பதிவுலகம்
12/04/2010 | Author: ஜெயந்தி
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.

ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.

சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.

இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)

ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்

மயிலிறகைப் பார்த்தால்
சிறுவயது பள்ளித்தோழனோடு
புத்தகத்தில் குட்டிபோட வைத்து
மயிலிறகு வளர்த்த ஞாபகம்

சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த
தோழி ஞாபகம்

யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?

டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
சிலர் தமிழ்படங்களை விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம் என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள் எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.

எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன். அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம் போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன கோபத்தோடு போயிற்று.



இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 - வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல் அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக இருக்கும்.

சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு, அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச் செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.

அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில் பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும் பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும் சிறுவன்.

இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள் கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும் மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு. அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும், எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.



இப்படிப்பட்ட படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும் முடிகிறது.

இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில் பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப் பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப் படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம். இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது. சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும் பார்த்திருப்பார்கள்.

டிஸ்கி :  The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப் படத்தின் விமர்சனம் பிரசன்னா (கொத்து பரோட்டா) நன்றாக செய்துள்ளார்.
காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.



கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.

கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.

இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.

இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.



நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.

நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான்  செய்துகொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?

அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.

நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?

இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.
என்கவுண்டர்
11/11/2010 | Author: ஜெயந்தி
குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.



அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்


நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.
சந்தன முல்லை என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.

5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.

5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.

ஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)



ஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.

அடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.

எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.

இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.

நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.

ஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.

நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?

அரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.
ஒரு காதல் கதை
10/19/2010 | Author: ஜெயந்தி
அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.

"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.

"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.

"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."

35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.

"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."



"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"

"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"

"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."

"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."

"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."

"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"

"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"

"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"

"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"

"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."

"ம் தெரியும்."

"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."

"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."

பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.

"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."
பிறந்த நாள்
10/16/2010 | Author: ஜெயந்தி


இந்த போட்டோவுல இருக்கவங்களுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம். அவங்களுக்கு சுய தம்பட்டம் பிடிக்காதாம். அதுனால என்கிட்ட போட்டோவ குடுத்து போடச்சொன்னாங்க.

அவங்க பிறந்த தேதி சரியாத் தெரியாதாம். ஏன்னா அவங்க அம்மா தமிழ் மாசம் தமிழ் தேதிய மட்டும்தான் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. ஆனா அவங்க கொடுத்த ஒரு க்ளூ என்னன்னா இவங்க பொறந்த நாள் அன்னிக்கித்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடிக்கிட்டிருந்தாங்களாம். எல்லாரும் சாமி கும்பிட்டு பொரியெல்லாம் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். அன்னிக்கி சாயங்காலம் 7 மணிக்கு நீ பொறந்தன்னு சொன்னதால இவங்க ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னிக்கே தன்னோட பொறந்த நாளா வச்சுக்கிட்டாங்களாம். அவங்களுக்கு ஒரு சந்தோஷம் படிப்பக் கும்புடுற நாள் அன்னிக்கி பொறந்ததுதான். (யாருப்பா அது அன்னிக்குத்தான் ஆயுதத்துக்கெல்லாம் பூஜை போடுவாங்கன்னு சொல்றது)

அப்புறம் என்னோட வயசு 30 முடிஞ்சு 29 நடக்குது. அது கொஞ்ச வருஷமா அப்படித்தான் போயிட்டிருக்கு. (எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)

என் ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள்

நான் இதை ஆலோசிச்செல்லாம் துவங்கல. இது ஒரு கோ-இன்சிடென்ட்ன்னு சொல்லலாம். என்னோட கணவர் என் மகனிடம் தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவருக்கு ஒன்று ஆரம்பித்துக்கொடுத்துவிட்டு நீயும் ஒன்னு ஆரம்பிக்கிறயான்னு கேட்டான்.

அவன் கிண்டலாக கேட்கிறான்னு நெனச்சுக்கிட்டு, ஏய் நானென்ன இலக்கியவாதியான்னு கேட்டேன். அதுக்கு அவன் அப்படி இல்லம்மா இது வந்து ஒரு டைரி எழுதற மாதிரி யாரு வேணும்னாலும் எழுதலாம், என்ன டைரிய யாரும் படிக்க மாட்டாங்க. ப்ளாக்க கொஞ்ச பேரு படிப்பாங்கன்னு சொன்னான். சரி எனக்கு நாலு வார்த்தை சேர்ந்தாப்போல பேசவே தெரியாதே நான் என்னத்த எழுதப்போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் உனக்கு தோணுறத எழுதுன்னு சொல்லிட்டுப்போயிட்டான்.

எனக்கு ப்ளாக்குன்னு ஒன்னு இருக்கறதே அப்பத்தான் தெரியும். எனக்கு ஆதி மூல கிருஷ்ணன் ப்ளாக் எப்படியோ படிக்கக் கிடைத்தது. அதில் குருவி பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு அவர் எழுதி தங்கமணி இடுகைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒரு பெண் பதிவரின் இடுகை படிக்கக் கிடைத்தது. அதில் அவர் கிள்ளிப்போட்ட சாம்பார் கதையை எழுதியிருந்தார். (அவர் பெயரை மறந்துவிட்டேன் மன்னிக்கவும்)அதைப் படித்தவுடன் நமக்குத்தான் இது போல கதையெல்லாம் நல்லாத் தெரியுமேன்னு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. ஒரு மூணு இடுகைக்கான மேட்டரை டைப் பண்ணி என் மகனிடம் காட்டினேன். நல்லாயிருந்தா நான் ப்ளாக் ஆரம்பிக்கிறேன். இல்லன்னு சொன்னேன்னா ப்ளாக்கே வேணாம். அவனும் படிச்சுட்டு நல்லாயிருக்கு. உனக்கு ப்ளாக் ஆரம்பிக்க எல்லாத் தகுதியும் இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்துட்டான். உடனே ஒரு ப்ளாக்கும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டான். இதெல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்தது. என் ப்ளாக் அக்டோபர் 20ம் தேதி துவங்கியுள்ளேன். இன்னும் நாலு நாள் இருக்கு. அட்வான்ஸ் பிறந்த நாள்.

அப்பறம் ஒருஒரு இடுகையையும் போட்டுவிட்டு யாராவது படிப்பார்களா என்று எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் நேர்ந்த கதையாகத்தான் இருக்கும். பிறகு அடுத்தவருக்கு நாம் ஓட்டும் பின்னூட்டமும் போட்டால்தான் நமக்கும் அது கிடைக்கும் என்ற ப்ளாக் உலக அரசியல் எல்லாம் என் மகன்தான் எனக்கு சொல்லித்தந்தான்.

