"ஏம்மா எப்போ பாத்தாலும் ஒரே மாதிரி சமையல் பண்ணுறியே கொஞ்சம் மாத்தி ஏதாவது பண்ணேன்" என்ற பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு எடுத்த அதிரடி முயற்சி. டிவியில் தான் எல்லாச் சேனலிலும் சமையல் சொல்லித்தருகிறார்களே. ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்கன் மஞ்சூரியன் செய்வது என்று கம்பேனியில் முடிவானது. அடுத்து அதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணி. அது என்ன பொருட்களை சேகரிக்கும் பணி என்று தனியாக ஒரு வேலை போல் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நம்மூர் சமையலுக்கு அதிகபட்சமாக இஞ்சி, புதினா, கறிவேப்பிளை கொத்தமல்லி போன்றவைதான் உடனடித்தேவையாக இருக்கும். சிக்கன் மஞ்சூரியனுக்கு நாம் சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்கும் குடை மிளகாய், வெங்காயத் தாள் போன்றவை. இன்னும் கேள்வியே பட்டிறாத சோயா சாஸ் போன்றவை. ஓரளவு எல்லாவற்றையும் சேகரித்தாகிவிட்டது. இந்த சோயா சாஸ் மட்டும் பக்கத்துக்கடையில் கிடைக்கவில்லை. கணவர் மெயின் ரோடுக்கு அனுப்பப்பட்டார். இரண்டு மூன்று கடைகளில் தேடிவிட்டு போன் வந்தது சோயா சாஸ் கிடைக்கவில்லை என்று. "இங்க பாருங்க அது இல்லாம இந்த டிஷ் நல்லா இருக்காது" போனிலேயே முகமும் தெரிந்துவிட்டது போலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கடைசியாக நீல்கிரீஸ் கடையில் இருந்து அப்படா என்று வாங்கி வந்தார்.

அது எந்த அளவில் கிடைக்கும் என்று தெரியாததால் சின்ன அளவில் கிடைப்பதை வாங்கி வரும்படி சொல்லி அனுப்பினேன். வாங்கி வந்த பாட்டில் பெரிதாக இருந்தது. (350 மிலி)

"சின்னதுதான வாங்கிட்டு வரச்சொன்னேன்".
"இதுதான் சின்னதாம்".
"எத்தனை ரூபா"
"நாப்பது ரூபா". பக்கத்தில் அம்மா பார்ப்பது தெரிந்தது. நாம ஏன் அந்தப் பக்கம் திரும்பப் போறோம். நமக்குத்தான் தெரியுமே அதன் அர்த்தம் 'இவ்வளவு காசு குடுத்து அத வாங்கனுமா?' என்று.

ஒருவழியாக சமையல் செய்து முடித்து சாப்பிட அமர்ந்தோம்.
"எப்டி இருக்கு?" - நான்
".........." கணவர் (எதுக்கு வம்பு)
"ம் இருக்கு. இதுல சிக்கன் போடம காய் போட்டுருந்தா நல்லாயிருக்கும்" -அம்மா
"நல்லா இருக்கு" -பிள்ளைகள்
பிள்ளைகள் கடையில் இதெல்லாம் சாப்பிடுவார்கள் என்பதால் நம் அடுத்த கேள்வி
"கடையில மாதிரியே இருக்கா?"
"ம் கடையில மாதிரிதான் இருக்கு" -பிள்ளைகள்
நல்ல வேளை சமையல் செஞ்சவங்களையே யாரும் கேட்க மாட்டாங்களே? நாம் தப்பித்தோம். அந்த குடை மிளகாய் வாடை சிக்கன் சாப்பிடும் திருப்தியையே தரவில்லலை. தேவையில்லாமல் எப்போதும் செய்யும் சிக்கன் வறுவல், பெப்பர் ப்ரை, சிக்கன் 65 எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

சரி இந்த சோயா சாஸ் பாட்டிலில் அப்படியே இருக்கிறதே? சிக்கன் மஞ்சூரியனுக்கு இரண்டு ஸ்பூன்தான் செலவாகியது. அடுத்து வெஜிடபிள் ப்ஃரைடு ரைஸ் செய்வது என்று கம்பேனியில் (வேறு யார் நான் மட்டும்தான்) முடிவு செய்யப்பட்டது. ப்ஃரைடு ரைஸ்சை சாப்பிடும் போது இந்த முறை நினைவிற்கு வந்தது வெஜிடபிள் பிரியாணி, தேங்காய்பால் சாதம் with மட்டன் or சிக்கன் குழம்பு. இதற்கும் இரண்டு ஸ்பூன் மட்டுமே செலவானது.

சோயா சாஸ் பாட்டிலை பார்க்கும்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் தோன்றும். முதலாவது பாட்டிலில் மீதம் இருப்பதை என்ன செய்வது? நம்மூர் சமையலில் இதை உபயோகிக்க முடியுமா? யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்கள். இரண்டாவது அம்மாவிடமிருந்து இன்னும் கொஞ்சம் நாட்களில் வரப்போகும் வசனம் "சாப்புட வேண்டியதுதான், நான் வேண்டாம்னு சொல்லல. ஒவ்வொரு காசையும் எப்டி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். இப்புடி வீணாக்கணுமா?"

டிஸ்கி: எழுதி முடிச்சுட்டு பார்த்தா சேம் சைடு கோல் போல தெரியுது. இதுதான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதா?
|
This entry was posted on 12/09/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On December 31, 2009 at 10:10 PM , ஜெயந்தி said...

நன்றி சந்தனமுல்லை!