ஏனுங் என்னய தொலாவுனீங்களா?
நான் வந்துட்டேனுங்.
அப்பா மூணு நாளு சூறாவளி சுற்றுப்பயணம் மாதிரி சுத்தியாச்சு. பனிக்காத்துல சுத்துனதுனால இங்க வந்தவுடனே ஜுரத்திலயிலும் விழுந்து எந்திரிச்சாச்சு. போன திங்கள் செவ்வாய் சென்னையில் நல்ல மழை என்று பிள்ளைகள் போனில் சொன்னார்கள். கோவை வெறும் மேக மூட்டம் மட்டுமே.
கோவையில் ஒரு நாள் பொள்ளாச்சி பக்கத்தில் கிராமங்களில் இரண்டு நாள். கணவரது உறவுகள். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை போகிற ரோடில் இருக்கும் சில கிராமங்களுக்கு சென்று வந்தோம். எங்களைப் பார்த்ததும் அந்த மக்கள் கண்களில்தான் எவ்வளவு சந்தோஷம். ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு நிலத்திற்கு நடுவில் வீடு கட்டிக்கொண்டு வருஷமெல்லாம் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தலைமுறையில்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மற்ற ஊர்களுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
அந்த கிராமங்களில் வெயில் காலத்தில்கூட வேர்க்காது. காற்று வேறு அடித்துக்கொண்டே இருக்கும். இப்போது ஊருக்குப் போனபோது சுஸ்லான் காற்றாலைகளை பார்க்க முடிந்தது.
இந்த கிராமத்திற்குச் செல்வதென்றாலே சந்தோஷமாகிவிடும். முக்கால்வாசி தென்னந்தோப்பு. கொஞ்சம் மற்ற பயிர்களும் வைத்திருப்பார்கள். உறவினர் ஒருவரின் தயவில் காரிலேயே எல்லா ஊர்களுக்கும் சென்று திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லாவிட்டால் எல்லோரையும் பார்ப்பது மிகவும் சிரமமாகியிருக்கும். என்ன சொல்ல கோயமுத்தூர் பயபுள்ளைகளும் பாசக்கார பயபுள்ளைங்கதான்.
ஒரு ஊருக்குச் செல்லும்போது இரவு நேரம். தோட்டத்திற்கு நடுவில் வீடுகட்டிக்கொண்டு இருப்பதால் தெரு விளக்கு இருக்காது. நடு ரோட்டில் ஒரு ஆந்தை கார் வெளிச்சத்தைப் பார்த்து செய்வதறியாமல் அமர்ந்திருந்தது. உடனே காரை நிறுத்திவிட்டு லைட்டை ஆப் பண்ணி போட்டவுடன் அந்த ஆந்தையைக் காணவில்லை.
ஒரு வீட்டிற்குச் செல்லும் போது வரப்பில் புல் பிடுங்கி ஒரு ஓரம் கிடந்தது. அதன் அருகிலேயே கடப்பாரை ஒன்று மண்ணில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் கேட்ட கேள்வி "ஏனுங் வழியில ஆணி கெடந்துச்சுங்" "ஆணியெல்லாம் ஒன்னுமில்ல. ஒரு கடப்பாரைதான் இருந்துச்சு" "சின்ன ஆணிகூட கெடந்துச்சுங் அதுலதான் மாடு கட்டி வச்சிருந்தோம் " ஆணியில மாடு கட்டுறதா? என்னான்னு பார்த்தா அது கடப்பாரையில பாதியளவு இருக்கு. கடப்பாரை ஆணின்னா, ஆணிய என்னான்னு சொல்லுவாங்க.
This entry was posted on 12/23/2009 and is filed under
பயணம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
3 comments:
மினின்னு சொல்லுவாங்...
எங்க ஏரியாவ நல்லா அனுபவிச்சீங்கன்னு சொல்லுங்க.........
நன்றி அண்ணாமலையான்!
நன்றி சங்கவி!
உண்மைதான்.