அப்பறம் காட்சியில இருந்து அஞ்சல் தலை பகுதிக்கு எழுதுமாறு கேட்டார்கள். நானும் எழுதி அனுப்பினேன். போடுவார்களோ என்னமோன்னு தயக்கத்தோடேயே அனுப்பினேன். அவர்கள் இரண்டு நாட்களில் போடுவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். பிறகு பார்த்தால் அடுத்த நாளே போட்டுவிட்டார்கள். தந்தையர் தினம் என்பதால் என் கடிதம் பொருத்தமாக அமைந்ததால் போட்டுவிட்டார்கள் போலும். பிறகு பெண்ணியம் ப்ளாக்கிலும் என் இடுகைகளை எடுத்துப்போட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளாலயும் எழுத முடியும்னு இதுக்கு முன்னால நான் நெனச்சதே இல்ல. பெண்ணியத்தில் நிறைய திறமைசாளிகளின் படைப்புகளை போடுகிறார்கள். அதில் என்னுடையதும் வந்தது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஓட்டுப்போட்டு பின்னூட்டம்போட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவுலக சண்டைகள் விளைவு
10/14/2010 | Author: ஜெயந்தி

மக்களே இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.





டாக்டர்: என்னாச்சு
பெண்: டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.


---------------------


பிரபல பதிவர்: இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.



----------------------



வக்கீல்:
ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றீங்க?
ஆண்: பின்ன என்னங்க கம்ப்யூட்டர் முன்னால உங்காந்தவ எந்திரிச்சே வர மாட்டேங்கறா. ப்ளாக்ல ஏதோ சண்டையாம். அது இப்ப முடிஞ்சுரும் அது முடிஞ்சவுடனே வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.
வக்கீல்: ஏங்க ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா சாப்பிட்டாத்தான் என்ன?
ஆண்: நீங்க வேற சார். அவ ஒரு மாசமா கம்ப்யூட்டர் முன்னாலேயேதான் உட்காந்திருக்கா. நான் வீட்டுல சாப்பிட்டு ஒரு மாசமாச்சு.



----------------------

கூகுல் மேனேஜர்: நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே நிறுத்திட்டாங்க?
என்ஜினியர்: ஏதோ ப்ளாக்குல சண்டையாம் சார். அதுனால எல்லா சாட்டையும் பப்ளிக்கா ப்ளாக்ல போட்டுட்டாங்களாம். அதுனால யாருமே சாட் பண்றதில்ல. இ மெயில் அனுப்பறதுகூட குறைஞ்சுக்கிட்டே வருது சார்.
மேனேஜர்: நீ உடனே போயி எப்டியாவது சண்டைய நிறுத்திட்டுவா. உனக்கு ப்ரமோஷனும் இன்கிரிமென்டும் தர்றேன்.
என்ஜினியர்: சண்டைக்கு உள்ள போனே வெளியவே வர முடியாது. இந்த வேலையே எனக்கு வேண்டாம் சார் வேலைய ரிசைன் பண்றேன்.



-------------------

-------------------------

டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.

தோள்ல கை போடுறாங்கடா, அப்புறம் ஏதோ கடாமுடா நடக்குது. அப்புறம் குழந்தை பொறக்குது.
8ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு படிப்பார்கள் அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டே என்னை தாண்டி சென்றுவிட்டனர். இந்த வயதில் எல்லோருக்கும் வரும் இயல்பான சந்தேகங்கள். ஆண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசுவது இல்லை.

புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பூதம் உள்நுழைவதற்கு முன்பு செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு செக்ஸ் புத்தகங்கள் மற்றும் பிட்டு படம்ன்னு சொல்வாங்களே (பிட்டு படம் என்பது கூட இப்போது அனைத்து படங்களிலும் பேசப்படுவதால் தெரிகிறது) அதுமட்டும்தான்னு நெனைக்கிறேன். அதுவும் தேடிப்போக வேண்டும். எனவே அதிக முனைப்புள்ள பிள்ளைகள் மட்டுமே அதைத்தேடிப் போவார்கள். சில பிள்ளைகள் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இருப்பார்கள். அவர்கள் இந்தப்பக்கமே போக மாட்டார்கள். சில பிள்ளைகள் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தடுமாடுவார்கள். அவர்களைத்தான் இரண்டும்கெட்டான் என்பது. இவர்கள் எந்தப்பிள்ளைகளுடன் சேர்கிறார்களோ அதைப்பொருத்தே இவர்கள் பழக்க வழக்கம் அமையும். அதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை கண்கொத்திப்பாம்பாக கண்காணிப்பார்கள். இதெல்லாம் அந்தக்காலம்.

இப்போது நம் வீட்டு நடுக்கூடத்திற்கே டிவி மூலமாக அனைத்தும் வந்துவிழுகிறது. இன்டர்நெட்டைத் திறந்தால் கேட்கவே வேண்டாம். இப்போ உள்ள குழந்தைகளை தரம் பிரிக்க முடியுமா? அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் முன்னே வந்து விழுகிறது. உண்மையிலேயே அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும் மறந்துவிட்டோம். நமக்குத்தான் வரிசையில் நின்று மொட்டைபோட்டுக்கொள்ளுவதும் படத்தை பார்ப்பதும் என்று மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறதே.

அதனால் விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும் அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும் பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000. அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?

அப்புறம் சென்னை போன்ற பெருநகரங்களில்தான் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருப்பதால் அவர்கள் வீட்டைவிட்டு இங்கே வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றவுடன் வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் வாடகையை கன்னாபின்னாவென்று ஏற்றிவிடுகின்றனர். இதெல்லாம்போக அவர்கள் வீட்டு கமிட்மென்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.

இதற்கு நடுவில் ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தியாவையே சாஃப்ட்வேர் மக்கள்தான் வாங்கிக்கொள்வதுபோலவும் மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் போலவும் நிலத்தின் மதிப்பை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றிக்கொண்டனர்.

பன்னாட்டு கம்பெனிக்காரன் சொல்லிக்கொடுப்பதுபோல் உடை அணிகிறார்கள். சாப்பிடுகிறார்கள். கம்பெனிக்காரனுக்கு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமை இரவுகளில் இவர்களை ரிலாக்ஸ் பண்ணுகிறேன் என்று குடிக்க டான்ஸ் ஆட எல்லாம் கற்றுக்கொடுக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவன் சம்பாதிக்க வருகிறான். இவர்களை எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து அதன்படி வேலை வாங்குகிறான். அதாவது ஆடுகிற மாட்டை ஆடிக்கறப்பது பாடுகிற மாட்டை பாடிக்கறப்பது. நம் நாட்டை ஆள்கிற நமது ஆள்களுக்கே நமது கலாச்சாரத்தைப்பற்றி கவலையில்லாதபோது அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சாஃப்ட்வேர் பியுபிள்தான் நமது கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று அடுத்த பலி. நாம் நமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். பணம் சம்பாதிக்கும் மெஷின்களாக. சிறு வயதில் இருந்தே காலையில் எழுத்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். சாயங்காலம் வந்தவுடன் ஏதாவது கொறித்துவிட்டு டியூஷனுக்கு ஓட வேண்டும். சில பிள்ளைகள் தின்னக்கூட முடியாதபடி ஸ்கூல் அருகிலேயே டியூஷன் என்று அப்படியே படித்துவிட்டு வருவார்கள். 8 மணி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து அதன்பிறகு ஹோம் ஒர்க் செய்துவிட்டு படுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ரொடீன் ஒர்க் இதுதான். அவன் கல்லூரி படிப்பு முடிக்கிறவரை. அவனுக்கு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. படிப்பு படிப்பு மட்டுமே தெரியும். சரி பள்ளியிலாவது நமது வாழ்க்கைமுறை நாட்டு நிலைமை பற்றியெல்லாம் சொல்லித்தருகிறார்களா என்று பார்த்தால், அங்கே புத்தகத்தை மனப்பாடம் பண்ணி பரிட்சையில் வாந்தி எடுக்கத்தான் சொல்லித்தருகிறார்கள்.

