இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. "சித்திரக்கூடம்"

சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ஃப்ளாக்கை படிக்க ஆரம்பித்தால் அங்கே தாய்மை நதி ஓடிக்கொண்டிருந்தது. என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது என் நிலையை எனக்கு உணர்த்தியது.

மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கவிதையாக்கியுள்ளார். கண்ணை மூடிக்கொண்டு சோப்பு போடச் சொல்வது, மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பது போன்றவை அருமை. பப்புவிற்கு கடிதம் எழுதுவது வித்தியாசமான முயற்சி. பிறந்த நாளுக்கு ஹோமுக்கு அழைத்துச் சென்று அந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே சமூக உணர்வை ஊட்டியது மிகவும் நல்ல செயல்பாடு. நம் ஒவ்வொருக்குள்ளும் இந்த சிந்தனை இருந்தால் நன்றாக இருக்கும். காது குத்தும் படலம் அமர்க்களம்.

ஜுன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் குறித்த இவரது கட்டுரை சிறப்பானது.சிறு வயது பயண அனுபவக் கட்டுரையின் போது நாமும் அவருடனே பயணித்தோம். பண்ருட்டி பலாச்சுளைகளை நாமும் உண்டுகொண்டு வடலூரை நெருங்கும்போது சாராய பேக்டரியின் நாற்றத்தின் காரணமாக மூக்கை மூடிக்கொண்டும் பயணிக்கிறோம்.

மகளை முதன்முதலில் டூருக்கு அனுப்புப் அனுபவம். அந்த திகதிக் பக்பக் அந்த உணர்வு, குழந்தை அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் மனது அடுத்த நிமிடமே குழந்தையின் பாதுகாப்பு குறித்த பயத்தில் பின்வாங்குவது நல்ல தடுமாற்றம்.

தன்னுடைய மகளின் பயணத்தினூடே தன்னுடைய சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். தென்கச்சிக்கு எழுதிய கடித்திற்கு பாட்டியின் ரியாக்ஷன். (எனக்கு இப்போது 46 வயது ஆகிறது. ஆதிமூல கிருஷ்ணனின் ஃபிளாக்கை நான் விமர்சித்ததை பார்த்து என் அம்மா 'எதுக்கு இந்த ஃப்ளாக் எழுதுற வேலையெல்லாம். இதை நிறுத்தச் சொல்லு' என்று என் மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.)

இவர் ரொம்ப சீனியர். 2006ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் கணவன் மனைவி சண்டை போடுவது அன்பால் பிறகு இணைவது போன்ற கதைகளும் ஜோக்குகளும் எழுதி இருக்கிறார். 'சண்டக்கோழி' சூப்பர். 'ஜில்லுனு ஒரு காதல்', 'கற்றது தமிழ்' படங்களை லொள்ளு சபா ஸ்டைலில் கலக்கல் கிண்டல். அதற்கு விளம்பர இடைவேளை வேறு. இவரது எழுத்து சரளமாகவும் வாசிக்க பிடித்தாகவும் இருக்கிறது. இவர் சிறு வயது முதல் நிறைய படித்ததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

'பதிவர்கள் ஒரு ஜாலி கற்பனை' அப்போதைய நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதுபோல் இருக்கிறது. எனக்கு புரியவில்லை. பாலி சாகு மற்றும் பாப் மாலி, ஸ்டீவன் கபூர் அகா, அப்பாச்சி இந்தியன், நஃப் வைப்ஸ், இலா அருண்இ கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப், சுனிதா, சுவேதா, சுசித்ரா போன்ற பாப் இசைக் கலைஞர்களை அனுபவித்து அறிமுகம் செய்கிறார்.

பப்புவுடனேயே இவரது ஃப்ளாக்கும் வளர்கிறது.

குறிப்பு: என் குழந்தைகளுடனேயே நானும் வளர்ந்தேன். அவர்கள் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். எனது சிறந்த நண்பர்கள் அவர்கள்தான்.
முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!
சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் போல் வலைப்பூ விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே ஞாபகம் வந்தவர் ஆதி மூல கிருஷ்ணன். (ஆதி: அதுக்கு நாந்தானா கெடைச்சேன்.)

