காட்சியில் எனது படைப்பு "அஞ்சல் தலை" என்ற பகுதியில் பிரசுரமாகியது. அதை எனது பிளாக்கிலும் மறு பிரசுரம் செய்கிறேன்.

---------------------


நினைவு தெரியாத வயதில் பார்த்திருக்கும் அப்பாவுக்கு, நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்றே தெரியாத உங்கள் மகள் எழுதிக்கொண்டது,

இங்கு நான், உங்கள் மருமகன், பேரன் மற்றும் பேத்தி அனைவரும் நலமாக உள்ளோம். நீங்கள் நலமாக உள்ளீர்களா?

உங்கள் திருமணம் நடந்தபோது அம்மாவிற்கு வயது 16, உங்கள் வயது 17 என்று அம்மா சொன்னார்கள். மூன்று வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து கணாக்கருப்புக்கு பொங்கல் வைத்து கடா வெட்டி அருவா அடித்து வைத்து வேண்டிக்கொண்டபின் நான் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அப்படி வேண்டி பிறந்த என்னை நீங்கள் கொண்டாடியிருக்க வேண்டாமா அப்பா. வீதியில் எறிந்துவிட்டீர்களே அப்பா.

உங்களிடம் எனக்கு கேட்க சில கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அம்மா, அப்பாவுடன் வாழும்போது அவர்கள் குடும்பம் என்பது எவ்வளவு கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் அதுதான் சொர்க்கம். ஆனால் எனக்கு இன்னொரு குடும்பத்தினரை அண்டி வாழும் வாழ்க்கையை ஏன் கொடுத்தீர்கள்? உங்களின் அறியாமையா, அல்லது சிறுவயதில் திருமணம் முடித்ததினால் அனுபவமில்லாமல் நடந்ததா? தமிழக வழக்கப்படி தாய்மாமா வீட்டில் தஞ்சமடைந்த என்னையும் அம்மாவையும் மாமா எந்தவித குறையும் இல்லாமலேயே கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அது நம் வீடு என்கிற உரிமை மனதில் தோன்றுமா அப்பா?

பள்ளி செல்லும் வயதில் யாராவது உங்க அப்பா என்ன செய்றாரு, எங்க இருக்காரு போன்ற கேள்விகள் என்னைப்பார்த்து யாராவது கேட்டால் அப்படியே குறுகிப்போய்விடுவேன் அப்பா. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் என் ஆவி பாதி போய்விடும் அப்பா. என் வயது பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் விளையாடும்போதோ கையைப் பிடித்துக்கொண்டு எங்காவது வெளியில் செல்லும்போதோ என் மனது எப்படி ஏங்கியிருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா அப்பா. அப்பா என்ற வார்த்தையே என் வாயிலிருந்து வந்தாக ஞாபகமில்லை. நம் ஊரில் அப்பாவை ஐயா என்றே அழைப்போம். அந்த வார்த்தையும் நான் அறியாத வயதில் என் வாயில் வந்தா என்று நினைவில்லை.

வீட்டில் ஒருமுறை சினிமாவிற்குச் சென்றிருந்தோம். தந்தை மகள் பாசத்தைப் பற்றிய படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த எனக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஏன் அழுகிறாய் என்று வீட்டில் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தேன்.

எனக்கு திருமணம் ஆன பிறகு கணவர் பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் எனது வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தது. ரேஷன் அரிசிதான் சாப்பாடு. அப்போது என் வீட்டிற்கு வந்திருந்த அம்மா சொல்லி அழுதார்கள், உன் அப்பா வீட்டில் நெல் விளைந்து வண்டி வண்டியாக ஒருநாளும் தவறாமல் 3 மாதம் வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படி குடும்பத்தில் பிறந்த உனக்கு இப்படி புழுத்துப்போன அரிசியை தின்ன கொடுத்துவைத்திருக்கிறதே என்று அழுவார்கள். நான் ரேஷன் அரிசி சாப்பிடுவது பற்றி ஒருநாளும் வருந்தியதில்லை. ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கே எனக்கென்று ஒரு வீடு கிடைத்தது. அது சிறியதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

என் பிள்ளைகளுக்கு தாத்தா என்கிற வகையில் உங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையே அப்பா. உங்கள் பேரப்பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா அப்பா? இப்போதும் நீங்கள் இல்லாத அந்த வெறுமையான இடத்தை நோக்கி ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறேன். இந்தக் கடிதத்தை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்துகொண்டிருக்கின்றன. நான் சாகும் வரை அந்த இடம் வெறுமையாகவே இருக்கும்.

அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு அப்பா என்கிற பிம்பம் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்பா. இந்த கடிதத்தை வாசிக்க நேர்ந்தால் எனக்கு பதில் எழுதுவீர்களா அப்பா?

இப்படிக்கு உங்கள் அன்பே கிடைக்காத மகள்,
ஜெயந்தி
This entry was posted on 7/01/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On July 1, 2010 at 1:27 PM , எல் கே said...
This comment has been removed by the author.
 
On July 1, 2010 at 1:38 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜெயந்தி ஏற்கனவே ezhuthui iruntheerkal illiyaa? உங்களுக்கு aaruthal solla vaarththaikal illai,

 
On July 1, 2010 at 3:17 PM , விக்னேஷ்வரி said...

ரொம்பக் கஷ்டமா இருக்கு. :(

 
On July 1, 2010 at 4:41 PM , எல் கே said...

mannikavum., kathai endru ennai pinootam ittu vitten. ippoluthuthan kavanithen ...

 
On July 1, 2010 at 6:30 PM , சௌந்தர் said...

அப்பா இல்லை என்றால் ரொம்ப கஷ்டம் அக்கா....

 
On July 1, 2010 at 6:48 PM , Menaga Sathia said...

படித்ததும் ரொமப் கஷ்டமாகிவிட்டது தோழி...

 
On July 1, 2010 at 11:50 PM , சாந்தி மாரியப்பன் said...

படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா.

 
On July 2, 2010 at 2:48 AM , Chitra said...

கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்!

 
On July 9, 2010 at 4:04 PM , ஜெயந்தி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. விருது கொடுத்த ஜெய்லானிக்கு ஸ்பெஷல் நன்றி.

 
On July 9, 2010 at 8:43 PM , வினோ said...

// நான் சாகும் வரை அந்த இடம் வெறுமையாகவே இருக்கும். //

நிரப்ப முடியாத உறவு..

 
On July 10, 2010 at 8:35 AM , ஜெயந்தி said...

நன்றி வினோ!
உண்மை.