உன்னை போல் ஒருவன்
10/21/2009 | Author: ஜெயந்தி
எங்கள் அலுவலகத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பெண் வேலையை விட்டு நின்று விட்டாள். மின்சார அடுப்பில் அலுவலகத்திலேயே டீ தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், அதற்கும் ஆள் தேவைப்பட்டது. எனவே இதற்கென்று ஆள் அனுப்பும் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு ஆள் ஏற்பாடு செய்தார்கள். 


வரும் பையன்கள் ஒருவாரம் அல்லது அதிகபட்சம் 10 நாட்களுக்கு மேல் ஒருவரும் நிலைக்கவில்லை. காரணம் என்னவென்றால் அவர்களுக்கான வேலையைத் தவிர, கடைக்குச் செல்வது, பேங்குக்கு செக் போட அனுப்புவது, சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு அனுப்புவது... என்று வேலை சக்கையாகப் பிழியப்படும். மேனேஜர் வேறு அவர் மேல் இடத்தில் வாங்கிய அர்ச்சனையை இவர்களிடம் காட்டித் தீர்த்துக்கொள்வார். மேனேஜரிடம் முதலில் முறைப்பார்கள். பிறகு பதில் பேசத் தொடங்குவார்கள். அடுத்து காணாமல் போய்விடுவார்கள். இதெல்லாம் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களுக்குள் நடந்து முடிந்துவிடும். அடுத்த பையன் அனுப்பப்படுவான். இதே கதைதான். 


இந்த முறை வந்தவன்தான் ஷாகித். அமைதியாக இருப்பான். சொன்ன வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருப்பான். எதிர்த்து பேச மாட்டான். ஆறடி உயரம் இருப்பான். ஆள் பார்க்க நன்றாக இருப்பான். வயது 20௦-லிருந்து 22-க்குள் இருக்கும் எங்களுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நாங்கள் வேலை செய்தது அந்த அலுவலகத்தின் பிராஞ்சில். மெயின் ஆபீஸ் இரண்டு தெரு தள்ளி இருக்கும். அவன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவனை சிறிது நேரம் உட்கார சொல்லுவோம். உடனே மெயின் ஆபீசில் இருந்து போன் வரும்.

"ஷாகித் அங்கே இருக்கானா?''

"இங்க இல்ல"
"இப்பத்தான் வந்தான். இங்கே கொஞ்சம்வேலை இருக்கிறது. முடிந்தவுடன் அனுப்புகிறோம்."
என்று நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதில் சொல்லுவோம். என்ன ஒரு பத்து நிமிடம் அவனைக்காப்பாற்ற முடியும்.

ஒரு முறை அவன் டீ எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர்கள் டீ குடிக்கும் வரை அமர்ந்திருந்தான். டீ குடித்தவுடன் டம்ளரை எடுத்து கழுவ வேண்டுமே?

திடீரென்று சுதா ஓடி வந்தாள்.

"மேடம் மேடம் ஷாகித்திற்கு ஃபிட்ஸ் வந்துருக்கு"


நாங்கள் எல்லோரும் அவனிடம் ஓடினோம்.

எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் எல்லாம் மார்க்கெட்டிங்கிற்கு காலையிலேயே கிளம்பிவிடுவார்கள். நாங்கள் பெண்கள் மட்டுமே இருப்போம். அவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலிக்கிறது என்றான். உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. இது ஃபிட்சில் சேருமா என்று தெரியவில்லை. அவன் சுய நினைவோடுதான் இருந்தான். பாக்கெட்டிருந்து தீப்பெட்டியை எடுத்துக்கொடுத்து சூடு வைக்கும்படி கையைக்காட்டினான். அவன் மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை சூடு வைத்த வடு.


நான் வயதில் பெரியவள் என்பதால் சூடு வைக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"சூடு அவசியம் வைக்கணுமா?"

"வச்சாத்தான் சரியாகும்"

தீக்குச்சியைப் பற்ற வைத்து அருகில் சென்று வைக்க முடியாமல் ஐந்தாறு குச்சிகள் காலியாகின. கடைசியில் பற்றவைத்தவுடன் அவனே இழுத்து வைத்துக்கொண்டான். எம்டிக்கு தகவல் சொல்லப்பட்டு, அவனுடைய ஓனர் வந்து அழைத்துச சென்றார். 


அடுத்தநாள் அலுவலகத்திற்கு வந்த அவனை அழைத்து விசாரித்தேன். எப்போதிலிருந்து இப்படி வருகிறது என்று கேட்டேன். அப்போது அவன் வலது கையைக் காட்டினான். அதில் சுமதி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்து. அந்தக்கையில் தீக்காயம் எதுவும் இல்லை. 