இவரது ஃ ப்ளாக்கை என் மகள் சொல்லித்தான் நான் படித்தேன். 'அம்மா இங்க பாறேன், குருவி பத்தி ஒரு விமர்சனம் சூப்பரா இருக்குது, அப்பறம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை எல்லாம் நல்லா இருக்கு படிச்சுப் பாறேன்'.

அப்படி படிக்க ஆரம்பித்து இம்ப்ரஸ்சாகி ஃப்ளாக்கையே தலைகீழாக கொட்டிக் கவிழ்த்தாகிவிட்டது. இவரது அறிவுரை சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அறிவுரை சொல்வது. கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று சொல்லிக்கொண்டே கல்யாணம் பண்ணிக்கொள்ள தூண்டுவது இவரது தனிச்சிறப்பு.

இவரது தங்கமணி இடுகைகள் அனைத்தும் அருமை. நீங்கள் தங்கமணிகளை கிண்டல் செய்வதைப் பார்த்து கொதித்துப் போயுள்ள பெண்கள் ரங்கமணிகளைப் பற்றி எழுதப்போவதாக ரகசியத் தகவல். (பெண் பதிவர்களிடம் தனி இடுகையே போட்டு மன்னிப்புக்கேட்டார், ஆனாலும் அவர்கள் கோபம் தீரவில்லை.)

சிக்மா பற்றி எளிய முறையில் புரிய வைத்தது, சுஜதாவை நினைவூட்டியது. அவர்தான் விஞ்ஞானக் கட்டுரைகளைக் கூட எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதுவார்.

இவர் வைத்த அயிரை மீன் குழம்பு வாசத்தில் நாக்கில் நீர் சொட்டி, அடுத்த நாள் எங்கள் வீட்டில் மீன் குழம்பு. (அயிரை கிடைக்காததால் சங்கரா மீன்). தக்காளி ரசத்துக்கு ஏனுங்க தக்காளியை வெந்நீரில் போட்டு தோளை உரித்துக்கொண்டு, பச்சையாக புளித்தண்ணீரில் பிசைந்துவிட்டால் போகிறது. நடுநடுவே டிப்ஸ் வேறு தருவார். நாமெல்லாம் இவர் உண்மையிலேயே இதையெல்லாம் செய்வார்னு நம்பனுமாம். ரமா ஏமாறுவதைப் போல் நாங்களெல்லாம் ஏமாந்தவர்களா என்ன?

இவரது எழுத்தின் சிறப்புக்குக் காரணம் இவரது நகைச்சுவை உணர்வுதான். கல்யாண வீடுகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பார்த்மோமென்றால் ஒரு இடத்தில் ஒரே கூட்டமாக இருக்கும். உள்ளே சென்று எட்டிப்பார்தால் ஒருவர் நடுவில் ஹீரோ போல் அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருப்பார். கூடி நிற்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல் இவரது ஃப்ளாக்கைச் சுற்றி ஒரே கூட்டம்.

கதைகளும் நன்றாகத்தான் எழுதுகிறார். இவரின் 'அழுக்கின் அழகு' சிறுகதை மீது எனக்கு உடன்பாடில்லை. கண்டனங்களும் உண்டு. இவர் கடைசியாகப் போட்டுள்ள ஆயுதம் ஆவணப்படம் க்ளாஸ். ஏங்க வடை தட்டையாகத்தானே இருக்கும். போண்டாபோல் உள்ளதை வடை என்கிறீர்களே?

டிஸ்கி : இவரது ரசிகர் மன்றத்தினர் இவருக்கு பட்டம் கொடுப்பதற்காக மொக்கை திலகம், லொள்ளு சக்கரவர்த்தி, குசும்பு தளபதி போன்ற பெயர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இரங்கல்
11/18/2009 | Author: ஜெயந்தி
கேபிள் சங்கர் அவர்களின் தந்தையார் காலமான செய்தியை இடுகைகளின் மூலமாக அறிந்தேன். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.