படிப்பு முடிந்ததும் நேராக பன்னாட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறான். அவன் சொல்லித்தருவதுதான் சரியான வாழ்க்கை முறை என்று நினைக்கிறான். அதைப் பின்பற்றுகிறான். அவனது நிலைமைப் பாருங்கள் உலக்கைக்கு ஒருபக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிங்கற மாதிரி, அவன் கம்பெனிக்காரன் சொல்ற மாதிரி வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கே அவன் வித்தியாசமாக பார்க்கப்படுவான். அதன்படி நடந்தால் நமது மக்களால் சாஃப்ட்வேர் மக்கள்தான் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று போடும் கூப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இதுல வேடிக்கை என்னன்னா பெண்களை மட்டும் டான்ஸ் ஆடக்கூடாது என்று தூக்கிப்போட்டு மிதிப்பார்கள். அவர்களும் இதேமுறையில் படித்து வந்தவர்கள்தானே. அவர்கள் தனியாக வானத்தில் இருந்து குதித்துவிடவில்லையே. அவர்களை மட்டும் தண்டிப்பது ஏன்?

புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.

அப்போதே அரசாங்கம் எங்கள் பிள்ளைகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குடி, டான்ஸ் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர்களைத்தானே தடுத்திருக்க வேண்டும். உள்ளே நுழைபவற்றிலும் நம் கலாச்சாரத்திற்கு எதிரானவற்றை அங்கேயே தடுத்திருக்க வேண்டும்தானே. நல்லா இரண்டு கதவையும் விரியத் திறந்துவைத்துவிட்டு இப்போது பெண்களால்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பெண்களை பிடித்து அடித்து தங்கள் வீரத்தைக்காட்டிக்கொள்பவர்கள், மற்றும் பெண்களால் மட்டும்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பேசுபவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களையோ அல்லது ஸ்டார் ஹோட்டல்க்காரர்களையோ அடித்து தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே.

கல்யாணம் ஆனவுடன் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஈகோ பிரச்சனை வந்து டைவர்சுக்கு செல்கிறார்கள். பெற்றோர்களால் எடுத்துச்சொல்ல முடியவில்லை. சிறிய வயதில் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வளர்த்துவிட்டு இப்போது புத்திசொன்னால் எடுபடுமா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

அடுத்து இந்த குடி. அதைத்தான் கவர்ன்மென்டே ஆதரிக்கிறதே. முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது. அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். அவங்கெடக்குறான் குடிகாரன் என்று சொல்வார்கள். எம்ஜிஆர் அவர்கள் அவர் படத்தில் குடிப்பதுபோலவோ சிகரெட் குடிப்பதுபோலவே நடிக்க மாட்டாராம். அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அதைப்பின்பற்றக்கூடும் என்ற சமூக அக்கறை. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இரண்டு பேரும் பாட்டு டான்ஸ் மூலம் குடியினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி பாடுவார்கள். வள்ளுவர் கள்ளுண்ணாமை அதிகாரத்தையே வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களும் மது அருந்தக்கூடாது என்றே சொல்லுகிறது. ஆனால் இப்போது குடிப்பது ஏதோ கவுரவம்போல் ஆகிவிட்டது. நமது கலாச்சாரமே குடிப்பதுதான் என்பது போலவும் மாறிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல தரமான படங்கள்கூட இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நாயகர்கள் குடிப்பார்கள். நம்ம ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது இன்னும் இந்தக்குடியை நாடாமல் இருக்கும் ஒருசிலரையும் மாற்றிவிடுமோ என்ற பதைப்பு என்னுள் வரும்.

பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில் ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.

டிஸ்கி: எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ?
நான் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்துப்போட்டுள்ளேன்.
-----------

நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..

கேபிள் சங்கர்  இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...



இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாதுஎன்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..

அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..

மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
 
அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :
A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH 
வளரும் பிஞ்சுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

டிஸ்கி: 10 நாட்களாக ப்ளாக் பக்கம் சரியாக வர முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களை படித்து பின்னூட்டமிட முடியவில்லை. என்னுடை ப்ளாக் பின்னூட்டங்களுக்கே நன்றி சொல்ல முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் வந்துவிடுவேன்.

வலைப்பூ அறிமுகம்
9/29/2010 | Author: ஜெயந்தி

போன இடுகையின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். சில வலைத்தளங்களை படிக்கும்போது இதை எல்லோரும் படித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் அந்த மாதிரி தோன்றிய ஒரு மூன்று வலைத்தளங்களை அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இலக்கியம் ஒன்று விவசாயம் ஒன்று விஞ்ஞானம் ஒன்று.

அழியாச் சுடர்கள்

பொருத்தமான பெயர் வைத்துள்ளார் இந்த ப்ளாக்கர். இந்த ப்ளாக்கை உருவாக்கியிருக்கும் விதமே நன்றாக இருக்கிறது. மேலே வயதில் முதிர்ந்த எழுத்தாளர்களின் படங்கள். அதன் கீழே எழுத்தாளர்களின் பெயர்களினாலான லேபிள். அதை க்ளிக் பண்ணினால் அவர்களின் கதைகளை படிக்கலாம். சாம்பிள் பேக் என்று சொல்வார்களே அதைப்போல் பெரிய பெரிய எழுத்தாளர்களின் சில கதைகளை தொகுத்தளித்துள்ளார். மிகவும் சிறப்பான பணி இவருடையது.

செ.யோகநாதன் என்ற இலங்கை எழுத்தாளருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அதன் கதைக்களம் 70வதா 80தா என்று தெரியவில்லை. அந்தப்புத்தகம் படிக்கும்போது இலங்கைத் தமிழ் பாதி எனக்கு புரியவில்லை. படிக்கும்போதே அந்த சூழ்நிலையை வைத்து அதன் அர்த்தத்தை நானாக புரிந்துகொண்டேன். முதல் இரண்டு சிறுகதைகளின்போதுதான் இந்தப் பிரச்சனை பிறகு சரியாகிவிட்டது. அந்த ஒவ்வொரு கதையும் கொடுத்த உணர்வு இருக்கிறதே. சொல்ல முடியாது. அங்குள்ள தமிழ்க்குடும்பங்கள் படும்பாடுதான் கதைக்களம். அப்போதுதான் விடுதலைப்புலிகள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரம் என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை தொகுதியை படித்துவிட்டு நீண்ட நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தேன். கட்டுரைகளோ, புகைப்படங்களோ கொடுக்க முடியாத உணர்வுகளை இலக்கியம் கொடுக்கும். நம்மை அதிர வைக்கும். பிறகு எனக்கு பிரபாகரனை புத்தகத்திலோ டிவியிலோ பார்த்தால் எனக்கு ரியல் ஹீரோவாகத்தான் தெரிவார். அங்குள்ள மக்களுக்கு காவலனாக தெரிந்தார்.

