தற்போது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் ஒரு செய்தி நம்மை மிரட்டுகிறது. மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் சோதனை செய்யப்போகிறதாம் அமெரிக்கா.

முதலில் வருவது கத்தரிக்காய். மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டால் விளை நிலங்கள் பாழாகிவிடுமாம்.

நம் பயிர் செய்யும் முறை விளைந்த பொருட்களில் இருந்து,  அடுத்த விவசாயத்திற்கு விதை நெல், விதை வேர்க்கடலை என்று என்ன பொருள் விளைவித்தோமே அதிலிருந்து நல்ல தானியங்களை பொருக்கி அடுத்த விளைச்சலுக்கு பத்திரப்படுத்திவிட்டுத்தான் (விளைச்சல் குறைவாக இருந்தாலும்) அடுத்த தேவைக்கு விளைபொருட்களை பயன்படுத்துவார்கள் விவசாயிகள்.




ஆனால் மரபணு பயிர்களில் அதெல்லாம் நடக்காது. ஒரு முறை பயிர் செய்தால் அதிலிருந்து அடுத்த விளைச்சலுக்கு விதைகளை எடுக்க முடியாது. திரும்பவும் அமெரிக்காவில் இருந்துதான் வாங்கி பயிர் செய்ய வேண்டும். விதைகள் இல்லாமல் நம் விவசாயம் முறை அழித்தொழிக்கப்படும். நாம் சாப்பிடுவதற்கு அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

விளை நிலங்களின் நிலமையே இப்படியென்றால், அதை சாப்பிடும் நம் கதி.

இந்தியாவின் முக்கியத் தொழில் விவசாயம்.

70களில் கடலைச் செடியில் முதன் முதலில் கம்பளிப் பூச்சி விழுந்தபோது செடிகளெல்லாம் பாழாவதைக் கண்டு கலங்கி நின்றவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
அதன் பிறகு பூச்சி மருந்து என்ற பெயரில் ரசாயன உரங்கள் வந்தன. பூச்சி இல்லாமல் எப்படி மருந்தை வாங்குவார்கள். முதலில் பூச்சியை அனுப்பிவிட்டு பிறகு மருந்தை அனுப்பினார்கள்.

அந்த உரங்கள் நம் உடலையும், விவசாய நிலங்களையும் எப்படியெல்லாம் கெடுக்கிறது என்று இப்போதுதான் உணர்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயிகள் திரும்பவும் பாரம்பரிய விவசாயத்தை நோக்கிச்சென்று விவசாய நிலங்களை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நம்மையும்தான்.

இந்தியாவை ஏன் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. இங்கேதான் வெள்ளையர்களுக்கு சலாம் போடும் அரசியல்வாதிகள், நடப்பதை புரிந்துகொள்ளமுடியாமல் அறியாமையில் இருக்கும் ஜனங்கள் இருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான இடம் என்று தேர்ந்தெடுத்துவிட்டது.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் கையெழுத்து போடும் போது கம்யூனிஸ்ட்கள் ஏதோ போராடியதாக ஞாபகம் (இப்படியெல்லாம் உள்குத்து இருக்கும் என்று சொன்னார்கள்) நமக்குத்தான் அவர்களை பிடிக்காதே, அவர்கள் கிடக்கிறார்கள். விட்டுவிடுவோம்.

அப்புறம் இந்த ஜங்க் ஃபுட் என்று ஒன்று (பீஸா, பர்கர், நூடுல்ஸ் வகையறாக்கள்) உலவுகிறதே. இவற்றை சாப்பிட்டால் கேன்சர் வருமாம்.

என் பையனிடம் கேட்டேன் "ஏண்டா இந்த ஜங்க் ஃபுட் சாப்டா கேன்சர் வருதாம்னு எனக்கே தெரியிதே, இந்த சாஃப்ட்வேர்ல வேல செய்யிறவங்களுக்கு தெரியாதா?" அவன் சொன்னான், "நல்லாத் தெரியும். வேற வழியில்லை." ஏனென்றால் சென்னையில் ஹோட்டல்களில் சாதம் பாதி அளவுதான் வெந்திருக்கும். குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாதத்தை நன்றாக பிசைந்து ரசமோ, மோரோ ஊற்றி சாப்பிட ஆசை இருக்காது. ரசமோ, மோரோ ஊற்றினால் சாதம் இன்னும் விரைத்துக்கொள்ளும். ஒரு வேளை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் பசிக்காது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள், ஜங்க் ஃபுட் பக்கம் போய் விடுகிறார்கள்.

அப்புறம் இந்த அஜினோ மோட்டோ என்று ஒன்று இருக்கிறது. அது எத்தனை விதமான கெடுதிகளை செய்யும் என்று பட்டியலிடுகிறார்கள். அவற்றில் ஒன்று கரு உற்பத்தியே பாதிக்கப்படுமாம்.

டிவியில் விளம்பரம் போடுகிறார்கள், உங்கள் சமையலில் ருசி இல்லையா? அதில் போடுங்கள் அஜினோ மோட்டோ. "எங்கம்மா சமைச்சா மாதிரி ருசியா உனக்கு சமைக்கத் தெரியுதா?" என்கிற கணவன்களை சமாளிக்க நிறைய வீடுகளில் இதை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றியதைப்போல நம்மையும் காப்பாற்றுவார்கள் என்று இருந்து விடுவோமா? அல்லது......
This entry was posted on 10/23/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On October 27, 2009 at 5:08 PM , ISR Selvakumar said...

இந்தப் பதிவுக்கு, அவ்வளவாக கருத்துரை இல்லை கவனித்தீர்களா? நமக்கு இது போன்ற விஷயங்களில் கவனமும் ஆர்வமும் அறிவும் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நல்ல பதிவு!

 
On October 28, 2009 at 4:15 PM , ஜெயந்தி said...

ஆமாம், முதலிலேயே நமக்கு இதெல்லாம் தெரிவதில்லை. அதன் விளைவுகளைச் சந்தித்தபின்தான் அடித்துக்கொள்கிறோம்.
தங்கள் வருகைக்கு நன்றி.