மாநகரப் பேருந்து


சென்னையில காலையிலயும் மாலையிலயும் பீக் அவர்ஸ்ல மாநகரப் பேருந்தில் பயணம் செய்பவர்கள் பாவம் செய்தவர்கள். பஸ்சில் ஏறுவதற்கே தனி டிரெயினிங் வேண்டும். அதிலும் பெண்கள், இரண்டு மூன்று பேர் இருந்தால் சேர்ந்து ஏறிவிடலாம். தனியாக மாட்டிக்கொண்டால் ஆண்களை தள்ளிக்கொண்டு ஏறவே முடியாது. அவர்களும் பாவம் பார்த்து வழிவிட மாட்டார்கள். அவரவர்களுக்கு அவரவர் அவசரம். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.

பேருந்திற்குள் ஏறிவிட்டாலோ மூச்சு முட்டும் கூட்டத்தில் நெருக்கியடித்து நின்றுகொண்டு வர வேண்டும். அதற்குள் விதவிதமான சண்டைகள் நடக்கும். 'அய்யோ என் காலை மிதிக்கிறீங்களே?' 'ஏங்க இப்டி மேல சாய்றீங்களே, கொஞ்ச தள்ளி நில்லுங்க' 'எடம் இருந்தா தள்ளி நிக்க மாட்டாங்களா?' ரெண்டு மூணு சண்டையாவது நடந்துகொண்டிருக்கும். அந்த நெரிசலில் வேர்த்து வடிய பயணம் செய்வோருக்கு இந்த சண்டை சத்தம் பயங்கர டென்ஷனைக் கொடுக்கும். இதில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வேறு காசு ஒருபுறமும் டிக்கெட் மறுபுறமும் பாஸ் செய்ய வேண்டும். அதிலும் சில குளறுபடிகள் நடக்கும்.

இதில் பெண்கள் மீது உரசுவதற்கென்றே ஒரு கோஷ்டி வரும். இவர்களை சமாளிப்பதுதான் பெரும்பாடு. பெண்கள் இருக்கைக்கு அருகே உள்ள வரிசையில் நிற்பவர்கள் தப்பித்துவிடுவார்கள். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் நிலைதான் மோசமாக இருக்கும். நல்ல ஆண்கள் அருகில் நின்றால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர்கள் நம்மீது இடித்துவிடாமல் நிற்பார்கள். மீறி பட்டாலும் வேறு வழியில்லாமல்தான்படும். இந்த மாதிரி ஆண்கள் பக்கத்தில் நின்றால் பிழைத்தோம். இடிஅமீன்கள் பக்கத்தில் நிற்க நேர்ந்தால்... தைரியமுள்ள பெண்கள் நன்றாக திட்டிவிடுவார்கள். பயந்த சுபாவம் உள்ள பெண்கள் கூனி குறுகி பக்கத்தில் உள்ள பெண்களின் மீது சாய்ந்துகொண்டே செல்வார்கள். பெண்களின் திட்டும் போனசாக கிடைக்கும். திட்டும் பெண்களுக்கு இடிமாடுகளின் பதில், 'கூட்டம்னா அப்டித்தான். இடிபடாம போகனும்னா ஆட்டோல போங்க, கார்ல போங்க'. அப்படியே அவங்களை நாலு சாத்து சாத்த வேண்டும்போல் இருக்கும். பஸ்ல வந்தா இவங்ககிட்ட இடி வாங்கியே தீர வேண்டுமா என்ன?




அப்பறம் இந்த பஸ்சுல கடைசியா நீளமா ஒரு சீட் இருக்குமே, அது பெண்களுக்கானது. அதில் ஆண்கள் ஏறி வரிசையாக அமர்ந்துகொள்வார்கள். பெண்களுக்கும் அவர்களுக்கும் நடக்கும் சண்டை சுவாரசியமாக இருக்கும்.