சிறந்த மனிதர் இலக்கியத்தின் மூலம் புரட்சியையும் உருவாக்க முடியும். சக்திவாய்ந்த ஆயுதம் இலக்கியம்.

சின்னச் சின்ன கோபங்கள்

தங்கபாண்டியன் என்பரது வலைப்பூ இது. பதிவர் ஜானகிராமன் மூலம் எனக்கு அறிமுகமானார். இவரது சாயம் போகும் நதிகள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லி உள்ளார். மனித வாழ்வுக்கு நீர்தான் ஆதாரம். அதையே இழந்துவிட்டால் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் வருகிறது. நீரும் மண்ணும் எப்படி பாழ்படுகிறது என்று படித்துப்பாருங்கள். அடுத்து மலைகள் எப்படி அழிக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச்சொல்லி உள்ளார். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சமாக இருந்தாலும் அற்புதமானவை. அனைவரும் படிக்க வேண்டியவை. சங்கப்பாடல்களை உதாரணம் காட்டி இவர் எழுதும் பாங்கு மிக நன்றாக உள்ளது. படிக்கவும் எளிமையாக உள்ளது.

கணேஷ்

கணேஷ் என்ற இளைஞரது வலைப்பூ இது. இவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் மீது ரசிகன், வெறியன், தாசன் என்ன வேண்டுமானால் சொல்லலாம். இவரது வலைத்தளத்தில் விஞ்ஞானம் புகுந்து விளையாடும். ஒரு கட்டுரையில் பூமி தோன்றிய கதையை கூறியுள்ளார். அதில் எதேச்சையான சேர்மங்கள் எதேச்சையாக சேர்ந்ததால் பூமி உண்டானது என்று இருந்தது. அதைப்படித்துவிட்டு எனக்கு கற்பனை சிறகடித்தது. அந்த மாதிரி எதேச்சையாக சேராமல் இருந்திருந்தால்... கொஞ்சம் வித்தியாசமாக சேர்ந்து வித்தியாசமான உயிரினங்கள் தோன்றியிருந்தால்... பிரபஞ்சத்தில் வேறு பல இடங்களில் இதே போல் சேர்மங்கள் சேர்ந்து உயிரினங்கள் இருந்தால்... என்று எனக்கு கற்பனை விரிந்துகொண்டே சென்றது. அறிவியலை, கேலக்ஸியைப் பற்றி கதைகள் மூலம் விளக்குவார். இவரது எழுத்தும் எளிமையாக படிப்பதற்கு இன்ட்ரஸ்டாக இருக்கும். அவசியம் படிக்க வேண்டிய வலைப்பூ.

நிறைய சிறு வயது இளைஞர்கள் ப்ளாக் எழுத வந்திருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேருக்கு நாமளும் எழுதணும்னுற ஆசை வந்திருக்கே. வந்துச்சோ ப்ளாக்கர் வரவச்சதோ எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். நிறைய எழுதுங்க எழுத எழுத எழுத்து பழக்கமாகும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்ற மாதிரி.

ஆனா அது கூடவே நீங்கள் இன்னொரு காரியமும் பண்ணனும். என்னன்னா நிறைய படிக்கணும். படிக்க படிக்க மனசு பண்படும். உங்களுக்கு எது படிக்க ஆர்வமா இருக்கோ அதையே முதலில் படிங்க. கண்டதைப் படிச்சா பண்டிதனாகளாம்னு ஒரு பழமொழி இருக்கு. கொஞ்ச நாள் பிறகு அதைவிட தரமான எழுத்துக்களை படிக்கத் தொடங்குங்கள். அப்படியே படிப்புத் திறனை வளர்த்துக்கொண்டால் உங்கள் எழுத்துத் திறனும் தரமானதாக மாறிக்கொண்டே இருக்கும்.

என்னோட கதையையும் கொஞ்சம் கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னால புத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பேன். லெண்டிங் லைப்ரயில் சேர்ந்து இருந்தோம். இரண்டு நாளைக்கொருமுறை புத்தகங்கள் எடுத்து வருவார்கள். மூணு நாலு நாவல் வாங்கி இரண்டு நாளில் முடித்துவிடுவேன். படிச்சுக்கிட்டே இருப்பேன். அவ்வளவும் பாக்கெட் நாவல்கள். எங்க மாமா சொல்வார் நீ படிக்கறதெல்லாம் நாலனா புத்தகங்கள். அதுனால ஒரு பிரயோசனமும் இல்லைன்னு சொல்வார். அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு அப்போ புரியலை. சரி ஏதோ சொல்றாருன்னு பேசாம இருந்துருவேன்.

அவர் பெரிய பெரிய புத்தகங்கள் படிப்பார். நான் அதையெல்லாம் மறந்தும்கூட தொட மாட்டேன். அப்படி இருந்தப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கல்யாணமாகி புதுக்குடித்தனம் போனா அந்த வீட்டுல நிறைய புத்தகம். எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்னு உடனேயே புரிந்தது. புத்தக அலமாரியை போய் புரட்டிப்பார்த்தேன். நான் படிக்கும் எழுத்தாளர் பெயர் ஒன்றுகூட இல்லை. ஜெயகாந்தன், ஜெயந்தன், ஆர்.சூமாமணி, அம்பை, கி.ராஜநாராயணன், கு.ஆழகிரிசாமி... போன்றவர்களின் புத்தகங்களே. இவங்க பேரக்கூட நான் கேள்விப்பட்டது இல்லை. இது என்னடா ஜெயந்திக்கு நேர்ந்த கொடுமைன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.

நான் நிறைய படிப்பேன் சொன்னத நம்பி என் கணவர் சொன்னார் எனக்கு எழுத்தாளர்களில் நா.பா. ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டு அவர் எழுதிய குறிஞ்சி மலர் புத்தகத்தை கையில் கொடுத்து படி என்று சொல்லிவிட்டார். நான் அந்த எழுத்தாளர் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். என்னால படிக்கவே முடியல. கணவர் முதன்முதல்ல ஒரு புத்தகத்த கொடுத்து படிக்கச் சொல்லியிருக்காரேன்னு நானும் முக்கி முக்கி படிக்கிறேன். அந்த புத்தகத்த எழுதுன எழுத்தாளர மனசுக்குள்ளயே திட்டுறேன். அவருக்கு வாசகர் கூட்டம் இன்னும் ஒரு குரூப்பு இருக்குது. நான் மனசுக்குள்ள திட்டுனது தெரிஞ்சுச்சு நான் காலி.



