஏழாம் மாதம் எட்டாம் மாத்திலேயே குழந்தை பிறந்துவிடும். அதன் பிறகு அந்த குழந்தையை வளர்க்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்தாக வேண்டும்.

குழந்தை பிறக்கும்போது முதலில் கை, கால் வந்தால் சிரமம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்துவிட்டாலும் சிரமம். இன்னும் கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற நிறைய காரணங்களுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள். சில மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரியையே ஆபரேஷன் கேஸாக்கிவிடுவதும் உண்டு. நார்மல் டெலிவரிக்கு ஒருநாள் வேதனை என்றால், ஆபரேஷன் செய்துகொள்பவர்களுக்கு பலநாள் வேதனை. என் உறவுப் பெண்ணுக்கு ஆபரேஷனின்போது கொடுக்கப்படும் குளோரோபாமின் காரணமாக ஐந்துநாள் தலைவலித்தது. அது இல்லாமல் ஆபரேஷன் செய்த வலி. நடமாட முடியாமல் குழந்தையை தூக்க முடியாமல் ரொம்ப அவஸ்தை.

இவை எனக்குத் தெரிந்தவரை உள்ள வேதனைகளே. இன்னும் எனக்குத் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ. குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு பிறப்பு என்பார்கள். அதனை மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தை பிறந்த பின்னும் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது பெண்களின் தலையிலேயே. சொற்ப ஆண்கள் குழந்தை வளர்ப்பிற்கு சின்னச்சின்ன உதவிகள் செய்வார்கள். சொற்ப ஆண்கள் பிள்ளைகள்மேல் பாசமாக இருப்பது மட்டுமே தங்கள் கடமை என்று நினைப்பார்கள். அதிகபட்சமான ஆண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இன்னும் சிலர் பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். சிலர் தான் சம்பாதிப்பதையும் குடித்துவிட்டு மனைவி சம்பாதிப்பதையும் அடித்துபிடுங்கிக்குடிப்பார்கள். எப்படி சூழ்நிலையாக இருந்தாலும் தாய்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

இதில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஏதோ அந்தத் தாயின் மிகப்பெரும் தவறுபோல் தூற்றப்படுவாள். ஆணாகப் பிறக்க வேண்டுமா, பெண்ணாகப் பிறக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதே ஆண்களின் அணுக்கள்தான்.

மகப்பேறு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பெண் மூன்றாவது குழந்தைக்கு ஒருநாளெல்லாம் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். "மூணாவது குழந்தையின்னா ஈசியா பெறந்துருமே. இவங்க ஏன் இவ்வளவு சிரமப்படுறாங்க" என்று அங்கே இருந்த நர்சிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணு. அதுக்கடுத்து ரெண்டு அபார்ஷன். அதுனால அவங்களுக்கு ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. அதுனாலதான் அவஸ்தப்படுறாங்க. அவங்க இந்த ஆஸ்பத்திரியிலதான் வேல பாக்குறாங்க" என்று சொன்னார். அபார்ஷன் ஆக்கப்பட்ட இரண்டு கருவும் பெண்ணாக இருந்திருக்கும் என்று புரிந்தது. அந்தப்பெண்ணுக்கு சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது.

அதே நர்ஸ் இதை சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார், "இதுவாவது பரவாயில்ல. ஒரு சேட்டு வீட்டு லேடிக்கு ஏழு பொண்ணு. எட்டாவது டெலிவரிக்கு வந்திருந்தாங்க. அவங்க ஒடம்புல ரத்தமே இல்ல. ரத்தம் ஏத்தி டெலிவரி பார்த்தோம். நல்ல வேளை அது ஆண் கொழந்த". இந்தப் பேச்சு நடந்தது 30, 40 வருஷத்துக்கு முன்னால இல்ல. 2011 ஜனவரியில பேசப்பட்டது.