"இது லேடீஸ் சீட் எந்திரிங்க"
"ஏம்மா ஆம்பளங்க சீட்டுல நீங்க உட்கார்றீங்க"
"ஆம்பளங்க சீட்டுனு தனியா எதுவும் இல்ல. லேடீஸ் சீட் மட்டும்தான் தனி. மத்ததெல்லாம் பொது சீட்டுதான். யார் வேணும்னாலும் உட்காரலாம்."
"ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றீங்க, பஸ்சுல மட்டும் தனியா சீட்டு கேக்கிறீங்க?"
"ஆணும் பெண்ணும் சமங்கறத நாங்க படிப்புலயும் வேல செய்யிறதிலயும் காட்டிக்கிறோம். பஸ்சு சீட்டுல காட்ட வேண்டியதில்ல."
"நாங்களும் வேல செஞ்சிட்டுத்தான் வர்றோம். எங்களால எந்திரிக்க முடியாது"

இப்படியாக சண்டை ஓடிக்கொண்டிருக்கும். சில நேரம் இவர்கள் ஜெயிப்பார்கள், சில நேரம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

பஸ்சுல ஏன் தனி இருக்கைகள் பெண்களுக்கு?
என் மனதில் ஓடியவை.

1. வீட்டிலும் வேலை செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று பணியாற்ற வேண்டும். இரட்டை பளு.
2. மாதவிடாய் பிரச்சனை. இந்த நேரத்தில் சிலருக்கு வயிறு வலிக்கும். சிலருக்கு தலைவழி, உடல்வழி. எந்த வழியும் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
3. குழந்தை வயிற்றில் சுமக்கின்ற பெண்கள்.
4. குழந்தை பிறந்து பேருக்கு 3ம் மாதம், ஆனால் ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. அவர்கள் உடல் பச்சை உடம்பு என்பார்கள்.
5. 40-50 வயது பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலகட்டம். அவர்கள் உடலை பாடாய் படுத்திவிட்டு நிற்கும்.
6. இடிமன்னர்கள்.

நீங்களே சொல்லுங்கள், பெண்களுக்கு தனி இருக்கைகள் கொடுப்பது தவறா?
இந்தப் படத்தைப் (பாகம் 1) பார்க்கும்போது, அந்தப் பையனுக்கு பள்ளியின் மீதும் படிப்பின் மீதும் இருக்கும் வெறுப்பு, அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகள் போலவே எனக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் என்று என் மகனிடம் கூறினேன். உடனே அவன் சொன்னான் இந்தப் படத்தைப் பார்த்த 90 சதவீதம் பேருக்கு இந்த உணர்வுதான் ஏற்பட்டதாம் என்றான்.

எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன. திண்டுக்கல் பக்கத்தில் 5ம் வகுப்பு வரை உள்ள சிறு கிராமம். அங்குதான் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு திண்டுக்கலில் கான்வென்ட் என்று அழைக்கப்படும் (செயின்ட் ஜோசப்ஸ் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்) கிறிஸ்துவ பள்ளிக்கூடம். பெரிய பள்ளிக்கூடம். காதல் படத்தில் சந்தியா படிக்கும் பள்ளிதான்.

5ம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் பிக் ஏபிசிடி மட்டுமே தெரியும். ஸ்மால் ஏபிசிடி என்றால் என்னவென்றே தெரியாது. 6ம் வகுப்பில் 80-90 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம். ஒரு 10 பாடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டேன். இந்த ஒரு வாரத்தில் அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பாடம் நடத்திவிட்டார்கள் போல் இருக்கிறது. நான் போன அன்று டிக்டேஷன். எல்லோரும் டீச்சர் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல புத்தகத்தைப் பார்க்காமல் எழுத வேண்டும். என் நிலையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வலது பக்கத்தில் இருந்த பெண் எனது இடதுபுறமுள்ள பெண்ணை பார்த்து எழுதிக்கொண்டிருந்தார். என்னையும் அவ்வாறே எழுதச் சொல்லி சாடை காட்டினார். நான் எனது இடதுபுறமுள்ள பெண் எழுதுவதை பார்த்தேன். ஸ்மால் லெட்டர்சில் வேகவேகமாக எழுதிக்கொண்டிருந்தாள். என்னால் அதைப் பார்த்தே எழுத முடியவில்லை. புரியவேயில்லை. எனக்குத்தான் ஸ்மால் ஏபிசிடியே தெரியாதே.