இந்த நா.பார்த்தசாரதியோட புத்தகத்தப்பத்தி என்னோட கணவர் சொன்ன தகவல் அந்தப் புத்தகம் வந்த புதுசுல அந்த நாவல படிச்சவங்க வீட்டுல பிறந்த குழந்தைகளுக்கு ஆணாக இருந்தால் அரவிந்தன் என்றும் பெண்ணாக இருந்தால் பூரணி என்றும் பெயர் வைத்தார்களாம். அந்தக் கதையின் நாயகன், நாயகியின் பெயர்கள். அந்தளவுக்கு அந்த நாவல் பேமஸாம். நம்ம துணை முதல்வர் ஸ்டாலின்கூட அரசியலில் நுழைவதற்கு முன் தன்னை மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு டிவி சீரியலில் நடித்தாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த குறிஞ்சிமலர் நாவல்தான். அரவிந்தனாக ஸ்டாலின் நடித்தார்.

இப்படியெல்லாமா எழுதுவாங்க. பாக்கெட் நாவல் படிச்சுக்கிட்டிருந்தவகிட்ட இலக்கியத்தரமான புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்போது எனக்கு வயது வேறு 19. ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சேன். சரி இதுதான் இப்படி இருந்துச்சேன்னு வேற புக் ஏதாவது படிக்கலாம்னு தேடுனா அங்க இருந்ததெல்லாமே இலக்கியவாதிகளோட எழுத்துக்கள்தானே.

அதுக்கப்பறம் வேற வழியே இல்லாம அங்குள்ள நாவல்களை படிக்கத் துவங்கினேன். அதன் பிறகு என்னால் பாக்கெட் நாவல்களை கிடைத்தாலும் படிக்கவே முடியவில்லை. எங்க மாமா சொன்ன நாலனா புத்தகம் என்ற வார்த்தைக்கு அப்போதுதான் அர்த்தம் தெரிந்தது. அதன் பின் நா.பா.வின் மணிபல்லவம், வலம்புரிசங்கு எல்லாம் படிக்க அவ்வளவு அருமையாக இருந்தது. கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் விழுந்து விழுந்து படித்தேன். ஜெயகாந்தன், கி.ரா., ஆர்.சூடாமணி, அம்பை, கு.அழகிரிசாமி, ச.தமிழ்செல்வன்... அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஏதாவது ஒரு புக்கை எடுப்பேன். பாலை சிம்மில்தானே வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில் புக்கில் மூழ்குவேன். அவ்வளவுதான். பால் தீய்ந்த வாசம் மூக்கைத் துளைக்கும் எழுந்து ஓடி அடுப்பை அணைப்பேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒரு நல்ல விஷயத்தை சிரமப்பட்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அது நமக்கு நல்லதையே கொடுக்கும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் படிப்புக்குன்னு ஒதுக்குங்க. எவ்வளவோ நேரத்தை நாம வீணாக்குறோம். நல்ல விஷயத்துக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது ஒன்னும் தப்பில்லைதானே. சில இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக ஆஸ்பத்திரி, பேங்க் இது மாதிரி சில இடங்களில் மணிக்கணக்கில் நாம் காத்திருக்க நேரிடும். அது மாதிரி நேரங்களில் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தால் படித்த திருப்தியும் கிடைக்கும். நேரமும் சுலபத்தில் போகும்.



சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும். ஆகவே இளைஞர்களே உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
பெண் எழுத்தாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் விட சிறந்தவரா என்று கேட்பீர்களேயானால் எனது பதில் ஆம். அவரது எழுத்தை படித்தவர்கள் இதை உணர்வார்கள். படிக்காதவர்கள் படித்தீர்களேயானால் உணர்வீர்கள்.

இப்போவெல்லாம் எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.

ஆனால் சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்தார் போலும்.

அவர் மறைந்துவிட்டார் என்று எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும் புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.

இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு. ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.

அவரது எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது. அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும் அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம் இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.

இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய் அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.

அவருக்கு சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள் பெருமையடைந்திருக்கும்.

தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ் நிச்சயம் வாழும்.

நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேங்க. இந்த ஊரப்பத்தி உலகத்தப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுனால தினமும் நியூஸ் பாக்கணும்னு எங்க மாமா சொல்வாருங்க. அதுனால நானும் நியூஸ் பாப்பேங்க. எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குதுங்க. அதுனால படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பேன்ங்க.

விஷயம் என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முந்தி ஈராக்குல பேரழிவு ஆயுதங்கள் இருக்குதுன்னு அமெரிக்கா சொல்லுச்சுங்க. சொல்லிட்டு தன் கூட சில நாட்டு படைகளையும் கூட்டிட்டு ஈராக்குக்குள்ள போனாங்க. அந்த நாட்டு அதிபர பதுங்கு குழிக்குள்ள இருந்து இழுத்து வந்தாங்க. புதிய அதிபர அறிவிச்சாங்க. பழைய அதிபருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு அப்புறமும் படைகள் அங்கே ஏன் இருந்துச்சு. அப்புறம் இப்ப படைகள் அனைத்தையும் வாபஸ் வாங்கப் போவதாக நேத்து அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். இப்ப ஏன் வெளியேறுது? இந்த பேரழிவு ஆயுதங்கள தேடுறதுக்குத்தான் நாங்க அடுத்த நாட்டுக்குள்ள போறோம்னு சொன்னாங்க. அங்க எந்த ஆயுதங்களும் கெடைக்கல போலிருக்கு. கெடச்சிருந்தாத்தான் அதுக்கு பின்னால ராணுவத்துக்காரங்க நின்னு போட்டோவோட நியூசுல காட்டியிருப்பாங்களே. இல்லன்னா கண்டுபிடிச்சோம்னாவது சொல்லியிருப்பாங்களே. அப்போ அங்கே எந்த ஆயுதங்களும் இல்லாதபோது ஏன் அங்க போனாங்க. முதல்ல இன்னொரு நாட்டுக்குள்ள போயி ஆயுதத்த தேடுறதுக்கு இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.



நம்ம நாட்டுக்கு பக்கத்து நாடு (இலங்கை) ஒரு இனத்தை அழிச்சாங்களே. அவங்க வச்சிருந்த ஆயுதங்களெல்லாம் எந்த வகை ஆயுதங்கள். ஒரு குண்டு போட்டா அங்க இருக்கற ஆக்சிஷன் எல்லாத்தையும் உறிஞ்சி மக்களை மூச்சுத்திணறி சாகடிக்குமாம். மக்கள் லட்சக்கணக்கில் செத்தாங்களே அப்போ யாரும் என்னான்னு கேக்கலையே. அது அவங்க உள்நாட்டு விவகாரம்னு சொன்னாங்களே. ஐநா சபை ஆளுங்களால இப்போகூட இலங்கைக்கு போக முடியலங்கறாங்களே. ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?