"இந்தப்பெண்ணை நான் லவ் பண்ணினேன். அவங்க அம்மாவும், அண்ணனும் எதுத்தாங்க, அதனால அறுவாள எடுத்துட்டுப்போயி அவங்க ரெண்டு பேரையும் வெட்டிட்டேன். இதப்பார்த்துக்கிட்டிருந்த எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி. ஆஸ்பத்திரியில வெச்சி என் கையைப் பிடிச்சிகிட்டே செத்துப்போயிட்டாங்க. அப்போதான் முதல் முறையா வந்தது" என்று ஏதோ மூலைக்கடையில் மசால்வடை கிடைக்கும் என்கிற தொணியில் சொல்லிக்கொண்டிருந்தான்.


என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் உண்மையில் நாலே வார்த்தையில் சென்னையில் பேசும் கொச்சைத் தமிழில் சொன்னான்.

"அப்புறம் ஜெயிலுக்கு கூட்டிடுபோனாங்க. சொந்தக்காரர்கள் எங்கள் நிலத்தை விற்று அரசியல்வாதிக்கு பணம் கொடுத்து என்னை வெளியே கொண்டு வந்தார்கள். இப்போதுகூட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப்போடுகிறேன்" என்றான்.

"டாக்டர்கிட்ட பார்த்தியா?"

"எத்தனையோ டாக்டர்கிட்ட பாத்துட்டேன். யாராலயும் சரிபண்ண முடியல."

மனோதத்துவ மருத்துவரிடம் பார்த்தாயா என்று கேட்க நினைத்தேன். அது அவனுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

"உங்க ஊர் எது?"
"ஆம்புர் பக்கத்துல கிராமம். அங்க சொந்த வீடு இருக்கு. என் பிரண்ஃட் குடும்பத்தான் தங்கியிருக்கு. அவங்க அம்மா எனக்கும் அம்மாபோல. நான் சம்பாதிப்பதை அவர்களுக்கு அனுப்பிவிடுவேன்"
"உங்க அப்பா?"

"அவர் எங்க அம்மா இருந்தப்பவே ஹார்ட் அட்டாக்குல செத்துப்போயிட்டார். என்றான்.

அவங்க அலுவலகத்தில் 200, 300 பையன்களை வடாற்காடு மாவத்தில் இருந்து அழைத்து வந்து ஒரு இடத்தில் தங்க வைத்து சாப்பாடு போட்டு, கல்யாண மண்டபங்கள, ஹோட்டல்கள், எங்கள் அலுவலகம் போல் வேலைக்கு ஆள் கேட்பவர்களுக்கு என்று சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள். எங்கள் ஆபிஸில் 4000 சம்பளம் வாங்கிக்கொண்டு அவனுக்கு 3000 கொடுப்பார்கள். அன்றிலிருந்து ஷாகித் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தான். மனம் எப்போதும் வேதனையிலியே இருந்து.

அவன் விஷயத்தை என்னிடம் மட்டுமே சொல்லவில்லை, யார் கேட்டாலும் சொல்லிவிடுவான். இவனை மாற்ற வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டேன். இவன் யார் சொல்வதையும் கேட்கிற குணமுடையவன் அல்ல மனதில் தோன்றுவதை செய்கிறவன் என்று தோன்றியது.


பரவாயில்லை அன்பினாலே செய்ய முடியாதது எதுவுமில்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படி பேசுவது என்று பலவாறாக யோசனை செய்து கொண்டேன். அப்போது அவன் என்னருகில் வந்தான். முகம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


"மேடம் எங்க ஊருலயிருந்து எனக்கு போன் வந்துச்சு. எங்க வீட்டு வாசல்ல ஒரு குழந்தை கிடந்ததாம். அதை என்ன செய்யனு கேட்டாங்க. அத எடுத்து வச்சிக்கங்க, அது என்னோட தங்கச்சின்னு சொல்லிட்டேன்." முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

"யாராவது வந்து கேட்டாங்கன்னா குடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்கன்னு சொல்லிட்டேன்". முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.

இவன் முகத்தில் உணர்ச்சிகளை இன்றைக்குத்தான் பார்த்தேன்.

"தீபாவளிக்குக் பிறகு நான் வேலைக்கு வர மாட்டேன். ஊருக்கே போயிருவேன், என் தங்கச்சிய வளக்கப்போறேன்" என்றான்.

தீபாவளிக்குப் பிறகு அவனை பார்க்கவில்லை.
This entry was posted on 10/21/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On October 21, 2009 at 9:27 PM , ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்