நல்ல வேளை மற்ற பாடங்கள் எல்லாம் தமிழிலேயே இருந்தன. அதுவும் கஷ்டம்தான். ஆனால் எழுத்துக்கூட்டி படிக்கவாவது முடியுதே. நான் படித்த பத்தாம் வகுப்பு வரையில் ஒருமுறைகூட ஆங்கிலத்தில் பாஸ் ஆனதே கிடையாது. மற்ற பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டில் பெயில் ஆகி விடுவேன். தமிழிலும், கணக்கிலும் மட்டும் எப்போதும் பாஸ் பண்ணிவிடுவேன்.

இந்த லட்சணத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தது. அந்த வருடம்தான் 11ம் வகுப்பை எடுத்துவிட்டு +2 கொண்டுவந்தார்கள். நாங்களும், 11ம் வகுப்பு பசங்களும் ஒன்றாக பொதுத்தேர்வு எழுதினோம். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதினேன்.

ரிசல்ட் வந்துவிட்டது என்று காலையிலேயே ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. எங்கள் வீட்டிலும் மாமா பேப்ரில் என் நம்பரை தேடிக்கொண்டிருந்தார். அது எங்கே இருக்கப்போகிறது என்று நானும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் என் நம்பர் வந்திருந்தது.

மாமாவிற்கும் அதே ஆச்சரியம்தான். அந்த வருடம் புதிதாக 10ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைத்ததால் 30 சதவீதம் பேர்கூட பாசாகவில்லை என்றதால் பார்டரில் இருந்த கொஞ்சம் பேருக்கு மார்க் போடப்பட்டு பாசாக்கப்பட்டதாக பேப்பரில் செய்தி வந்திருந்தது. உடனே மாமா சொல்லிவிட்டார் நீ எப்படி பாசானேன்னு இப்போ தெரியுது.
அமீர்கான் படம் 'தாரே சமீன் பர்'. இந்த படத்தில் வரும் சிறுவனுக்கு மூளையில் ஒரு சிறு குறைபாடு. அவன் பார்க்க நார்மலாகத்தான் இருப்பான்.

பசங்களோடு விளைபாடும்போது பந்து தன்னை நோக்கி வரும்போது அவன் மூளை ஒரு இடத்தைச் சொல்லும். அவன் அந்த இடத்தில் போய் பந்தை பிடிப்பான். ஆனால் பந்து வேறு இடத்தில் விழும். இதனால் தன் வயது பிள்ளைகளால் ஒதுக்கப்படுகிறான்.

அதே போல் படிப்பிலும் அவனால் மற்ற பிள்ளைகளைப் போல் படிக்க முடியவில்லை. அவன் பெற்றோர்களுக்கும் இவனது குறைபாடு தெரியவில்லை. அவன் வேண்டுமென்றே படிக்காததுபோல் நினைக்கிறார்கள். அவனை ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மாவை பிரிந்து செல்வது அவனால் தாங்க முடியாத துன்பமாக இருக்கிறது. வேறுவழியில்லை. ஹாஸ்டலிலும் அவனுக்கு அதே நிலை. ஆசிரியர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் பெற்றோர்களை அழைத்து புகார் செய்கிறார்கள். அவன் அதிகமாக தனிமையை நாடிச் செல்கிறான்.




இந்த நேரத்தில் அவனுக்கு ஒரு புது ஆசிரியர் வருகிறார் (அமீர்கான்). அவர் இந்தச் சிறுவனின் வித்தியாசமான நடவடிக்கைகளை கவனித்து அவனுடைய குறையை கண்டுபிடித்துவிடுகிறார். ஏனென்றால் அவருக்கும் சிறுவயதில் அதே குறைபாடு இருந்திருக்கிறது. உடனே அந்த ஆசிரியர் அவன் பெற்றோரை அணுகி அவனுக்கு மூளையில் இந்த குறைபாடு இருக்கிறது என்கிறார். அவன் பெற்றோர் இவரை திட்டி அனுப்பிவிடுகின்றனர்.