இதே ஈராக் பேரழிவு ஆயுதங்கள் இருக்கறதா வதந்தி பரப்பி எங்கள் நாட்டை சூறையாடிட்டாங்கன்னு சொல்லிட்டு கூட இந்தியா, சைனா போன்ற நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு அமெரிக்கா மீது படையெடுத்தால், அல்லது போபால் புகழ் ஆண்டர்ஸன்னும் இந்தியாவுல வெடிகுண்டு வைக்கறதுக்கு ப்ளான் போட்டுக்குடுத்த ஹெட்லியோ இட்லியோ அமெரிக்காவுல பதுங்கியிருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியா துணைக்கு சில நாடுகளை அழைத்து கூட்டுப்படையுடன் அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்சு, அதிபருக்கு தண்டனை கொடுத்துடறாங்க. அவங்க சொல் பேச்சு கேக்குற அதிபர ஆட்சியில உட்கார வைக்கிறாங்க. அப்புறம் அங்க பொருளாதாரம் படுத்துருச்சு நாங்க சரி பண்ணுறோம்னு சொல்லி அங்கேயே சில வருஷங்கள் இருக்காங்க. அப்பறம் ஒருநாள் நாங்க வெளியேறுறோம்னு வெளிறேறிருறாங்கன்னு வச்சுக்கங்க இப்போது எல்லாத்தையும் மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் அப்போதும் பார்த்துக்கொண்டிருக்குமா?

எனக்கு உள்நாட்டு சட்டங்களும் நியாயங்களுமே சரியாத் தெரியாது. உலக சட்டம் என்னான்னு படிச்சவஙக அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க சொன்னீங்கன்னா கேட்டுக்குவேன்.

1. காலையிலும் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடப்போகும்போது எங்கிருந்தோ கூட்டமாக கிளம்பி வந்து நம்மை அட்டாக் பண்ணுமே கொசுக்கள், கோலம் போடுவதற்குள் பாடாய்ப்படுத்திவிடும். அதனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டுதான் கோலம் போடமுடியுமே அப்போது.

2. அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய வேண்டும்போல் அரிக்குமே அப்போது.

3. அடுப்பில் பால் பொங்க தொடங்கும் நேரமாக இருக்கும் அல்லது எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்கத் துவங்கும் நேரமாக இருக்கும் அப்போது லேண்ட் லைன் அடிக்கும். அடுப்பில் உள்ளதை என்ன செய்வது என்று புரியாமல் தவித்து ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவசரமாக போனை எடுத்தால் பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும் அல்லது ராங் காலாக இருக்குமே அப்போது.

4. பஸ்சுக்காக காத்திருக்கும்போது நாம் எதிர் பார்க்கும் பஸ்சைத் தவிர அனைத்து ரூட் வண்டிகளும் நிறைய போகும். அடுத்த முறை வேறு ரூட் பஸ்சிற்காக காத்திருக்கும்போது நாம் முதல் நாள் காத்திருந்து வராமல் தவித்த வண்டியாக போகும் இப்போதும் நாம் எதிர்பார்க்கும் பஸ்சே வராதே அப்போது.

5. ஒருவழியாக பஸ்சிற்குள் ஏறி உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே அரை மணி நேரம் செல்லுவோம். அப்போது வரும் ஸ்டாப்பிங்கில் ஏறும் பெண் நின்ற இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குவார்கள். நாம் அப்படியே நின்றுகொண்டிருப்போமே அப்போது.

6. காலையில் அலுவலம் செல்ல பஸ்சை பிடிப்பதிலேயே லேட்டாகியிருக்கும் (அப்போதே மேனேஜரின் முகம் வந்துபோகும்) அதுபோதாதென்று வரும் சிக்னலில் எல்லாம் பஸ் நிற்குமே அப்போது.

7. வெயிலில் வெளியே அழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து பேனை போட்டுவிட்டு உட்காரும்போது கரெண்ட் போகுமே அப்போது. (நல்ல தூக்க நேரத்தில் கரெண்ட் போகும்போதும்)

8. வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும்போது தண்ணீர் மோட்டார் ரிப்பேராகிவிடுமே அப்போது.

9. மழை நீரில் கால் பாதம் நனையாமல் பார்த்து பார்த்து மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கும்போது வேகமாக வரும் வாகனம் நம் மீது மழை நீரை வாரி அடித்துச் செல்லுமே அப்போது.

10. பத்தாவதாக எதை போடுவது என்று யோசிக்கும் வேளையில் எதுவுமே தோன்றாமல் இருக்குமே அப்போது.

(யாருங்க அது குத்து சீசன் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது. பழங்கள் எல்லாம் சீசன் முடிஞ்சு போனால் அடுத்த வருடம் சீசன் வருமே அதுபோல இது அடுத்த சீசன்)
அந்தோணி முத்து
8/25/2010 | Author: ஜெயந்தி
சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே டோண்டு அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி முத்து மறைவு என்ற தகவலுடன்.

இந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என் பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே டைப் பண்ணி அனுப்புகிறேன்.

யாரோ தமிழ் ப்ளாக்கை கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். பாலாஜி என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக இருந்திருப்பதை அறிகிறேன்.



அந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். அவரது ப்ளாக்கிற்குச் சென்று படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப் பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.

அவருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

"பாய் 300 சிக்கன் போடுங்க"

வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.
பாய் லெக் பீஸை வெட்டி எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.

"350 இருக்கு. போடவா?"
"நான் 300 தான கேட்டேன்"
"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர் வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"
"ஆமா வெளியில நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க மாட்டாரு."
"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"
"ஆமா நீங்க சொல்றதும் சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான் காரணம்."

கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும். மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.

ஒரு ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க என்றேன்"
அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும் காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்" என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத் தோன்றுகிறது.

ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார். அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக எனக்குப்படும்.

"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க. அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன். அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு முன்னேறனும்னு நெனப்பேன்"
அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று பேச்சு திசை திரும்பியது.



"எங்க தம்பி வந்திருந்தான் அவன் பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான் போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம் இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.

"மாப்பிள்ளை சொல்றாரு உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.

"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"

டிஸ்கி: பத்து நாள் பதிவு போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)
மனம் என்னும் பெருவெளி
7/30/2010 | Author: ஜெயந்தி

ஐம்புலன்களையும் அடக்கி ஆழத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. கோபத்தை அடக்கி ஆண்டு சரியான இடங்களில் சரியான நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் கோபத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வரவே கூடாத உணர்ச்சிகள் பொறாமை, பேராசை, பழிவாங்கும் குணம், அடுத்தவரை கெடுக்கும் குணம், வன்மம் இவையெல்லாம் தோன்றும்போதே முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் நம்மை சாப்பிட்டுவிடும்.



சில உணர்வுகள் வந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதுதாங்க இந்த காதல். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் வசமிழந்திருப்பார்கள். அந்த உணர்வுக்குள்ளே மூழ்கிக்கிடப்பார்கள். அது அழகான உணர்வு யாரையும் துன்புறுத்தாத உணர்வு என்பதால் எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட உணர்வு. காதலர்களை காற்று வெளியில் மிதக்கச் செய்யும் உணர்வு.