வறுமை நிலையில் இருந்தாலும் தான் சாப்பிடாவிட்டாலும் தன் பிள்ளையை பசியாற்றுவாள் தாய். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறிப்போவாள். பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்ப்பாள். பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த தாய்ப்பாசம். கேட்டால் இது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்பார்கள். இது வரமா? சாபமா? இதனாலேயே பெண் அடிமையாகிறாள். எல்லா துன்பங்களையும் பொருத்துக்கொள்கிறாள்.

இது உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால் நீ அதை வைத்துக்கொண்டு அடிமையாக இரு. எனக்கு அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துவிடாதே. அந்த வரம் எனக்குக் கிடைத்தால் என்னுடைய சுதந்திரம் சந்தோஷம் எல்லாம் போய்விடும். நான் உலகை ஆளப்பிறந்தவன்.

நீ கேவலமானவள். நான் உயர்ந்தவன் - அந்தக் கேவலங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நீ.

நீ வலிமையற்றவள். நான் வலிமையானவன் - ஒரு ரோடு ரோலர மேல ஏற விட்டு எந்த சேதாரமும் இல்லாமல் சூப்பர்மேன் மாதிரி எழுவீர்களா? ஒரு சின்ன இரும்புக் கம்பியால் தலையில் அடித்தால் தாங்குவீர்களா?

உனக்கு மாதவிடாய் வருகிறது அதனால் நீ கேவலமானவள் - மகனே அது வரலன்னா நீயே இல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை உருவாகும். அது கருவாகாவிட்டால் சிதைந்து ரத்ததுடன் வெளியேறும். அடுத்த மாதம் புது கரு உருவாகும். இது மனித இனப்பெருக்கத்திற்கான சுழற்சி. அதையே கேவலமானதாக மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு வரக்கூடாது - அது வரவில்லை என்றால் அந்தக்கோவிலே இல்லையே.

நீ அப்போதுதான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்திருந்தாலும் நான் பாலியல் பலாத்காரம் செய்வேன் - நீ மனுசனாடா? ஒரு மிருகம்கூட இந்தச் செயலைச் செய்யாது.

நீ எனக்கு பணமும், பொருளும் கொடுத்தால்தான் நான் உனக்கு கணவனாக இருப்பேன் - அது வேசித்தனம்.

நீ எவ்வளவு பணம் நகை கொண்டு வந்திருந்தாலும், வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் நீ எனக்கு அடிமை என்பதை மறந்துவிடக்கூடாது - ஒரு அடிமையைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள். இங்கே தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ வேலைக்குச் சென்றாலும் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு வீட்டையும் நீதான் கவனிக்க வேண்டும் - நான் வலிமையானவன். நான் சும்மாவே இருப்பேன்.

சரி இப்படியெல்லாம் எங்களை வைத்திருக்கிறீர்களே உலகத்துப் பெண்கள் எல்லாம் ஒருநாள் கூடி நமக்கு இந்த உலகத்துச் சந்தோஷங்கள் சொந்தமில்லை அதனால் நாம் மனித உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்.

ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே வீட்டைவிட்டு ஓடிவிடுகிறீர்கள் அல்லது தற்கொலைக்கு முயல்கிறீர்கள். ஆனால் மெலிந்தவர்கள் என்று சொல்லப்படும் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ்வளவிலும் சமாளித்து பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து நிற்பாள்.

இது அனைத்து ஆண்களிடமும் கேட்கப்படுபவை அல்ல. பெண்களை புரிந்துகொண்ட பெண்களும் உலகத்தில் சந்தோஷமாக வாழ வேண்டியவர்களே என்று நினைக்கும் ஆண்களும் இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களால்தான் நிறையப் பெண்களால் நிம்மததிப்பெருமூச்சு விட முடிகிறது.

டிஸ்கி : இவ்வளவு நாள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல். இப்போதும் தற்காலிகமாகவே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே முழுமையாக வருவேன் என்று நினைக்கிறேன். எனக்கு பின்னூட்டமிட்டு அன்பை தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் இல்லாதபோதும் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கிய எம்.அப்துல் காதருக்கும் நன்றி. என்னை மறந்துருராதீங்க நண்பர்களே.