என்கவுண்டர்
11/11/2010 | Author: ஜெயந்தி
குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.



அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்


நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.
This entry was posted on 11/11/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On November 11, 2010 12:39 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sariyaa sonnenga. aanaal ethuvum nadakkaathu inga

 
On November 11, 2010 12:40 PM , கே.ஆர்.பி.செந்தில் said...

மக்கள் ஒரு செய்தியின் பரபரப்பில் இருக்கும்போதே நடத்தப்பட்ட இந்த என்கவுடரின் பின்னணி சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. எனக்கும் பிள்ளைகளை அப்படி கொடூரமாக ஒருவன் கொன்றிருக்கிறான் என்று பார்த்தபோது கொன்றவனை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் என்றுதான் தோன்றியது.. அது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எனது எண்ணம், ஆனால் குற்றம் புரிந்தவனை நீதி மன்றத்தில் நிறுத்தாமல் போலிஸ் நீதியை நிலைநாட்டுவது தவறான முன்னுதாரணம் .. நாம் நம் பிள்ளைகளை கொடூரமாக இழந்து விட்டோம், அந்த மனநிலையில் போலிசின் செயல் நியாயமாக பார்க்கப்பட்டாலும், இந்த செயலின் பின்னணியைக் குறித்த சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நோக்கியாவில் இறந்த அம்பிகாவை மட்டுமல்ல நிறைய அநியாயங்களை சுலபமாக மறந்து விட்ட நம்மை டியூன் செய்து வைத்துவிட்டார்கள் என்பது உண்மைதான்...

 
On November 11, 2010 1:52 PM , dineshkumar said...

ரட்சகர்கள் வருவார்கள் என்ற என்னத்தை விட்டுவிட்டு
நாம் ஏன் ரட்சகர்களாக மாறக்கூடாது????

சதி செய்யும் ஆட்சியாளர்களை நம்மால் கேள்வி கேட்க்க முடியவில்லையே ஏன்?

யுகம் மாறவேண்டும் வதம் வரும் நேரம்

 
On November 11, 2010 7:31 PM , பயணமும் எண்ணங்களும் said...

நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

நாமே ஏன் இருக்ககூடாது என துணியணும்.

நல்ல அலசல்.

 
On November 11, 2010 8:17 PM , தமிழ் உதயம் said...

ரட்சகர்களும் ராட்ஷசன்களாக மாறியதாக தான் வரலாறு.

 
On November 12, 2010 12:09 AM , Chitra said...

என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.


....அவ்வ்வ்வ்...... !!!

 
On November 12, 2010 3:08 PM , சௌந்தர் said...

உயிருக்கு மதிப்பு இல்லை மெசின் க்கு மதிப்பு இருக்கிறது என்ன உலகம் இது...!

 
On November 13, 2010 9:30 PM , சந்தனமுல்லை said...

நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள் !

தெரியாத ரட்சகர்களுக்கு ஏன் காத்திருக்கவேண்டும்?
எனக்கென்னவோ அந்த ரட்சகர்கள் நீங்களும், நானும் இவ்விடுகையை வாசித்தவர்களும்.....என்று அனைவருமேதான் என்றுத் தோன்றுகிறது! :-)

 
On November 14, 2010 1:30 PM , ஜெயந்தி said...

நன்றி ரமேஷ்!

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

நன்றி தினேஷ்குமார்!
நாம்தான் ரட்சகர்களாக மாற வேண்டும்.

 
On November 14, 2010 1:31 PM , ஜெயந்தி said...

நன்றி சாந்தி!

நன்றி தமிழ் உதயம்!

நன்றி சித்ரா!

 
On November 14, 2010 1:34 PM , ஜெயந்தி said...

நன்றி சவுந்தர்!

நன்றி சந்தனமுல்லை!
நாம்தான் ரட்சகர்கள்.

 
On November 14, 2010 1:41 PM , ஹரிஸ் said...

நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம்//
உண்மை..

 
On November 14, 2010 1:44 PM , ஹரிஸ் said...

என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன்//

ஈழ போரின் போது இந்த நிலையில் தான் இருந்தோம்..

 
On November 14, 2010 8:27 PM , விமலன் said...

வடிவமைக்கப்பட்ட மனதுதையும்,மூளையையும் விரும்பி ஏற்க எச்சில் ஒழுக காத்திருப்பவர்களுக்கு நாம் அடிமையாகிப் போகலாமோ?என கேட்கிறது உங்களது சிந்தனை.நன்றாக உள்ளது.

 
On November 17, 2010 9:34 AM , விந்தைமனிதன் said...

//நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.
//

சத்தியமான வார்த்தைகள்! ஒரு இடதுசாரிச் சிந்தனையாளரால் மட்டுமே இப்படியான கட்டுரைகள் எழுத முடியும்

 
On November 20, 2010 6:25 PM , ஹரிஹரன் said...

சிந்தனையை தூண்டிய இடுகை.. எந்திரன் வெளிவந்த சில நாட்களில் என்னிடம் பலர் கேட்டுவிட்டார்கள், எந்திரன் பார்த்தாச்சா? ஏன் இன்னும் பார்க்கலையா? எனக்கு அப்போது தோன்றியது, பார்க்காவிட்டால் நாம் தேசிய நீரோட்டத்தில் (பொதுப்புத்தியில்) இனையவில்லை என்றாகிவிட்டது. நாம் பார்ர்கின்ற தொ(ல்)லைக்காட்சிகள் நம்மை மிகச்சரியாக டியூன் செய்திருக்கிறது என்பது விளங்கிற்று.