இன்னும் சில உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். அதன் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள்வது மிகவும் கடினமான செயல். நம்மை முழுமையாக ஆட்சி செய்யும்.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் இரண்டு வருடத்திற்கு முன் எங்கள் அம்மாவிற்கு ஏற்பட்ட எலும்பு முறிவைச் சொல்லலாம். ஆஸ்பத்திரியில் காலில் வெயிட்கட்டித் தொங்கவிட்டு அசையாமல் படுக்க வைத்திருந்தார்கள். அங்கு வந்த ஹவுஸ் சர்ஜன்ஸ்களை அடுத்து என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்னது ஆப்பரேஷன் செய்து ஸ்குரூ போடுவார்கள் என்றனர். செலவு எவ்வளவு ஆகும் என்றதற்கு 50 ஆயிரம் வரை ஆகும் என்றனர். நமக்கு மனதிற்குள் இந்த ஆப்பரேஷனை வயதான காலத்தில் அவர்களால் தாங்க முடியமா? அப்புறம் பணத்திற்கு என்ன செய்வது? இதே பிரச்சனை மனதுக்குள் சூறாவளியாக சுழன்றடிக்கும். வேறு எந்த நினைவும் வராது. மற்ற நேரங்களில் பெரியதாக தெரியும் பிரச்சனைகள் எல்லாம் அப்போது ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றும்.

அப்புறம் ஒரு வாரம் கழித்து பெரிய டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒன்றுமில்லை இது கிராக்தான் ஆறு வாரங்கள் அசையாமல் படுக்கையில் இருந்தால் எலும்பு கூடிவிடும் என்று சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தபோது ஏற்படுமே ஒரு உணர்வு. அந்த நிம்மதியை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

சில பிரச்சனைகள் நம்மை ஆற்றாமலே போய்விடும். காலம்தான் ஆற்றவேண்டும். அப்போது கொதிக்கும் மனசை எதைக்கொண்டு ஆற்ற முடியும். எந்த மூடி போட்டு மூடி வைக்க முடியும்.

இப்படிப்பட்ட மனநிலையிலேயே பூவரசிக்கு வந்த பெருங்கோபம் கண்ணை மறைத்து அது பழிவாங்கும் செயல்வரை கொண்டுபோய் விட்டது. அவர் முதலிலேயே விழித்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பழிவாங்கும் எண்ணம் தோன்றியபோதாவது இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். டிவியில் அவள் புத்திகெட்டுப்போய் செஞ்சிட்டேன் என்று அழுவதைப் பார்க்கும்போது தோன்றுகிறது இவள் எல்லாம் முடிந்தவுடன் அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்கிறாள். இதை அவள் முன்பே செய்திருந்தால் இதன் விளைவு என்னவாக இருக்கும்? நாம் உதாரணம் காட்டப்படுவோமே என்றெல்லாம் யோசித்திருப்பாள். இவருக்கு மனநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். சில நிமிடங்கள் உணர்ச்சியை அடக்கி ஆண்டு மூளைக்கு வேலை கொடுத்திருப்பாளேயானால் இந்த விளைவைத் தடுத்திருக்கலாம். (நூற்றுக்கணக்கில் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அவர்கள் சதையையும் சமைத்துச் சாப்பிட்ட கயவன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் என் வேலைக்காரன் செய்தது என்று சொல்லி வேலைக்காரனை தண்டனை பெற வைத்துவிட்டு வெளியிலே சுதந்திரமாக திரிகிறவன் காரணமில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறான்.)

சூறாவளியடிக்கும் மனநிலையின் போதுதான் மக்கள் பிற நம்பிக்கைகளை நாடுகிறார்கள். வேண்டுதல், பிரார்த்தனை, குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்ற எதிலாவது தன் மனதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற ஆசைதான்.

நம்மை கட்டுப்படுத்தும் மனநிலையையும் வென்றெடுக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய புயலடிக்கும் மனநிலையாக இருந்தாலும். அப்படி ஒரு மனதை தன்னம்பிக்கையாலும் அறிவை வளர்த்துக்கொள்ளும் திறனாலும் வென்றெடுப்போம்.

டிஸ்கி: சூறாவளியடிக்கும் மனநிலையில் இரண்டு வாரங்களாக இருந்தேன். அதனால்தான் பதிவு எதுவும் போட முடியவில்லை. இப்போது அமைதியான மனநிலை.

திருமணம் ஆனவுடன் வேலூரில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்கள். அங்கிருந்து ஊருக்கு (திண்டுக்கல்) வருவதென்றால் அநேகமாக நான் மட்டும்தான் அதிகமுறை வந்து செல்வேன். அப்போவெல்லாம் பஸ் பயணம்னு பார்த்தா கவர்ண்மென்ட் பஸ்கள்தான் அதிகம். அதிகம்னு சொல்றதவிட முழுவதும்னு சொல்லலாம். தனியார் பஸ்ச பார்ப்பதே கடினம். திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம், பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை சத்யா, கட்டபொம்மன், ராணி மங்கம்மா என்று போக்குவரத்துக்கழகங்களுக்கு பெயர் இருக்கும். பின்னர் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று ஆகி அப்புறம் மாநகரம், நகரம் என்று ஆகிவிட்டது.

ஊருக்குச் செல்வதென்றால் திருவள்ளுவர் போக்குவரத்ததுக்கழகத்தில் ஒரு வாரம் முன்னாலேயே ரிசர்வ் செய்தால்தான் டிக்கட் கிடைக்கும். பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கும். பயமே கிடையாது. அதிக தூரப் பயணம் என்றால் நடுவழியில் டிரைவர், கண்டக்டர் மாறுவார்கள். என்ன ஒரு சிரமம்னு பார்த்தா இப்ப மாதிரி புஷ்பேக் சீட்டெல்லாம் கிடையாது. பின்னால கொஞ்சம் உயரம் அதிகமான சாய்மானம் இருக்கும் அவ்வளவுதான். நீண்ட தூரம் போவதென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா டிரெயினவிட பஸ்சுல டிக்கட் சார்ஜ் கம்மி. இரவு 8.30க்கு வேலூரில் ஏறி அமர்ந்தால் காலை 5.30 லிருந்து 6 மணிக்குள் திண்டுக்கல் போய்விடலாம். 8.30ன்னா கரெக்டா 8.30க்கு வண்டியை எடுத்துவிடுவார்கள்.