இந்த ஆசிரியர் பிள்ளைகளிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளவர். அவர்களுக்கு புரிகிற விதத்தில் விடையாட்டுடன் பாடம் நடத்தக்கூடியவர். இது மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காது. இவரை மட்டமாகவே பார்ப்பார்கள் (அம்மணமான ஊரில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பதைப்போல) இவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.

அந்தச் சிறுவன் நன்றாக படம் வரைவான். ஒரு வீடு அதில் அம்மா, அப்பா, இரண்டு சிறுவர்கள். அவன் நோட்டில் கார்ட்டூன்போல் வரைந்த படத்தை பேப்பரை வேகமாக புரட்டும்போது ஒரு சிறுவன் மட்டும் அந்த வீட்டில் இருந்து மெல்ல மெல்ல விலகி பிறகு இல்லாமலே போய்விடுகிறான். அவனை ஹாஸ்டலுக்கு அனுப்பப்போவதை நினைத்து அவன் வரைந்த படம். கண்களில் நீரை வரவழைக்கிறது.

பின்னர் அவனை தன்வழிக்குக் அந்தச் சிறுவனை கொண்டு வந்து எப்படி அவனை சரியாக்குகிறார் என்பதுதான் படம். சிறுவனின் தந்தையும் மகனின் குறைபாட்டை நெட்டின் உதவியுடன் உணர்ந்து மகனை பார்க்க வருகிறார்.

டைரக்டர்கள் மட்டும்தான் 80களுக்கு போக வேண்டுமா? நாங்களும் போவோம்ல.

10ம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு (சத்தியமா பாசுங்க) வீட்டில் இருந்த காலம். அப்போது ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். திண்டுக்கல்லில் நாங்கள் இருந்தது இபி காலனியில். இபி காலனி கட்டும்போதுதான் பக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி கணேஷ் தியேட்டரை கடடினார்கள். வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். காலனியின் பின் பக்கம் என்விஜிபி தியேட்டர். பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். இரண்டு தியேட்டர்களுக்கும் நடுவில் போல் (சிறிது தூரம் நடக்க வேண்டும்) ஃ மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம், சோலைஹால் தியேட்டர் இருக்கும். அதற்கு கால்மணி நேரத்தில் போய் விடலாம். சென்ரல் தியேட்டர் ஊரின் நடுவில் இருக்கும். இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சக்தி தியேட்டர் ஊரின் கோடியில் இருக்கும். அதற்கு போவதுதான் சற்று சிரமம். அதனால் இந்த நான்கு தியேட்டர்தான் எங்கள் டார்கெட்.




எல்லாத் தியேட்டரிலும் பெஞ்ச் டிக்கெட் ஐம்பது காசுதான். அதற்கு பின்னால் அதே பெஞ்சில் பின்னால் சாய்மானம் இருக்கும். அதற்கு எழுபத்தைந்து பைசா என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னால் பாலகனி. என்விஜிபியில் மட்டும் பால்கனி டிக்கெட் கொஞ்சம் அதிகம். கணேஷ் தியேட்டர் புது தியேட்டர் என்பதால் எடுத்துவுடனேயே முன்னால் உள்ள டிக்கெட்டே ஒன்னேகால் ரூபாய். புது தியேட்டர் என்பதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நான் எங்க பாட்டியோடுதான் சினிமாவிற்கு போவேன். ஏன்னா என்னைவிட அதிகம் படம் பார்ப்பது எங்க பாட்டிதான். வயது 85 சக்தி தியேட்டருக்குக்கூட தனியாக நடந்தே போய் படம் பார்த்துவிட்டு வரும். (கரிசல் காட்டில் பாடுபட்டு, கம்மஞ்சோறும், கேழ்வரகு கூழும் குடித்த உடம்பு). எங்கள் கூட அவ்வப்போது என் அக்காவும் சேர்ந்துகொள்வார்கள்.

