மகளிர் தினத்திற்காக...

அவள் என் பக்கத்து பெட்டில் படுத்திருந்தாள். முதலில் கவனிக்கத் தோன்றவில்லை. ஏன்னா அந்த ஹால்ல என்னப்போலவே நிறையப்பேர் கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டு படுத்திருந்தாங்க. முதல் நாள் எல்லோரும் ஒருவித மயக்கத்திலேயே இருந்தோம். ஆப்பரேசனுக்கு கொடுத்த மாத்திரை எபக்ட். அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போதே வலி மாத்திரைகளின் எபக்ட் தீர்ந்துபோயிருக்க வலியின் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்கம்மா ஓடிப்போய் நர்சுகிட்ட வலி மாத்திரை கொடுக்கச்சொல்லி கேட்டுவிட்டு வந்தார்கள். முதல்ல எந்திரிச்சு பாத்ரூம் போயிட்டு, பல் தேய்ச்சிட்டு டிபன் சாப்பிடச்சொல்லுங்க மாத்திரை எடுத்துட்டு வர்றேன்னு அவங்க கறாரா சொல்லிட்டாங்க.

கட்டில்ல இருந்து இறங்குவது பெரிய பிரம்ம பிரயத்தனமா இருந்துச்சு. கால கீழேயே ஊன்ற முடியவில்லை. அம்மா மெல்ல கைத்தாங்கலாக இறக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சி எல்லோரையும் மிரட்டிவிட்டது. இந்த சின்னப்பொண்ணு கட்டிலில் இருந்து ஜங்கென்று குதித்து, துள்ளலோடு நடந்து சென்றாள். எங்கம்மா அலறிவிட்டார்கள், 'அய்யய்யோ தையல் போட்டிருக்கே?' அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவள்பாட்டுக்கு சென்று பாத்ரூம் போய்விட்டு திரும்பிவந்து ஒன்றுமே நடக்காததுபோல் படுத்துக்கொண்டால். அந்த ஹாலே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு அசைந்தது.

பிறகுதான் அவளை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவள் அருகில் யாருமே இல்லை. மருந்து வைக்கும் ரேக்கில் பிரட் பாக்கெட் இருந்தது. அதை எடுத்து தின்றுகொண்டால். நர்சு மாத்திரை கொடுத்ததை வாங்கி தின்றுவிட்டு படுத்துக்கொண்டால். எங்கம்மா போய் அவளிடம் பேசினார்கள். 'ஏம்மா நீ எந்த ஊரு' அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. 'உனக்கு கல்யாணம் ஆகிருச்சா' ஒரு முறை 'ஆமாம்' என்றால் ஒரு முறை 'இல்லை' என்றாள். 'வேலை பாக்குறியா' 'ஆடு மேய்க்கிறேன்' என்றாள். 'அம்மா அப்பா இருக்காங்களா' என்ற கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் பேச்சு நார்மலாக இல்லை. பிறவிலேயே மனவளர்ச்சி இல்லையா அல்லது சமீபத்தில் இப்படி ஆச்சா என்னவென்று தெரியவில்லை. மதியமும் இரவும் எனக்கு கொண்டு வரும் உணவிலிருந்து அவளுக்கும் அம்மா உணவு கொடுத்தார்கள்.

நர்சிடம் விசாரித்தபோது, பக்கத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், அங்க காட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பாளாம். அப்போது ஒரு கயவனா அல்லது சில கயவர்களா என்று தெரியவில்லை கர்ப்பமாக்கிவிட்டார்களாம். இப்போது கர்ப்பத்தை கலைத்துவிட்டு கருத்தடை ஆப்பரேசன் செய்துவிட்டார்களாம். அதுக்குக் கூட அவளை அழைத்து வந்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் இருக்கும் பணியாளர்கள்தான். நாங்கள் இருந்தது வேலூர் (காட்பாடி).

இவளை அப்படியே விட்டிருந்தாள் என்னவாகியிருக்கும். காட்டில் எங்காவது சுற்றியலையும்போது பிரசவவலி வந்திருந்தால், அல்லது வலி வந்தவுடன் மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாலும் பிறக்கும் அந்தக் குழந்தையின் நிலைமை என்ன? இப்படி உள்ளவர்களை குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்களை இப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. அவளுக்கு அம்மா அப்பா இருப்பாங்களா? வீடு இருக்குமா?

அவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.

அடுத்தநாள் காலையில் எல்லோரையும் அனுப்பிவிட்டார்கள். ஒன்பதாம் நாள் வந்து தையல் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது.
This entry was posted on 3/08/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On March 8, 2010 at 2:16 PM , தேவன் மாயம் said...

அவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.///

என்ன செய்வது.. நிறையப் பெண்களின் நிலை இதுதான்!!

 
On March 8, 2010 at 3:08 PM , Unknown said...

பாவமுங்க அந்த பொண்ணு
இப்பிடித்தான் நிறைய

 
On March 8, 2010 at 3:22 PM , Muruganandan M.K. said...

"அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள்."
மனத்தை தேய்த்துக் கசக்குகின்றன இத்தகைய நிகழ்வுகள்.

மகளிர்தின வாழ்த்துக்கள்!

 
On March 9, 2010 at 8:46 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி தேவன் மாயம்!

நன்றி ஏ.சிவசங்கர்!

நன்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன்!

 
On March 10, 2010 at 5:11 AM , தாராபுரத்தான் said...

நமது கிராம பகுதியில் பணிபுரிந்து வரும் கிராம நல செவிலியர்களில் சிறந்த சேவைகளில் அதுவும் ஒன்று.

 
On March 11, 2010 at 6:31 AM , Anonymous said...

hmm enna cholvathu thiravillai..

gadvulidam prathiphom..ethupola meendum evulagil nadakamal eruka..

padivu nandraga ullathu..

nandri
valga valamudan
complan surya

 
On March 24, 2010 at 2:07 PM , R.Gopi said...

//அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். //

//சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது. //

ம்ம்ம்.... படித்து முடித்தவுடன் என் கண்களிலும்.
ரொம்பவே நெகிழ்வான பதிவு.... மனதில் கனம் வந்து ஏறிக்கொண்டது...

 
On March 24, 2010 at 9:30 PM , ஜெயந்தி said...

நன்றி தியாவின் பேனா!

நன்றி தாராபுரத்தான்!
ஆமாம் அவர்களும் இல்லாவிட்டால் சின்னப்பொண்ணுகளின் நிலைமை?

நன்றி காம்ளான் சூர்யா!

நன்றி ஆர்.கோபி!