அங்கிருந்து திரும்பும்போதுதான் பிரச்சனையே. வரும் தேதியை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததால் டிக்கட் ரிசர்வ் பண்ண முடியாது. டிரெயின் வசதின்னு பார்த்தா ஒரே ஒரு டிரெயின்தான் திண்டுக்கல்லில் இருந்து வேலூர் வழியாகச் செல்லும். திருப்பதி எக்ஸ்பிரஸ். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும். மீட்டர் கேஜ். வேற டிரெயின்னா சென்னை போயி அங்கயிருந்து வேறு டிரெயின் பிடித்து வேணா வேலூர் போகலாம். தனியாகச் செல்வதால் ஒரே டிரெயின்தான் வசதிப்படும் என்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ்தான் போக்குவரத்திற்கு. டிரெயின்ல மட்டும் ரிசர்வேஷன் பண்ணாம போக முடியுமான்னு கேட்குறீங்களா? இந்த டிரெயின் எப்படி போகுமுன்னா தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி என்று திருச்சியில் இருந்து விலகி ஒரு சுற்று சுற்றிச் செல்லும் அதனால் மதியம் 12.30க்கு திண்டுக்கல்லில் ஏறி உட்கார்ந்தால் நடுராத்திரி 1.30க்கு வேலூர் போகும். விடியற்காலையில் திருப்பதி செல்லும். இவ்வளவு நேரம் ஆகுறதுனால இந்த டிரெயினில் கூட்டம் கம்மியாக இருக்கும். ரிசர்வேஷன் இல்லாமலேயே உட்கார இடம் கிடைக்கும். தஞ்சாவூர், சிதம்பரம் இந்தப்பக்கம் போறவங்கதான் நிறைய இருப்பார்கள்.

வேலூரில் இருந்து பஸ்சில் ஏற்றிவிட்டால் காலையில் மாமா வந்து வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுவார். திண்டுக்கல்லில் இருந்து டிரெயினில் ஏற்றிவிட்டால் கணவர் வந்து அழைத்துச்செல்வார்.

ஒரு முறை 1988லிருந்து 90க்குள் ஏதோ ஒரு வருடம். எனக்கு இரண்டு சின்னச் சின்னக் குழந்தைகள். மாமா டிரெயின் ஏற்றிவிட்டார். லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி அதில் ஏற்றி விட்டார். ஏறும்போது ஓரளவு கூட்டம் இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இரண்டு பக்கமும் (எதிரெதிர் சீட்டுக்களில்) நானும் குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். வண்டி செல்லச்செல்ல தஞ்சாவூர், சிதம்பரம் பக்கத்துக்காரர்கள் இறங்கிவிட்டார்கள்.



இரவு உணவை குழந்தைகளுக்கு கொடுத்து உறங்க வைத்துவிட்டேன். சின்னவன் கைக்குழந்தை. அதன் பிறகுதான் கவனித்தேன் ரயிலில் ஒரு நிசப்தத்தை உணர முடிந்தது. எனக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் போல பேச்சுக்குரல் மட்டுமே கேட்டது. மெல்ல எழுந்து சென்று பார்த்தேன். ஆம் அந்த பெட்டியில் என்னையும் அந்தப் பெண்மணியையும் தவிர கம்ப்பார்ட்மெண்டே காலியாக இருந்தது. மெல்ல அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அவருக்கும் இரண்டு பிள்ளைகள். சற்று பெரியவர்கள்.
"என்னங்க டிரெயின் காலியா இருக்கு" இது நான்.
"ஆமாம் காலியாதான் இருக்கு" இது அந்தப்பெண்.
"நீங்க எங்க போறீங்க"
"திருக்கோவிலூர்"
"அதுக்கு எவ்வளவு தூரம் இருக்கு"
"அடுத்து திருக்கோவிலூர்தான்"

எனக்கு பகீர் என்றது. அவர்களும் இறங்கிவிட்டால் மொத்த கம்ப்பார்ட்மெண்டிலும் நானும் குழந்தைகளும் மட்டுமே.

"நீங்க இறங்கீட்டா நான் மட்டும்தான் இருப்பேன். எனக்கு பயமா இருக்கு" என்றேன்.

நான் இப்படி சொன்னவுடனே அந்தம்மாவுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

"இப்படித்தான் ஒரு முறை இதே டிரெயினுல ஒரு பொண்ணு வந்துருக்கு. அந்தப்பொண்ணும் ஒரு பையனும் லவ் பண்ணியிருக்காங்க. வீட்டுல ஒத்துக்கல. அதுனால திருப்பதியில போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் முதல்ல போயி திருப்பதியில இந்தப்பெண்ணுக்காக காத்திருக்கான். இவள் இந்த டிரெயினுல ஏறி வர்றா. இதே மாதிரி கம்ப்பார்ட்மெண்ட் காலியாகி அவ மட்டும் இருந்துருக்கா. இத கவனிச்ச ஒரு நாலு பேரு (ஆண்கள்) அவங்க ரயில்வேல வேலை செய்றவங்க. அந்தப் பெட்டியில ஏறிட்டாங்க. அந்தப்பொண்ணு அவ்வளவு அழகா இருக்குமாம். இப்டியும் அப்டியுமா நடக்குறானுங்க. அப்பற நாலு பேரு சேர்ந்து அவள நாசப்படுத்திட்டாங்க. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னா என்னோட வீட்டுக்காரர் ஸ்டேஷன் மாஸ்டர்"

அந்தப் பெண் இந்த சம்பவத்தை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசன பண்ணிப்பாருங்க. இந்த மாதிரி சம்பவத்தை வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ இருந்துகொண்டு கேட்பதற்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்து கேட்பதற்கு உள்ள வித்தியாசம் புரியுதா? எனக்கு அப்படியே நாக்கு வறண்டு, நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. மனசுக்குள்ள அந்தம்மாவ திட்டிக்கிட்டிருக்கேன். நான் கேட்டனா. இப்போ போயி இந்த சம்பவத்தை சொல்லுறீயேன்னு மனசுக்குள்ள திட்டுறேன்.

மெள்ள அவங்கிட்ட கேட்டேன் "ஏங்க என்னய ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல ஏத்திவிட்டுறீங்களா?"

ஏன்னா ரெண்டு குழந்தைகள். இரண்டும் தூங்குது. துணி இருக்கற பெட்டி அப்பறம் ஊருலருந்து ஏதாவது கொடுத்துவிடுவாங்களே அந்தப் பைகள் எல்லாவற்றையும் தனியாக இறக்கி ஏற்ற முடியாது. அதுவும் திருக்கோவிலூரில் எவ்வளவு நேரம் ரயில் நிற்கும் என்றும் தெரியாது.

"பயப்படாதீங்க. உங்கள நான் ஏத்திவிடறேன்" அந்தம்மா சொன்னாங்க.

அப்படா என்று நிம்மதியானது.
அப்பறம் திருக்கோவிலூரில் ரயில் நின்றவுடன் எங்களை இறக்கி ஜெனரல் கம்ப்பார்ட்மெண்டில் ஏற்றிவிட்டு அங்கே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். அவர்களும் ரயில்வேயில் வேலை செய்பவர்கள். அவர்களிடம் அந்தம்மா சொல்லி இவங்களை வேலூருல இறக்கிவிட்டுருங்க. பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

எனக்கு எப்போது அந்த ரயில் பயணம் நினைவு வந்தாலும் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியும், அந்த முகம் தெரியாத பெண்ணும் நினைவுக்கு வருவார்கள்.