நான் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். மாமாவின் பர்மிஷன் கிடைத்தால்தான் சினிமாவிற்கு போக முடியும். 'ஏ' சர்ட்டிபிகேட் இல்லாத படமா, ஆபாச காட்சிகள் இல்லாத படமா என்று ஆலோசித்துவிட்டுத்தான் மாமா பர்மிஷன் கொடுப்பார். சினிமாவிற்கு போகிற நாள் என்றால் காலையிலேயே மனது சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் என்ன வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வேன். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பிவிடுவோம். இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மனது திளைத்திருக்கும். ஓட்டமும் நடையுமாக தியேட்டருக்கு போவோம். பெஞ்ச் டிக்கெட்டிற்கு பெரிய கியூ நிற்கும், அதனால்தான் வேகவேகமாக செல்வோம். அப்போதெல்லாம் எப்போதுமே கூட்டம் இருக்கும். கூட்டத்தின் அளவு வேண்டுமானால் வித்தியாசப்படும். தியேட்டர் காலியாக இருந்து நான் பார்த்ததில்லை.




எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சவ்ராஷ்ரா குடும்பம் இருந்தது. அவர்களை பட்டுநூல்காரர்கள் என்று மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் அழைப்பார்கள். அவர்கள் நெசவுத் தொழில் செய்பவர்கள், அதனால் இந்தப்பெயர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல வசதியானவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு பாட்டி உண்டு. அந்தப் பாட்டிக்கு எம்ஜியார் படம் என்றால் உயிர். எந்தத் தியேட்டரிலாவது எம்ஜியார் படம் போட்டால் என்னை துணைக்கு அழைப்பார்கள். (அதிர்ஷ்ட்டம் எப்படி அடிக்கிறது பாருங்கள்). அவர்களுடன் செல்வதென்றால் வீட்டில் பர்மிஷன் கேட்கத் தேவையில்லை. தகவல் சொன்னாலே போதும். அந்தப் பாட்டிக்கு பிரஷர், ஷூகர் போன்றவை உண்டு. அதனால் ரிக்ஷாவில் செல்வோம். அப்போதெல்லாம் ரிகஷாவும், குதிரை வண்டியும்தான் போக்குவரத்திற்கு. நிறைய பேர் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்வார்கள். தியேட்டரில் அந்தப்பாட்டி பால்கனி டிக்கெட் எடுப்பார்கள். ஆனால் நாங்கள் உட்காருவது என்னவோ முன்னால் உள்ள பெஞ்ச் டிக்கெட்டில். பாட்டிக்கு கண்ணு அவுட்.


ஒருமுறை பேப்பரில் அந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளியாகியுள்ளன என்று படத்தின் பெயரோடு வெளியிட்டிருந்தார்கள். எங்கள் மாமா என்னை அழைத்து அதில் நான் பார்த்த படங்களை என்னிடம் கேட்டு டிக் பண்ணிக்கொண்டே வந்தார். மொத்தம் நூற்றிப்பத்து படம் என்று நினைக்கிறேன். அதில் நான் பார்தது எழுபது படங்கள். (இதில் இந்த எம்ஜியார் படங்கள் கணக்கு கிடையாது). என் மாமாவின் அடுத்த கேள்வி இந்த படங்களில் உனக்கு பிடிக்காத ஒரு படத்தின் பெயரைச்சொல். ஒன்றுமேயில்லை.




இப்போதெல்லாம் டீவியிலேயே பாதி சீன்கள் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பைரேட் சிடி வேறு வந்து விடுகிறது. பாட்டு எல்லாம் முதலிலேயே போட்டு விடுகிறார்கள். அதுனால படம் பார்க்கப் போகும் முன்னாலேயே அந்தப் படத்தைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துவிடும். படம் பார்ப்பதற்கு அப்போது இருந்த சந்தோஷம் இந்தத் தலைமுறையினரிடம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அந்த சந்தோஷம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இது போன வாரம் நடந்தது.
நானும், வீட்டில் வேலை செய்யும் லட்சுமி அம்மாவும் அமர்ந்து டீவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தோம்.
"...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலித் மக்களுடன் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டது..."

லட்சுமி அம்மா என்னிடம் கேட்டார், "தலித்னா காலனிக்காரங்கதான."
"ஆமா" என்றேன்.
"காலனிக்காரங்கல்லா கோயிலுக்குள்ள போகக் கூடாது. இப்பெல்லா ரீஜன்டா (டீசன்ட்) டிரெஸ் பண்ணிக்கிட்டு கோயிலுக்குள்ள போறாங்க. அந்த பாவத்த அவங்கதான் அனுபவிப்பாங்க."
"ஏம்மா அவங்களும் மனுசங்கதான"
"அவங்கள கீழ்சாதின்னு கடவுளே பிரிச்சி வச்சுருக்கான்."
"கடவுள் பிரிக்கல, மனுசங்கதான் அவங்க வசதிக்காக பிரிச்சி வச்சிருக்காங்க. மேல் ஜாதிக்காரங்க அவங்களுக்கு வேலை செய்ய ஆள் வேணும்ங்கிறதுக்காக அப்புடி பிரிச்சி வச்சிருக்காங்க."

"அவங்க இப்ப ரீஜன்டாயிட்டாங்க, அந்தப்பசங்க என்னா பேச்சு பேசுறாங்க தெரியுமா?"
"கொஞ்சம் பேருதான் முன்னேறியிருக்காங்க. இன்னும் நிறையபேர் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்காங்க, எல்லா சாதிக்காரங்களும் பத்து மாசந்தான?"  என்றேன்.
அந்தம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது, கோபம்னுகூட சொல்ல முடியாது. ஆவேசம்னுதான் சொல்லனும்.
"போன வாரம் நான் அந்த பெரிய வீட்டுல வேல செய்யிறப்ப ஒரு தொழுநோய் வந்த பிச்சைக்காரன் கூப்டான். நான் வீடு பெருக்கிக்கிட்டே வெளிய வந்து அவங்கிட்ட சொன்னே -'வீட்டுல யாரும் இல்லப்பா'
'ஏன் நீ எங்கருந்து வர்ற?'
'செருப்பாலடிப்பேன். நான் வீட்டு வேல செய்யிறவ. வீட்டுக்காரங்க இல்லனா போவியா, திமிரு பேச்சு பேசற?'
'ஏன் நான் பேசக்கூடாதா?'
'நீ என்ன பாவஞ் செஞ்சியோ நோய் வந்து பிச்ச எடுக்கற, நா என்ன பாவஞ் செஞ்சனோ வீட்டு வேல செய்யிறேன். வாய மூடிக்கிட்டு போ'ன்னு சொன்னேன்."

"அப்பற நாலு நாளைக்கு முன்னால எங்க தெருவுல ஒரு வயசான அம்மா மயக்கம் போட்டு விழுந்துருச்சு. நானும் எம் மவனும் அந்த அம்மாவத் தூக்கிதண்ணி தெளிச்சி எழுப்பி விட்டோம் ரெண்டு நாளா சாப்பிடலன்னு சொல்லுச்சு. எம் மவன் பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து குடுத்தான். நானு என்னோட சேல ஒண்ணு, சால்வ ஒண்ணு எடுத்து குடுத்தேன்."

"நேத்து அந்த தெருப் பக்கமா போறேன், மயக்கம் போட்டு விழுந்த அந்தப் பொம்பள அவங்க வீட்டு வாசல்ல நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு ஒக்காந்துருக்கு. நான் நல்லா திட்டிட்டேன். பிச்ச வேணும்னா கேட்டு வாங்கனும். பொய் சொல்லக்கூடாது. அந்த பொம்பளய தூக்குறப்ப ஒரே நாத்தம். அவங்க குளிக்கவே மாட்டாங்க. கண்டதையும் திம்பாங்க". என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று அவங்க வீட்டுக்கு கிளம்பி போய் விட்டார்.

நான் அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். வீட்டுக்குப்போயாவது என் மீது உள்ள கோபம் தீர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.